Wednesday, December 23, 2015



உள்ளே போவதற்கு முன்னம்….எனது நூல் “Diary on the nesting behavior of Indian Birds” amazon.in – on line-ல் கிடைக்கிறது. இது ஒரு மாறுபட்ட பறவை புத்தகம். 300 இதுவரை நீங்கள் பார்த்திராத பறவை புகைப்படங்கள்.

காகத்தின் குறும்புத்தனம்



சென்ற வாரம் வழக்கம் போல் செலக்கரச்சலிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த போது, எனது காலனி நுழைவில் வித்தியாசமாக ஒன்றை கண்ணுற்றேன். மின்சாரம் செல்லும் கம்பியில் உயரமாய் மூன்று ஆட்டுக்கால்கள் ஒரு நெகிழியில் தொங்கிக்கொண்டிருந்தன. எப்படி? என நினைத்தபோது காகத்தின் குறும்பாக இருக்கலாமென ஊகித்தேன். இப்படியும் நடக்குமா? எனவும் ஐயமாயிருந்தது. ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியர் அதற்கு விடை பகர்ந்தார். மாடியில் ஒரு சிறுவன் சக்தியற்று இருக்கான் என்று ஆட்டுக்கால் சூப் கொடுக்கலாமென ஆட்டுக்கால் வாங்கி வந்து மாடி சிட் அவுட்டில் வைத்ததை இந்த சில்மிஷ காகம் தான் உண்ணலாமென அத்தனை கணமானதை தூக்கிவந்து, ஒயரில் அமர அந்த நெகிழி மேல் முறுக்கிவிட்ட கம்பியில் மாட்டிக்கொண்டது. காகமும் உண்ணமுடியவில்லை. சவலையான பையனும் சூப் குடிக்கமுடியவில்லை. நீங்களே பாருங்கள்! புகைப்படத்தைப்பார்த்தால் சிரிப்பு வரவில்லையா? எனது வாசகர்ளே!

காகம் மாதிரி குறும்புத்தனத்தையும், தோட்டிவேலை செய்வதையும் பறவையில் பார்ப்பது அரிது. மாட்டின் மீது சவாரி செய்வது, அதன் உடலின் மீது உள்ள பூச்சிகள், காது குடைவது, மற்றும் நீங்கள் புகைப்படத்தில் காண்பது உட்பட……….





















உள்ளே போவதற்கு முன்னம்….எனது நூல் “Diary on the nesting behavior of Indian Birds” amazon.in – on line-ல் கிடைக்கிறது. இது ஒரு மாறுபட்ட பறவை புத்தகம். 300 இதுவரை நீங்கள் பார்த்திராத பறவை புகைப்படங்கள்.
காகத்தின் குறும்புத்தனம்

சென்ற வாரம் வழக்கம் போல் செலக்கரச்சலிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த போது, எனது காலனி நுழைவில் வித்தியாசமாக ஒன்றை கண்ணுற்றேன். மின்சாரம் செல்லும் கம்பியில் உயரமாய் மூன்று ஆட்டுக்கால்கள் ஒரு நெகிழியில் தொங்கிக்கொண்டிருந்தன. எப்படி? என நினைத்தபோது காகத்தின் குறும்பாக இருக்கலாமென ஊகித்தேன். இப்படியும் நடக்குமா? எனவும் ஐயமாயிருந்தது. ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியர் அதற்கு விடை பகர்ந்தார். மாடியில் ஒரு சிறுவன் சக்தியற்று இருக்கான் என்று ஆட்டுக்கால் சூப் கொடுக்கலாமென ஆட்டுக்கால் வாங்கி வந்து மாடி சிட் அவுட்டில் வைத்ததை இந்த சில்மிஷ காகம் தான் உண்ணலாமென அத்தனை கணமானதை தூக்கிவந்து, ஒயரில் அமர அந்த நெகிழி மேல் முறுக்கிவிட்ட கம்பியில் மாட்டிக்கொண்டது. காகமும் உண்ணமுடியவில்லை. சவலையான பையனும் சூப் குடிக்கமுடியவில்லை. நீங்களே பாருங்கள்! புகைப்படத்தைப்பார்த்தால் சிரிப்பு வரவில்லையா? எனது வாசகர்ளே!

