Tuesday, July 22, 2014

சங்க இலக்கியத்தில் 
சுவையூட்டும்
பறவை கவிதை

புனல்ஆடு மகளிர் இட்ட பொலங்குழை
இரைதேர் மணிச்சிரல் இரைசெத்து எறிந்தென
புள்ஆர் பெண்ணைப் புலம்புமடற் செல்லாது____-பெரும்பாண்ஆற்றுப்படை (312-314)

            சங்க காலத்தில் சிறுகுழையெனும் காதணிகள் மகளிர் அணிந்திருந்தனர். துவக்க காலத்தில் இயற்கையில் கிடைத்த தாவரங்களையும், செடிகொடிகளையும், மலர்களையும் ஆபரணங்களாக அணிந்தனர். காதில் தளிரை அணிந்தனர். அதனைக் குழை என்றனர். காதில் பூ இதழ்களை அணிந்தனர். விதைகளைப் போன்ற பொருள்களைக் காதில் அணிந்தனர். பூ இதழ்கள் தோடு என்றனர். விதைகளை காழ், மணி மற்றும் மேகலை என்றும் அழைத்தனர்.
            மேலே குறிப்பிடும் மூன்று வரிச்செய்யுளைப் படித்தீர்களா? அருவிநீரில் குளிப்பதற்கு முன்பு, மகளிர் தங்கள் காதுகளிலிருந்த குழையினை கழற்றி கரையில் வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் குளித்துக்கொண்டிருந்த போது சிறு நீல மீன்கொத்தி அந்தகுழையை மீன் என நினைத்து அலகில் கவ்விப் பறந்து விட்டதாம். ஆக அந்தக்காலத்தில் மகளிர் குழை அணிந்திருந்ததையும், அதுவும் மீன் வடிவிலான குழை அணிந்திருந்ததையும் சங்கப்பாடல் மூலமாக அறிய முடிகிறது.
            சிரல் எனில் சிறு மீன்கொத்திப்பறவை. அதுவும் சிறுநீலமீன்கொத்திப்பறவை(Small Blue Kingfisher)யாயிருக்கும்.சங்க காலத்தில் அதாவது கி.பி 100- 700 லேயே மீன்கொத்திப்பறவையைப்பற்றி அறிந்து வைத்திருந்திருக்கின்றனர் என்பது அறியமுடிகிறது. இந்த சங்கப்பாடல் நமக்கு பண்டைய நாகரிகம், பறவை பற்றியதை பதிவு செய்துள்ளது நமக்கு 21-ம் நூற்றாண்டில் காணக் கிடைக்கிறது. பதிவு செய்வது என்பது எழுதி வைக்க வேண்டும். அதைப்படித்து பின்வரும் சந்ததியினர்அறிய வேண்டும். தற்போதைய கால கட்டத்தில் இலக்கியம் படைப்பதுவும், அதைப்படிப்பதுவும் சொற்பமாக உள்ளது.அதை மீட்டு எடுக்கவேண்டும் யுவன், யுவதிகளே……..உங்களைத்தான்……