Friday, December 18, 2015



நண்பர் TRA எடுத்த படம்
சாவல் குருவி                                                                                           
சாவல் குருவி (அ) கொண்டலாத்தி (அ) எழுத்தாணிக்குருவி என வட்டாரத்குக்கொரு நாமமிட்டு அழைக்கப்படும் இந்தப் பறவையை மக்கள் மரங்கொத்திப் பறவை என நினைக்கின்றனர். இது மரங்கொத்திப்பறவை அல்ல. இது மரங்கொத்தி மரத்தண்டுகளை அணைத்துப்பிடித்துக்கொண்டு, பல ஆயிரம் தடவை அலகினால ‘தட் தட்’என அடித்துப்பட்டைக்கடியிலிருக்கும் பூச்சிளை கிளப்பி நாக்கினால் விசிறி உண்ணாது. இது மண்ணைக்கிளறி புழு, பூச்சிகளைப்பிடித்து உண்ணும். நான் சூலூருக்கு 25 வருஷங்களுக்கு முன்பு குடி வந்த போது, இப்படி இந்த ஊர் பெருத்திருக்கவில்லை. குடியிருப்புப் பகுதியில் இவ்வளவு வீடுகளுமில்லை. அப்போது மதிர் சுவற்றில் ஒரு மழை நீர் வடியும் பிளவு  விட்டிருந்தேன். அது அரையடிக்கு முக்கால் அடியே இருக்கும் தரையொட்டிய பிளவு. அதில் கொண்டலாத்தி மூன்று முட்டைகளை இட்டிருந்தது. மக்கள் முதலில் நினைப்பது பாம்பு முட்டையாக இருக்குமோ என்று தான். வெள்ளை நிறம். இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு எனக்கு பறவைகளைப் பற்றிய விபரங்கள் மிகுதியாகத்தெரியாது.
அந்த மதில் பிளவுக்கு இரண்ட்டி முன்பு ஒரு குல்மோஹர் நாற்று வைத்து, அதைச்சுற்றி மூங்கில் குச்சிகளால் சதுரமாக கூண்டுகட்டி, ஆடுமாடுகளிலிருந்து காப்பாற்றியிருந்தேன். அப்போது என்னிடம் ஒரு அல்சேஷன் நாய் கிராஸ் இருந்தது. அது மூன்று அல்லது நான்கு மாத வயதிலிருந்தது. அது அடிக்கும லூட்டி சொல்லி மாளாது. அதனால் எனக்கு நேரமும் பணமும் விரையமானது பற்றி தனிக்கட்டுரையாக எழுதலாம். அதற்கு பிரவுனி  எனப் பெயரிட்டிருந்தேன். ஒரு முறை வழியில் போன சிறுமியைக்கடித்து வைத்து நான் மருத்துவ செலவுக்காக நஷ்டஈடு கொடுக்க வேண்டியிருந்தது.சங்கலி வாங்கினால் இரண்டு மாதத்தில் ‘பனால்’. தினமும் ரேஷன் சாதம் அரைக்கிலோவுக்கு மேல் உண்ணும். தடுப்பூசிகள் பல தெர்மாஸ் குடுவையில் ஐஸ்-உடன் 20 கி.மீ தாண்டியுள்ள நகரத்திலிருந்து வாங்கி வருவேன். ஒரு முறை பூச்சி மருந்தால் உண்ணிகளைப்போக்க, நாயைக்குளியலிட, நாய் பூச்சி மருந்தை நாவால் நக்கி விட, கால் நடை மருத்துவரிடம் நடத்திக்கொண்டு ஓட, ஹயோ! ஹயோ! ஒரே லூட்டி தான் போங்கள்.
சாவல் குருவி சாலமனுக்கு பறவை மொழிகளை கற்றுக்கொடுத்ததாம். இது தினமும் என் வீட்டைச்சுற்றியுள்ள மரங்களில் ஒன்றினைத் தெரிந்தெடுத்து கிளையலமர்ந்து ‘கூப்…கூப்’ என சப்தித்து என்னைப் பறவையுலகுக்கு இழுக்கும். தன்னைத்தானே சொல்லிக்கொள்கிறதா! இதை வைத்துத் தான் ஆங்கிலேயர் ‘கூப்பே’ என நாமம் சூட்டினரா? இது எதனால் கொண்டையை சுறுக்கி விரிக்கிறது? உணர்ச்சி மேலிட சுறுக்கி விறிக்கிறதா? இது மிக அழகு…… சில சமயம் புல்லாங்குழல் இசைப்பது போலவும் இருக்கும். தற்போது குரல்கள் வைத்தே இது என்ன பறவை  எனச் சொலவேன். இறைவன் ஒவ்வொரு பறவைக்கும் ஒரு குரலமைத்துள்ளது இனிமை. குரல் என ஒன்றில்லையானால் ஊமைதான்.
            வரிக்குதிரை போல, வெள்ளைக் கோடும், கருப்புக்கோடும், பழுப்பு நிறமும், விசிறி போல கொண்டையும், ஒடுங்கிய  உடம்பும், கருப்பில் சன்னமாக வளைந்த அலகும், திரும்பத்திரும்ப பார்க்க வைக்கும். இது வளைந்து, வளைந்து பறக்கும் பாங்கு அருமை.. இவை புல் வெளிகளிலும், பூங்காவிலும், தோட்டங்களிலும் விருப்பம் கொண்டது. அவ்விடங்களில் பூச்சி, கூட்டுப்புழு, வண்டு என கிடைப்பதும் ஒரு சவுகர்யம்.
            சாவல் குருவி புத்திசாலி, நண்பர் TRA சொன்னது. சத்தியமங்கலத்தில் ஒரு வீட்டினுள் தப்பித்தவறி வந்த சாவல் குருவியை அந்த வீட்டார் பாது காத்து வந்தனர். சில நாளில் இணை சாவல் குருவி எப்படீயோ இருப்பிடத்தைக்கண்டுபிடித்து ஐன்னல் வழியே கண்டு, அமர்ந்து குரல் கொடுத்து கூட்டிக்கொண்டே சென்று விட்டது. பறவைகளின் குரலைப்பதிவு செய்து அதன் ஏற்ற இறக்கங்களை நீட்டிக்குறைத்து, புது ராகங்களைக்கண்டு பிடிக்கலாம். பறவை ஒவ்வொரு இனமும், ஒரு ராகத்தில் பாடுது. இவை குரல் கொடுப்பது இணையை அழைக்க, எச்சரிக்க, பயத்தை, சந்தோஷத்தை, ஆத்திரத்தை வெளிப்படுத்த பயன் படுத்துகிறது. அழைக்க, நீண்ட குரல் கொடுக்கிறது. பயத்தைக்குறைவாகவும், அழுத்தமாகவும் குரல் கொடுக்கும். இப்படி அதற்கும் பாஷையுண்டு.
            பறவைகளுக்கு குறைந்த பட்ச பரிபாஷை இருந்தால் போதுமானதாக உள்ளது. பெண்கள் மாதிரி வழவழ எனப்பேசிக்கொண்டே இருக்கத்தேவையில்லை அல்லவா! இதில் கதிர் குருவிகள் (Warblers) விதிவிலக்கு. உண்ணிப்பாக கவனித்தால் பறவைகள் எதற்காக குரல் கொடுத்தன என அறிய முடியும். மேலும் குரல்கள் எழுப்புவதால், அலகுக்குள் பிராணவாயு சென்று, உடம்பு பறக்க ஏதுவாகிறது. ஆட்காட்டிப்பறவை இடையூரை அறிவிக்க எல்லாப்பறவைகளுக்கும் எச்சரித்து விடும். அதன் குணம் அது. கழுகுகளுக்கு விசில் ஒலி. உயர வானில் பறந்தவாறும், உயரக்கிளைகளில் அமர்ந்தவாறும், ஒலி எழுப்பினால் தான் இணைக்கு அல்லது குழுவுக்கு கேட்க முடுயும்.
            கொக்கரக்கோ எனச்சேவல் கத்துவது பற்றிஒரு பட்டிமன்ற அன்பர் சொன்னது. கோ=என்றால் முருகன் (அ) அரசன் (அ)தலைவன். அரக்கு= எனில் மாமரம். ரக்கோ= என்றால் பிளந்தது.மாமரமாக மாறிய சூரபத்மனை இரண்டாகப்பிளந்தது. இனி மக்கட்குத்துன்பமில்லை. இதோ! காலைச்சூரியன் வந்து விட்டான். கோ= முதல்வன். துன்பங்கள் அழிந்தொழியும் எனச்சேவல்கள் அதிகாலையில் கொக்கரக்கோ என முகமன் கூறி மக்களைத்துயில் எழுப்புகின்றன. இந்த ஒலி பிராய்லர் கோழி மரபணுவின் கூட பதிந்துற்றது. நான் அதிகாலை சூலூர் பேருந்து நிலையத்துக்கு நடந்த போது, ஒரு கோழிக்கடை வந்தது. அங்கிருந்த கோழிக்கூண்டிலிருந்து  காலை 05.15 மணிக்கு கொக்கரக்கோ என ஒரு பிராய்லர் கோழி ஒலி எழுப்பியது விந்தையாக  இருந்ததது.
            கிளிகள் இனம் பழக்கினால் சரியாகப்பேசி ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். மைனா கூடப்பேசும். அதன் நாக்கில் வசம்பு தடவத்தடவ நாக்குரிந்து, லேசாகி, பழக்கினால் பேசும். விசிலடிக்கும். பன்னிரு திருமுறையில்
‘ஆடு மயில் அகவும் நாடன்’
‘கான மஞ்ஞை கடிய ஏங்கும்’
‘மீன் ஆர் குருகின் கானல் அம் பெருந்தறை
வெள் வீத்தாழை திரை அலை
நள்ளென கங்குலும் கேட்கும், நின் குரலே?’
            பிரணாயாமாவில் காகப்பிராணா செய்தால் காகம் மாதிரி உடல் லேசாகும். குரல் இனிமை கிடைக்கும்.
            மீண்டும் எனது வீட்டு மதில் சுவர் மழை நீர் வடிப்பிளவில் மூன்று வெள்ளை முட்டைக்கு வருவோம். இருபது வருஷம் முன்பு அக்கம்பக்கம் வீடுகளும் இல்லை. சாவல் குருவி திடீரென அந்த மதில் ஓட்டையிலிருந்து பறக்கும். எனக்கு அப்போது ஒன்றும் விளங்கவில்லை. அடை காக்க அவ்வப்போது வந்து போகிறது எனத்தெரியவில்லை. சாவல் குருவி குரல் எனக்குப்பிடித்தமானது. சமீபகாலமாக, எனது கவிதைகளுக்கு நான் ராகம் (ட்யூன்) போட ஆரம்பித்தேன். வீட்டில் மிருதங்கம், தாளம், ஸ்ருதிப்பெட்டி உள்ளது. கீ போர்டு வாங்கினால் போதும். ஒரு இசைக்குழு ஆரம்பிக்கலாம். குழுவுக்கு இசை ஆர்வம் உள்ள அன்பர்கள் தேவை. சாவல் குருவி எனது கவிதைக்கு அடியெடுத்துக் கொடுக்க நான் இப்படிப்பாடினேன்.
            கூப்…..கூப்…….கூப்……. எனப்பாடியே
                                                       எனை மயக்கியது நியாயமா
            கூப்…..கூப்….கூப்…….    இந்த ராகத்தை யாருனக்குச்சொல்லியதோ….
                                                       கவிதை வரிகளும்
                                                       காற்றினில் அலையுதா….
                                                       இசைக்குறிப்புகளும்
                                                       இலைகளில் தொங்குதா?
            கூப்….கூப்…கூப்…….       மழைத்துளிகளும்
                                                       சலங்கையொலி கூட்டுதா…..
                                                       மூங்கில்களும்
                                                       குரலிசைக்குதா…?…..
                                                                                                                                                11      
 கூப்…..கூப்…..கூப்….                       கொண்டலாத்தியே…!
                                                            உன்னிசையைத்தருவாயா?
                                                            நானும் கற்றுத்தான்
                                                            பெம்மானை இசைப்பேனே…..
            சூலூர் குளத்தின் ஏரிமேட்டில் போகும் போது, என் பறவை குருநாதர் டாக்டர் ரத்தினத்துக்கு பாடிக்காட்டினேன். அவரிடம் பாராட்டு வாங்குவது மிக்ககடினம். நன்றாக இருக்கறது எனப் பாராட்டினார். அலுவலகத்தில் பாடும் திறமையுடைய நண்பர் தினகரன் ஓய்வு பெறும் போது பிரிவு உபச்சார விழாவில் சாவல் குருவி இசை பாடல் பாடி எல்லோர் பாராட்டுதலும் பெற்றேன்.இது போல பல பாடல்கள் உள. நான் இதை எப்போது ‘சிடி’ யாகப்போடுவது. அதை நீங்கள் எப்போது கேட்பது? இதற்கு இசை நிரப்ப யாராவது வருவீரா?
            நாய்க்கு மோப்ப சக்தி அதிகம். ஒரு நாள் எனது ரளொடி நாயை வீட்டைச்சுற்றி நடை பயில விடும் போது, காலை வேளையில், செயினோடு என்னை இழுத்துக்கொண்டோடி மதில் சுவர் ஓட்டையினுள் இருந்த மூன்று முட்டைகளையும் கபளீகரம் செய்தது. வெண்கரு வாயலிருந்து ஒழுக, ஒழுக கடித்து நக்கி, நாக்கைச்சுழற்றிமுழுங்கி விட்டது. இது திடும்மென கண நேரத்திதல் நிகழ்ந்து விட்டது. என் செய்வது? இன்னும் என் மனதை அரித்துக்கொண்டிருக்கிறது.
            பிள்ளையை இழந்த தாய் போல இரண்டு மூன்று தினங்கள் சாவல் குருவி ஒன்று, மதில் பொந்தைப்பார்த்தவாறு சோகமாக குல்மோஹர் கூண்டில் சிறிது நேரம் அமரும். பிறகு பறந்து விடும். முட்டையைக்காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கம் இன்றும் எனக்குண்டு. சாவல் குருவியில் ஆண், பெண் இனம் பிரித்துச்சொல்வது கடினம். ஒன்று போலவே இருக்கும். பெரும்பாலும் தாய்ப்பறவை தான் அடைகாப்பதும், வளர்ப்பதும், குஞ்சுகளின் மேல் பாசமாக இருப்பதும் அதுவே.குல்மோஹர் மரக்கூண்டில் அமர்ந்திருக்கும் போது தாய் சாவல் குருவியின் சோகம், அது திரும்பத்திரும்ப மதில் பொந்தைப்பார்த்த பார்வையும் என்னை வாட்டியது. நான் அசிருத்தையாக இருந்து விட்டேனோ! புரவுனி எதையும் உண்டு விடும். அது விவஸ்தை கெட்ட நாய். அதன் லூட்டி பொருக்க முடியாமல் ரூ. 500-க்கு வாங்கியிருந்தாலும், ஒரு வருஷமாக அதன் ‘லொள்ளு’ தாங்க முடியாமல் ஒரு தோட்டச்சாளைக்கு இனமாகக் கொடுத்துவிட்டேன். அதுவும் என்னை விட்டுப்பிரிகிறேனே என்ற சோகம் இல்லாமல் ‘டெம்போ’வில் ஏறி ஜாலியாகச்சென்று விட்டது.