Wednesday, July 9, 2014


                               பறவை வேட்டை





பறவை வேட்டை

மனிதஇனம் கற்காலத்தில் வேட்டையாடி உண்டான். விவசாயம், தெரியாத நிலையது. அந்த கற்காலப்பழக்கம் இன்றும் பல லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகும் அதனுடைய குரூரம் குறையவில்லை.  சிறார் ஒண்டிவில்லோடு மரம், செடி, வேலி, மின்கம்பி எனப் பார்த்துக்கொண்டே செல்கின்றனர். அதுவும் விடுமைறை நாட்கள், பள்ளி தேர்வு விடுமுறைகளில் இவர்களது பொழுது போக்கு, வேட்டை ஆரம்பிக்கிறது. ஓணான், அணில், அரணை, பச்சோந்தி, குருவி என எதையும் விடுவதில்லை. வேட்டைக்குரூரம் மனிதனிடம் அழிந்து விடவிலை.
ஒரு முறை இரண்டு, மூன்று மழைகுருவிகள் இரு சிறாரிடம் காயத்துடன் இருக்க எனக்கு சோகமாகிவட்டது. பத்து சிறார் இருப்பர். எல்லோரையும் குழுமச் சொன்னேன்.
‘இந்த பறவைக பேர் என்ன? உங்களுக்குத் தெரியுமா?’
‘பக்கி’
‘இல்லை. இவை எங்கிருந்து வருதுன்னு தெரியுமா?’
‘……!’
இதுக்குப்பேர் மழைகுருவி. சைபிரியா, ரஷ்யாவுக்கு மேற் கோடியிலிருந்து வருதுங்க. திரும்பவும் மார்ச் மாசம் போயிடும். மழைகுருவிகள் இருப்பதினாலேயே நீங்கெல்லாம் கொசுக்கடி தின்னாம இருக்கீங்க. ஒரு நாளைக்கு ஏகப்பட் கொசுக்கள சாப்பிடும். வெளிநாட்டிலிருந்து வந்த விருந்தாளிகப்பிடிச்சு சாப்பிடலாமா? நீங்கல்லா இலை, தளைகலையா கட்டியிருக்கீங்க? உண்ண எவ்வளவோ இருக்குது. இதப்போய் சாப்பிடலாமா? எவ்வளவு அழகாக இருக்கு பார். நூத்துக்கணக்கான மழைகுருவிக ஒன்று சேர்ந்து உங்கள துரத்தித் துரத்தி கொத்துனா என்ன பண்ணுவீங்க.? உங்க நயவஞ்கத்தை மனுஷங்க கிட்ட காட்டறதுமில்லாம, குருவிக கிட்ட ஏன் காட்டறீங்க? இனிமே இந்தக்குருவிகளக் கொல்லக்கூடாது. நீங்க அதுகளுக்கு எதாவது பண்ணறீங்களா? ஒன்றுமே செய்யாத போது, உங்களுக்கு இந்த மழைகுருவிக உதவியா இருக்கு. இதுவா நீங்க காட்டற நன்றிக்கடன்?’
இரண்டு சிறார்களின் கையில் துடித்துக் கொண்டிருந்த மழைகுருவிகளைப்பார்த்து கண்களில் கண்ணீர் வந்தது. தலை தொங்கிய மழைகுருவிகளைப்பார்த்து விசனப்பட்டேன்.
‘தாதா! தண்ணிகுடுத்தா பொழைச்சுக்குமா?’
‘பொழைக்காது. கல்பட்டு காயம் பாரு. கொன்னுடுவே…ஆனா உயிர் குடுக்க முடியாது. இப்படி ஒண்டிவில் தூக்கி காலனிக்குள் அலையறீங்களே! இனி இந்த வெளி நாட்டுப்பறவைக நம்ம காலனிக்கு வருமா? இங்கே வராம வேற்றிடம் போயிடுமே.’
‘மன்னிக்கணும். இனி இது மாதிரி செய்ய மாட்டோம்.’
‘கூண்டுப்பறவைக வேணுமா? ஒண்டிவில் வேணுமா?  கடைகல்ல கிடைக்கும். நீங்க திருந்துனா, வியாபாரிக விற்க மாட்டாங்க, உங்கள நீங்க நேசிக்கிறீங்க. அது போல மற்ற ஜீவன்களையும் நேசிச்சுப்பழகுங்க.’
‘சரி தாதா.’
‘போய் வறுத்துச்சாப்பிடுங்க’ என விரக்தியில் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.
‘டேய்! குருவிங்கள பொதைச்சிரலாம்’ என்று ஒரு சிறுவன் சொன்னது காதுகளில் விழுந்தது.
இவைக்கு தாம்பாடி, தகைவிலான், தலையில்லா குருவி, ஆங்கிலத்தில்

Swallow.(Hirundo rustica) வலசைப்பறவை.