Saturday, November 28, 2015


புள்ளி ஆந்தைக்கு ஆபத்து     Bird rescue





                ஆடி 18, 2014(ஆகஸ்ட்-3) அன்று ஆடி அமாவாசை, அம்மாவும், தம்பியும் என்னை, மேற்கே உள்ள இராமநாதபுரம் வீட்டில், அம்மாவாசை படையல் இட்டுக்கும்பிட வருமாறு அழைத்திருந்தனர். கீதா மகள் வசிக்கும் அரக்கோணம் சென்றிருந்தாள். மணி பதினொன்று இருக்கும். நல்ல வெளிச்சமான கதிரவன். பேருந்து நிலையம் செல்ல நடந்து போய்க்கொண்டிருந்தேன்.
            அலைபேசிக்க்கடையைத்தாண்டிய திருப்பத்தில் ஒரு புள்ளி ஆந்தை மின் கம்பியில் மாட்டித்தவித்துக்கொண்டிருந்தது. நான் இதைக்காலையில் (ஞாயிறு) ஏழு மணிக்கு பறவை நோக்கலுக்குப் போகும் போது பார்த்தேன். அந்த இடம் வீடுகளுக்கு நடுவே ஒரு அரை ஏக்கர் பரப்பளவு கொண்ட வெற்று பூமி. அங்கு சாணிக்குவியல் இருக்கும். கடைக்கோடியில் தில்லி முட்புதர்கள். இந்த அரை ஏக்கர் நிலத்தைச்சுற்றி வீடுகளுக்குச்செல்லும் மின்சாரக்கம்பிகள். ஒன்றிரண்டு வேம்பு மரங்கள்.
            இந்த மாதிரியான இடத்துக்கு காலை, மாலை பல பறவைகள் வரும். சாணியில் புழு, பூச்சிகள் கிடைக்கும். வெற்று நிலத்தைக்கிளறினாலும் சில இரைகள் கிடைக்கும். அதனால் பல பறவைகள் அங்கு வருவது வியப்புக்குரியதல்ல. கரிச்சான், கொண்டலாத்தி, புள்ளிதினைக்குருவி, சிட்டுக்குருவி, வெண்மார்புமீன் கொத்தி, மைனா,காகம், வலசைப்பருவத்தின் தாம்பாடிகள் சில சமயம் ஆந்தை, மாட்டுக்கொக்கு, புதர்க்குருவி என வரும். அன்று காலை செல்லும் போது ஒரு புள்ளி ஆந்தை, தினைக்குருவிகள், சிட்டுக்குருவி, கரிச்சான் என சில பார்த்தேன். நான் அன்று, பெட்ரோல் அடித்துவிட்டு, குளத்தின் வடக்கு ஏரி மேட்டில் நடையுடன் கூடிய பறவை நோக்கல் செய்தேன்.
            மீண்டும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த புள்ளி ஆந்தைக்கு வருவோம். அது இளைஞனாக இருக்க வேண்டும். அந்தப்பறவை அருகில் இரண்டு கம்பிகள் இணைக்கும் ‘ப’ வடிவக்கம்பி சந்திப்பில் கெட்டியான நூலில் சிக்குண்டிருந்தது. நான், அலைபேசிக்காமெராவில் பதிவு செய்துவிட்டு, இதை எப்படிக்காப்பாற்றுவது என யோசித்தேன். முதலில் மின்சாரம் தாக்கி விட்டதோ என நினைத்தேன். இல்லையே! அது தவித்துக்கொண்டிருந்தது. எதிர் வீட்டில் கம்பு கேட்கலாமெனில், இரு வீட்டில் யாரும் தென்படவில்லை. கம்பு இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது.
            அப்போது ஒரு 18 வயது மதிக்கத்தக்க பையனும், பத்து வயது மதிக்கத்தக்க பையனும் வந்தார்கள்.
என்ன பாத்துட்டிருக்கீங்க?
கண்ணாடி போட்டிருக்கே! என்ன பாத்துட்டிருக்கேன்னு தெரியலையா?
இது என்னங்க?
                                                                                                                                                2
ஆந்தை. சரி! உங்க வீடு எங்கே?
அங்கே.
வா! ஒரு கம்பு எடுத்திட்டு வரலாம்.
அவர்கள் வீட்டுக்குச்சென்றேன். இரும்பு நுழைவாயில் கதவு தென் புறத்தோட்டத்தில் நாய் உலைத்தது. அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர், ஆசிரியை. வரவேற்றனர்.ஒரு பிளாஸ்டிக் மின் கம்பிக்கு உறை போடும் பைப் கிடைக்க, அதைத்தூக்கிக்கொண்டு, விபத்து இடத்துக்கு வந்தேன்.
மூன்று கெட்டி நூல்கள், ஆந்தையைப்பிணைத்திருந்தன.கம்பியில் அமர்ந்திருந்த ஆந்தை மெதுவாக நகர, நூல் காலில் மாட்டிக் கொள்ள, அதை உதற, சுழன்று போய் உடம்பில் சுற்றி விட்டது போலும். பிளாஸ்டிக் பைப் காற்றில் ஆடியது. நூல் ஆந்தையின் கழுத்தை இறுக்கிவிடுமோ என்ற பயத்தில், எப்படியோ, கஷ்டப்பட்டு ஒரு நூலை அறுத்தேன்.
            PVC  20 அடி உயரக்கம்பு காற்றுக்கு ஆடியதால் மீண்டும் ‘கவட்டி’ யுள்ள கம்பு கிடைக்குமா என ஆசிரியர் வீட்டுக்குச் சென்றேன். கூட இரு சிறுவரும் வந்தனர். சிறு ‘கவட்டி’ உள்ள ஒரு கம்பு, அதில் இன்னொரு கம்பு கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்தது. அதைத் தூக்கிக்கொண்டு, மீண்டும் விபத்து இடத்துக்கு வந்தேன். ‘கவட்டி’யில் நூலை சிக்க வைத்து, அதை அறுக்க முயற்சித்து, முயற்சித்துத்தோற்றேன். இணைத்திருந்த கம்புகள் முன்னும் பின்னும் நழுவி ஆடின. குண்டான ஆசிரியர், அந்தக்கம்புகளை இறுக்கிக்கட்டினார்.
            மீண்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது, பிரபாகரன். குடும்ப நண்பர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் கம்பை வாங்கி, முயற்சியில் ஈடுபட்டார். இரண்டு நூல்களில் மட்டுமே புள்ளி ஆந்தை தொங்கிப்போராடிக்கொண்டிருந்த்து. கழுத்து இறுக்கப்படாமல் ஆந்தை நூலைக்காலால் தடுத்திருந்தது, அதன் அறிவை உணர முடிந்தது. இதை குண்டாசிரியர் சிலாகித்தார். மேலும்
‘மின்சார இலாகாவிற்கு போன் செய்து மின் இணைப்பை துண்டிக்கலாம்’ என்றார்.
 ‘அது நடக்காது’ என்றேன்.
பிரபாகரன் இரண்டு நூல்களை அறுத்து வெற்றி பெற்றார். ஆந்தை கழுத்து இறுகாமல் தப்பித்தது. இதில் இன்னொரு சிக்கல் இருந்தது. மின்சாரம் தாக்கி விடுமோ என பயமிருந்தது. ஆனால்அதி மின்கடத்தும் ஒயரில்லை.மேலும் PVC பைப் கம்பு, பிறகு மூங்கில் கம்பு, இவை தவிர செருப்பு அணிந்திருந்தேன். விடுபட்ட ஆந்தை கிழக்குப்புறமாக, இருந்த வேப்ப மரங்களுக்கு அருகில் பறந்து, தரையின் நிழலில் அமர்ந்தது.
             நாங்கள் ஓடிப்போய் அதன் அருகில் சென்று நின்றோம். பிரபாகரன் கையில் எடுத்தார். ‘கழுத்தில் நூல் சுற்றியிருக்கா, பாருங்க!’ என்றேன்.
‘ இல்லே. நூல் சுற்றலே’ என்றார் பிரபாகரன்.
           
                                                                                                                                                3
ஆந்தை கண்கள் சுற்றிலும் மஞ்சள், நடுவில் கருப்பு. உடல் பழுப்பு மற்றும் புள்ளிகள். அரையடி இருக்கும். புள்ளி ஆந்தையை ஏராளமான முறை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். இது எங்கள் காலனியில் அடிக்கடி பார்க்கலாம். ‘கிர்ரிக், கிர்ரிக்’ என ரசிக்க முடியாத ஒலி எழுப்பி என் இல்லத்து அருகிலிருக்கும் ஒயரின் இருளில் அமர்ந்திருக்கும். தெரு விளக்கு வெளிச்சத்துக்குக்கீழ் முன்னும் பின்னும் பறக்கும் பூச்சிகளை குறுக்குமறுக்கும் பறந்து பிடித்து ஒயரில் அமர்ந்து உண்ணும். இவை மரப்பொந்துகள், கிணற்றுப்பொந்துகள் போன்ற இடங்களில் ஏழு, எட்டு என குடும்ப உறுப்பினர்களோடு இருக்கும், அல்லது ஜோடியாக இருக்கும். இதன் உணவு எலி, வெட்டுக்கிளி, தவளை. உழவர்களுக்குத்தோழன். ஒரு நாளைக்கு ஒரு எலியாவது வேண்டும். குண்டு ஆசிரியர் ஓய்வு பெற்றவர்,
‘ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது,பழவகைகள் சாப்பிடும்’ என்று என்னிடம் சொன்னார்.
நான், ‘கிடையாது’ எனச்சொன்னதை அவர் நம்பவில்லை. புள்ளி ஆந்தையை விடுவித்ததை, யுவன்கள் விடியோ, மற்றும் புகைப்படம் எடுத்தனர்.
பத்து வயதுப் பையன் சற்று பயந்தவாறு, ‘ தொட்டுப்பார்க்கட்டுமா?’ என,
 ‘தொடு’ என்றார் பிரபாகரன்.
அவன் புள்ளி ஆந்தையை வாங்கினான். அவன் கண்களில் வியப்பு கலந்த மகிழ்ச்சி. விரலில் தடவிக்கொடுத்தான். ஆந்தை களைப்பாகவும், நடுக்கத்துடனும் இருந்த்து. அது பறக்கும் தெம்பில் இல்லை. ‘தண்ணி கொடுக்கலாம்.’ எனப்பிரபாகரன் சொல்ல 18 வயதுப்பையன் விரைந்து போய் நீர் கொண்டு வந்தான். புள்ளி ஆந்தைக்கு உள்ளங்கையில் நீர் ஊற்றித்தந்தார் பிரபாகரன்.
            18 வயது, 10 வயதுப்பையன்கள் ஆந்தைகளைப்பெற்றுக்கொண்டனர்.
 ‘ஆந்தை, களைப்பும், பயமும் தெளிஞ்ச பிறகு பறக்க விடலாம்’ என ஆசிரியர் சொல்ல,
நான், ஆமா, அப்படியே செய்யுங்க’ என்றேன்.
            தம்பிகளே! பெயரென்ன?
அரவிந்த-18 வயது, பிரவின் 10 வயது.
‘அரவிந்த் போகும் போது, உங்களுக்குத்தான் கிரடிட். நீங்க தானே பறவை ஆபத்திலிருந்ததை முதலில் பாத்திங்க. நீங்க பிரஸ்சா?
‘ அட! நா எதுவுமில்லே’
            இரண்டு நாட்களுக்குப்பிறகு, ஆசிரியரைப்பார்த்து, ‘ ஆந்தை பறந்து போச்சா? என ஆவலுடன் கேட்டேன்.
            ‘ஆந்தை வீட்டுக்குள்ளார வரக்கூடாதுன்னு பொண்டாட்டி சொல்லீட்டா. நாங்க வேப்ப மரத்துலகொண்டு போய் விட்டுட்டோம்.’

தினமும் ஒரு எலியாவது பிடித்து உண்டு, விவசாயிக்குத்தோழனாக இருக்கும் ஜீவனை வெறுக்கும் மக்கள் எப்பேர்பட்ட மூடநம்பிக்கையில் இருக்கிறார்கள் பாருங்கள்! இது எப்போது விலகுவது?

Tuesday, November 3, 2015

என்னெதிரே ஒற்றை இருக்கையில்..............

































என்னெதிரே ஒற்றை இருக்கையில்
நான் இசைத்த பாடலைப் பாடும் உனக்கு,
உயிரை உறிஞ்சும் குரல் வளமை;
விரல் நயனங்களும், புருவ ஏற்ற இறக்கமும்
உதட்டுச்சுழிவும், கண்களின் உயிர்ப்பும்
பாடும் பாவமும், சொல்லாமல் சொல்லும்
உனது ரசிப்பை; அபரிமித ரசனையை;
எனது இசைக்கு மேலும் உயிர்ப்பானாய்
தென்னம் பாளையென பற்களின் ஒளிர்வும்
ஓ! நாக்கில் ஊறிவரும் எனது பாடலும்
என்னவென்று சொல்வேன்! தோழி!
இதுவே நமது கடைசி சந்திப்பா?
இந்த உடலான இசைக்கு
உன் உயிர் கலந்த குரல் உயிர்ப்பூட்டும்
தேனும், கற்கண்டும் கலந்த கலவை-இது
தெவிட்ட ஞாயமில்லை! தோழி!
மேலும் சந்திபோம் என்பதில்லாத போது
இந்த இனிமையான பாடல் ரீங்காரமிடும்
என்னைச்சுற்றிஉன் நினைவுகளைப்போல…………….சின்ன சாத்தன்


Sunday, October 18, 2015




 இயற்கை விரும்பிகள்
அன்பழகன் (தம்பி)


பார்த்தசாரதி( அண்ணன்)
இயற்கை விரும்பிகள்
பார்த்தசாரதியும், அன்பழனும் சகோதரரர்கள். இருவரும் போத்தனூர் எல்லை தாண்டிய ஒரு அத்துவானக்காட்டுக்குள் ஒரு க்ரில் வொர்க் சாப் வைத்துள்ளனர். எளிமையான வாழ்க்கை வாழும் இந்த சகோதரர்களை சந்திக்க வைத்தது இறைவன். நண்பர் துரை பாஸ்கர் மூலமாக….அமைதியான வாழ்க்கையைத்தேர்ந்தெடுத்து மகிழ்ந்தவாறு இருக்கும், இவர்களைப்பார்த்து வியக்காமல் என்ன செய்ய! வனத்துக்குள் இளமைப்பருவத்திலேயே சுற்றித்திளைத்துள்ளனர். இருவரும் 35 வயதுக்குள் தாம் இருப்பர். விரிந்த கண்களுடன் வனப்பயண அனுபவங்களை விவரிக்கின்றனர். நாங்கள் நாற்காலியில், ஆதவன் ஆரஞ்சு நிறத்துக்குப் போன போது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ரேசன் அரிசி வாங்கி தங்கள் வொர்க் சாப் முன்புறம் இட்டு பறவைகள் உண்டு மகிழும் அழகைப்பார்த்து ரசிக்கும் இளம் சகோதரர்களைப்பார்த்து வியக்காமல் என்ன செய்யச்சொல்கிறீர்கள்? மயில், காடை, கொளதாரி, வானம்பாடிக்குருவிகள், புறா, காகம், அண்டங்காகம் வந்து அரிசிகளைப்பொருக்கியவாறு இருப்பதைப்பார்த்த கணங்களை லகுவாக்கிப்போகின்றன.
சில வேளைகளில் எலி கூட அரிசி கொரிக்க வருகிறது. உடும்பும் பாம்பும் வருகிறது. நாங்கள் வொர்க் சாப் உள்ளே மறைந்து பார்த்தால் ஆஹா…! பனங்காடை, கீச்சான், வெண்தொண்டை முனியா, கரிச்சான் என திக்கு முக்காடவைக்கின்றன. இது தான் உண்மையான பறவை நோக்கல். பறவை என்னை நோக்கி வரவேண்டும். ஒரு பக்கம் அமர்ந்து கண்ணுற்று மகிழ வேண்டும். பறவைகளைத்துரத்திக்கொண்டு போவது அபத்தம். எத்தனை விதமான புகைப்படங்கள் வேண்டும், தோழியே! இதோ! உன்னைக்கூட அவ்வளவு படங்கள் எடுக்க மாட்டேன். இதோ! என் முன்னே அழகு தேவதைகள்! இறக்கை முளைத்த தேவதைகள். சந்தடியற்ற வெட்டவெளி. சமீபத்திய மழை மண்ணுக்கு பச்சைக்கம்பளம் போர்த்தியிருந்தது. குழுகுழவாக வந்து போனவைகளுக்கு கொஞ்சம் அச்சம் தாம். நாங்கள் புதியவர்கள். சகோதரர்களுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உண்டு. இவர்கள் எங்களுக்கு சளைத்தவர்களல்ல. கொண்டு போயிருந்த 10 மரநாற்றுகள் வைத்து வளர்த்த ஆர்வத்துடன் ஒத்துக்கொண்டனர். மீண்டும் செல்ல வேண்டுமெனவும், கொளதாரியைப்படம் எடுக்கவும் ஆவல். இது அவ்வளவு சாமான்யமாக படத்துக்கு நிற்காது. இதுவரை இதை அம்சமாகப்புகைப்படம் எடுக்க முடியாது போகிறது. அடுத்த முறை வெல்லலாம்.

Tuesday, October 13, 2015

இராமநாதபுரத்தில் தம்பியோடு வசிக்கும் அம்மா குடை எடுத்துப்போகச்சொன்னாள், ஆனால் அதை அசட்டை செய்தவன் மழையில் நனைந்து காளான் விடைத்தது போல ஆனேன். சூலூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவன் நான் வசிக்கும் வீடு 15 நிமிசத்தில் போக வேண்டியது, இரண்டு மணிப்பொழுது ஆனது. அப்போது மழை கவனிப்பு என்னை மகிழ்வில் ஆழ்த்தியது.  எத்தனை பேர் மழையை வசை பாடியபடி இருந்தீர்கள்? ஓ! மக்களே! காய் கறிச்சாறு அருந்த, ஒரு கடையில் அமர்ந்தவன், சுண்டலும் உண்டவாறு பையிலிருந்த ஒரு காகித்த்தை எடுத்து கவிதை எழுத, நேரம் போனது தெரியவில்லை. பெருத்த மழை, தூரல் மழையாக மாற, சாலையில் நடந்தவாறு எழுதிய தமிழ் மழைக்கவிதையை பாடியபடி இல்லம் சேர்ந்தேன். இதோ! தமிழ் மழையில் நனையுங்கள்!

மழை நீர் வடித்தவை குழாய்களல்ல
அவை நீர் வீழ்ச்சிகள்
சாலையில் எழும்பியவை மழைத்துளிகளல்ல
அவை காதலி முத்தமிட்டுச்சிலிர்த்த மயிர்க்கால்கள்
மழை சாடியவை சவுக்கடிகளல்ல
அவை மத்தளம் வாசிக்கும் கோல்கள்
சாலையில் ஓடுயவை மழைக்கோடுகளல்ல
அவை விளையாடும் சிறார்கள்
சாலையோரம் நெழிந்தவை வெறும் நீரல்ல
அவை உயிர்ப்பிக்கும் அமுத தாரைகள்
சாலையில் புடைத்தவை மழைக்கொப்பளங்களல்ல
அவை அரிசியிட்ட பானையின் கொதிப்புகள்
சாலையில் வீழ்ந்தவை மழைக்கோடுகளல்ல





அவை விளையாடும் சிறார்கள்
மழைக்காற்றால் சிலிர்த்தவை மேனிமட்டுமல்ல
மழை கோதிவிட்ட கேசரங்களும்
அத்தோடு மழையிலாடும் இலைகளும் தாம்…….
எங்கும் அணைத்தவை குளிர் கரங்கள்
மழையை வாழ்த்தியபடி, அதை அனுபவித்த படி
ஒதுங்கிய கடையோரம் கவிதை பாடினேன் தமிழை
தேநீர் அருந்தியபடி………………………………….
நீங்களும் தமிழ் மழையில் நனையட்டுமேயென


                                                                        சின்ன சாத்தன்.

Monday, September 21, 2015

பிரிவின் துயரம்



வாலிபப்பருவத்தில் நான் வாழ்ந்த வீடு


               பனிரெண்டு செப்டம்பர் 2015-ன் மாலைப்பொழுதில் சரியாக 7.35 மணிக்கு எனது தந்தையின் உயிர் பிரிந்து எங்கோ சென்றது. அனைவரும், பேத்தி, பிதுர்களனைவரும் சூழ தேவாரம், சக்தி அகவல் பாடி, ஹர, ஹர (ஹரிஅரன்) முழங்க உடலிலிருந்து ஆன்மா வாய்வழியாகப்பிரிந்து போனது. எனது தந்தை ஒரு நல்ல மனிதர். கர்ம யோகி. ஒழுக்கமுள்ள நெறியாளர். எப்போதும் வேட்டி, ஆபாரம் எனும் முழுக்கை சட்டை அணிவார். வெற்றிலை பாக்கு கூடப்போடாதவர். காலத்தே காரியமாற்றுவார். பங்கஜா மில்லில் அட்டெண்டராகச்சேர்ந்து டைம் கீப்பர் ஆனவர். எந்தத் தொழிலையும் உன்னிப்பாக கவனித்து செம்மையாக முடிப்பார். மில்லில் ESI, PF, காசியர், மில்லின் கல்யாண மண்டபம் மற்றும் குடியிருப்பு பொறுப்பாளர் என சகல வேலையும் ஏற்றுச்செய்த கடின உழைப்பாளர்.
            
              மில் பல வருஷம் ஓடாத போது விவசாயம், அதற்கு முன்பு சகோதரர்களோடு ஹோட்டல் வைத்து நடத்தியவர். ஓய்வு பெற்றபின்பு கூட பிளாஸ்டிக் தொழில்,கட்டிடகட்டுமானம், பார்சல் சர்விஸ், எண்பது வயதுக்குப்பின்பு கூட ஒரு ரூபாய் காய்ன் இரண்டு பூத் என அயராது பணி செய்தும் அவரைச் செல்வம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பெரிய குடும்ப பாரத்தைச்சுமந்து அதில் காசு, பணம் செலவழிந்து போனது. தனக்கெனவும், தன் குடும்பத்துக்கு எனவும் சேமிக்க முடியவில்லை. யாவருக்கும் கொடுத்து சந்தோஷப்படுத்திப்பார்ப்பவர். அவர் எனது தம்பியோடு வசித்தார். நான் 15 கிமீ கிழக்கில் இருந்ததால் சொந்த ஊரைவிட்டு அவர் வர விருப்பப்படவில்லை.
             
            அவர்கடைசி காலங்களில் தினமும் சூலூரிலிருந்து நான் ராமநாதபுரம், சென்று அவர் நலன்களை கவனித்து வருவேன். மாத்திரைகளும், மாதமானால் ஒரு தொகையும் தந்து அவரை நல்ல முறையில் பார்த்துக் கொள்வேன். கோயம்புத்தூர் பங்கஜா மில்லின் மைதானத்துக்குள் மாலை நேரம் உலாவப்போய்விடுவேன். அதற்குத் தென்புறம் லைன் வீடுகளாக குசவன் ஓட்டில் வேய்த குவார்ட்டர்ஸ் வீடுகள் இருபது இருக்கும். அதில் இரண்டாவது லைனில் கடைசிக்கு முந்திய வீட்டிலும், அதே லைனில் முதல் வீட்டுக்கு இரண்டாவது வீட்டிலும் மாறி,மாறி எனது வாலிபப்பருவத்தில் தந்தையோடு இருந்தேன். இப்போது மில் நஷ்டத்தில் இயங்கியதால் பராமரிப்பு இல்லாமல் சிதலமாகி கிடக்கிறது.

           மைதானத்தில் உலாவும் போது கவுதாரி, மைனா, காகம், வாலாட்டிக்குருவி, கருப்பு, பிரவுன், பிரவுன்வெள்ளைக்குதிரை மூன்றினைப்பார்ப்பேன். மேற்குப்புறத்தில் மாடுகள் கட்டியிருப்பர். அந்தி சாயும் பொழுது கரி பூசிக்கொள்ளும் வானத்தில் பழம் திண்ணி வெளவால்கள் சாய்ந்த கோட்டில் பறந்து வரும் அழகையும், ஆதவனின் அன்றைய நாளின் கடைசி நிமிடங்கள் போடும் வண்ண ஜாலங்களையும், ஒற்றையாக நிற்கும் தென்னை மரத்தின் கரிய நிழலையும் பார்த்து ரசிப்பேன்.                         …………தொடரும்

Thursday, August 13, 2015

தொங்கநாதன்…..3





             அதிகாலையில் எழுந்ததும் அலைபேசியைப்பார்த்தபோது மணி 05.30. செலக்கரிச்சல் பழனிக்கவுண்டர் சொல்வது போல மொகுல் (கருப்பு மேகம்) வானத்தை அடைத்திருந்தது. சில சமயம் மழைத்தூறல் போட்டது. தெருக்கடையில், காய்கறி ரசம் சூடாக அருந்தி விட்டு ஸ்கூட்டரில் பறந்தேன். செலக்கரிச்சல் இதோ பார் எனத்தெரிய, நிறைய கருப்புக்கிரீட வானம்பாடிக்குருவிகள் உயரே சிறிது தாழ்ந்தும் எழுந்தும் பறந்ததை வைத்தே கண்டுபிடித்து ஆனந்தப்பட்டேன். குளிரில் நெருக்கியடித்து, காதல் ஜோடி போல கொண்டைக்கருவிகள் மின் கம்பியில் அமர்ந்திருந்தைப்பார்த்து பொறாமையாக இருந்தது.பழனிக்கவுண்டருக்கு 86 வயது.மனைவியை இழந்தவர். அவர் ஓட்டு வீட்டின் முன்பு நின்று கைவைத்த பனியன், வேட்டியில் இருந்தவரை வண்டியில் ஏற்றிக்கொண்டு, புளிய மரத்துப்பாளையம் பாதையில் போனேன். சோளத்தட்டுகள் அறுக்கப்பட்டு கூம்புகள் போட்டு விட்டனர். கிணற்றில் எட்டிப்பார்த்தால், பத்து கூடுகளும் தொங்கநாதன் சுவடே இல்லாமல் காற்றில் தொங்கிக்கொண்டிருந்தன. புள்ளிஆந்தை மட்டும் கிணற்று பொந்துக்குள் இருந்து உற்றுப்பார்த்தது. மயில் கூட்டைத்தேடி ஒற்றையடிப்பாதையில் வண்டியை உருட்டினேன். ஒரே ஒரு வெள்ளை முட்டை புதருக்குள் பத்து நாட்களாக இருப்பது வியப்பாக இருந்தது. ஏன்? பிற்பாடு 7 (அ) 8 முட்டைகள் வைக்கவில்லை!. ஏமாற்றமாய்திரும்பி சுல்தான் பேட்டை பாதையில் சறுக்கிப்போனேன். அங்கும் ஏமாற்றம். தொங்கநாதன்கள் தென்மேற்குப்பருவ மழைப்பருவ காலத்தில் இனப்பெருக்கம் செய்தால் அதற்கு சோளமும், நிறைய பூச்சிகளும் கிடைக்கும் என்பது அவற்றிற்கு தெரிகிறது.  ஆனால் இந்த மாநிடனுக்கு தெரிவதில்லை. அவன் அறிவிளியாய் இருப்பது எனக்கு வெறுப்பைத்தருகிறது. ‘சும்மா இருந்தவன் பெண்டாட்டி தலையைச்செரைத்தான்’ என்ற பழமொழிக்கு ஏற்ப அந்த தோப்புக்காரன் கிணற்றுக்குள் சீனிப்புளி மரச்சிமிறுகளில் தொங்கிக்கொண்டிருந்த தூக்கணாங்குருவிக்கூடுகளை அறுத்து யாவற்றையும் கிணற்று மேட்டில் போட்டிருந்தான். அவைகளில் குஞ்சுகள் இருந்தனவா? இனப்பெருக்கம் முடிந்து விட்டதா? என அந்த மடையனுக்குத்தெரிந்திருந்ததா? அந்தக்கூடுகளால் ஒரு பாதமும் அவனுக்கு இல்லை. அப்படியிருக்க அதையேன் செய்தான்? ஓ! மனிதா! அப்படியே விட்டிருந்தால், அதில் சிட்டுக்குருவிகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். வெண்கழுத்து தினைக்குருவிகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். அவை இரவில் தங்கும். இவன் ஏன் இப்படி உயிரினத்துக்கு பாதகம் செய்து திரிகிறான். பூமி இவனுக்கு மட்டுமே சொந்தம் என நினைத்துக்கொண்டிருக்கிறானா? இந்த மாதிரி பாதகர்களை எப்படித்திருத்துவது? அங்கு உலவி வந்த சிட்டுக்குருவி, வெண்கழுத்து தினைக்குருவி, கருந்தலை தினைக்குருவி, சிலம்பன், புதர் சிட்டு, மைனா, பஞ்சுருட்டான் என்பன அன்று இல்லை. அந்த சுவர்க்கம் அந்த தோப்புக்காரனால் நரகமாக்கப்பட்டிருந்தது. இருந்த ஒன்றிரண்டு சிட்டுக்குருவிகள் பாவமாக மின் ஒயரில் அமர்ந்து இருந்தன. என் செய்வேன் கடவுளே!

Tuesday, July 28, 2015


தொங்கநாதன்……..2

காய்ந்த குளத்து கருவேல மரத்தில் தொங்கும் ஒற்றைக்கூடு


                தொங்கநாதன் எனும் தூக்கணாங்குருவி கருவேல மரம் அடர்ந்த காய்ந்து போன குளத்தில் உள்ள நான்கு மரங்களில் தொங்கநாதன் கூடு தொங்க விட்டுருந்தது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் அதுவும் முழுமையடையாமல் இருந்தன. பத்தடி உயரத்தில் மரத்துக்கு ஒன்றாகத்தொங்கின.இது எனக்கு பேராச்சர்யமாக இருந்தது. இது வரை நான் கண்டது கூடுகள் நீரோடும் ஆற்றுக்கு மேல் அல்லது கிணற்றுக்கு நடுவில் தொங்கிக்கொண்டிருக்கும். வேம்பு, அத்தி, சீனிப்புளி போன்ற கரையிலுள்ள மரங்களில் இருந்து யாரும் தொடமுடியாத நிலையில் நீருக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும். வரண்ட குளத்தில் கருவேலமரத்தில் ஒற்றை அரைகுறை கூடுகளைப்பார்த்த போது இது புது கண்டுபிடிப்பு தாம் என எனக்குள் சொல்லிக்கொண்டேன். இது வரை பதிவாகாத செய்தி. ஒருவேளை கிணற்றின் நடுவில் கட்டுவதற்கு முன் இந்த மாதிரி இடத்தில் கட்டிப்பழகுவதாகக்கூட இருக்கலாம். வெண்தொண்டை தினைக்குருவி தொங்கநாதன் குஞ்சு பொரித்து விட்ட கூடுகளை தன் இனப்பெருக்கத்துக்கு உபயோகிப்பது பற்றி டாக்டர் சலீம் அலி பதிவு செய்திருக்கிறார். அத்தோடு எனது Diary on the nesting behavior of Indian Birds நூலில் சிட்டுக்குருவியும் இந்த தினைக்குருவி போல எல்லாம் முடிந்து போன வெற்றுக்கூட்டை தன் இனப்பெருக்கத்துக்கு பயன் படுத்துவதை பதிவு செய்துள்ளோம். இப்போது மேலும் ஒரு செய்தி என்னவெனில், வெண்தொண்டை தினைக்குருவி முட்டைகளுக்கு மெத்தை வைக்க உதிர்ந்த இறகை தனது வாயில் கவ்விச்சென்றதை கண்ணுற்றேன். தினைக்குருவிகள் மற்றும் சிட்டுக்குருவிகள் கூட்டை கைப்பற்ற வரும் போது தொங்கநாதன் அவைகளைத்துரத்தி அடிக்கின்றன. அணில் கூடுகளுக்குப்பக்கம் சுற்றுவது முட்டை, குஞ்சுகளை கைப்பற்றத்தான் என்பது தெளிவு. தொங்கநாதன் தானியங்களையும், பூச்சிகளையும் தன் குஞ்சுகளுக்கு ஊட்டுவது அதன் அலகில் சிக்குண்டு இருப்பதை வைத்து பதிவு செய்ய முடிகிறது. தினைக்கருவிகள் பல கூட்டில் குடியேறுவதற்கு முன்பு அதை சுற்றி பார்வையிடுகின்றன. ஒன்றிரண்டு கூடுகள் இரட்டையாக பின்னப்பட்டு ஒன்றிலிருந்து இன்னொன்று தொங்குகிறது.சாதாரணமாக ஒன்னரையடியாக இருந்தால் இந்தக்கூடு மூன்றடியாக உள்ளது. அருகிலிருக்கும் தென்னை மரத்தின் ஓலை, சோளத்தட்டின் ஓலை என இவற்றை அலகில் பூக்கட்டக்கிழிக்கும் நாறு போல கிழித்து அலகில் கூட்டைப்பின்னலிட்டு நெய்வது கண்கொள்ளாத காட்சி.கூட்டின் அருகில் கருந்தலை தினைக்குருவிகளைக்கண்டேன். சிட்டுக்குருவி. மைனா கிணற்றுக்குள் போய், வந்து கொண்டிருக்கிறது. அது கிணற்றுச்சுவர் பிளவுகளில் முட்டை வைக்கும். அது கண்ணில் பட வில்லை. அமைதியான கிராமத்து 86 வயது பழனிக்கவுண்டர் மனைவியை இழந்தவர், எனக்காக கூட்டை நான்கு கிணறுகளில் கண்டு பிடித்துக்கொடுத்தது என்னை நெகிழ வைத்தது. பழைய துறுப்பிடித்த சைக்கிளில் காற்றுடன் போராடி பெடலை அமுக்கி தெற்கும் வடக்கும் அலைந்து கண்டு பிடித்துக்கொடுத்தது என்னை வியப்புக்குள் தள்ளியது. ……………..தொடரும்.