Friday, May 20, 2016


வீகன் ஆசிரமம் 
பிரம்ம பிரகாசம் தொடர்பு; 98423 77758


           நான் அடிக்கடி வீகன் ஆசிரமம் போய் விடுவேன். தேடல் இருந்தால் தான் எதுவுமே பெற முடியும். இந்த ஆசிரமம் பொள்ளாச்சியின் கோவைப் பாதையில் வடக்கி பாளையம் பிரிவில் இறங்கி, சிவாலிக் பள்ளிப்பாதையில் 1 கி.மீ போனால் ஆசிரமத்துக்குள் நுழையலாம். ஐந்தரை ஏக்கர் தென்னந்தோப்பு, சுற்றிலும் வேலியோரம் தேக்கு. மாமரம், பலா, சர்க்கரைப்பழ மரங்கள், காட்டுமல்லி என மனதிற்கு இனிமை தரும். நண்பர் பிரம்மப்பிரகாசம் அரிசி, நீர், தேங்காய் வைத்து, அணில், மரங்கொத்தி, சிலம்பன், காகம், வால்காக்கை எனக்கவருவார். பனங்காடைகள் சப்தமிட்டு மின் கம்பிகளில் அமர்ந்திருக்கும். 
                   தோப்புக்கு நடுவே கவ் பாய் ஸ்டைலில் மேலே ஏற்றிப்போடப்பட்ட வெட்டவெளி ஷவர் இரண்டு பொருத்தியிருக்கும் பாங்கு அருமை. அவைகளில் ஒன்று தபதப வென அருவி போல வீழும் குழாய், இரண்டாவது ஷவர். ஆனந்தமாகக்குளிக்கலாம். வெட்டவெளிக்குளியல். சுற்றிலும் தென்னந்தோப்பு. குளியலறைக்குளியலைவிட அனுபவித்து இயற்கையோடு இயற்கையாக மாறிப்போகலாம். பிறகு எதிரிலிருக்கும் காட்டு மல்லிகை, ராமபாணம் வெள்ளைப்பூக்களை ரசித்துகொண்டே உரையாடல் எனக்கும், பிரம்ம பிரகாசத்துக்கும் நடக்கும். மகாசைவத்தைப்பற்றி ஒரு நூல் எழுத ஆழமான கலந்துரையாடல்  நாள் முழுக்க நடக்கும். தொடக்கத்தில் நான் தேவாரம் இசையோடு பாடுவேன். ஆசிரமம் என்றால் நானும் என் நணபரும் மட்டும் தாம். நான்கு நாட்களுக்கு கூட தங்கிவிடுவேன். சில வேளைகளில் மேற்குப்புற நாடுகளில் வந்து தங்குவர். 
               அனைவரும் தாவர உண்ணிகளாக மாறினால் இந்த பிரபஞ்சம் சிபிட்சமாக இருக்கும் என்பது எல்லோரும் உள் வாங்க வேண்டும். திணிக்கும் கருத்தல்ல. உங்கள் வயிறு என்ன சுடுகாடா? உங்களையே அண்டியிருக்கும் பிராணிகளை கொன்று ஏன் உண்ணுகிறீர்கள்? உண்ண எவ்வளவோ இருக்கும் போது உயிர் வதை செய்வது ஞாயமா? உங்கள் இதயத்தைத்தொட்டு உணர்ந்து பாருங்கள். எங்கள் குடும்பம் NV குடும்பம் என்றால்,நீங்கள் ஏன் கண்மூடித்தனமாக உங்கள் குடும்பத்தை பின்பற்றுகிறீர்கள். 
             
Water canal adjacent to Vegan Ashram

Front view of Ashram. Any spiritual & vegans may contact Brahma Prakasam-cont:: 98423 77758
சரி! மாலையில், சைக்கிளில் கிராம எழிலைப்பார்ப்பதற்கு பெடலை மிதிப்பேன். காலை மாலை தோப்பின் அருகில் நெளியும் வாய்கால் தண்ணீரில் குளிக்க ஓடுவேன். மக்கள் அங்கேயும் என்னை தனிமையில் குளிக்க விடுவதில்லை. துவைக்கும் பெண்டிர். என்ன செய்ய? சைக்கிளை மிதித்து கிழக்கில் ஒரு கி.மீ போய் ஒரு ஆள் இறங்கும் படிக்கட்டில் இறங்கி, ஆளை இழுக்கும் விசையில் ஓடும் நீரில் ஜட்டியுடன் இறங்கி குப்புறப்படுத்துக்கொள்வேன். நீரில் மிதந்து கிடக்க, நீர் என்னை படு வேகமாக இழுக்கும். கைவிரல்கள் சிமெண்ட் தளம் பாவிய காரைப்பிளவைப்பிடித்துக்கொள்ளும். இல்லையேல் நான் புரட்டப்பட்டு, பல கிமீ போய் விடுவேன். நீர் உடம்பை மிருதுவாக்க, முழங்கையில் ஒரு முறை, பிறகு வலது கால் பெருவிரலில் சிராய்ப்புக் காயம் பட எரிந்தது. நீர் எனது அம்மை… நீரைச்சுத்தமாக வைத்திருப்பது நமது தலையாய நியதி.

Friday, May 6, 2016

ஒன்றையொன்று…


பூனை பிடித்து வந்த அண்டகாகக்குஞ்சு

குஞ்சை இழந்து தவிக்கும் அண்டங்காக ஜோடி
ஒன்றையொன்று…………
நான் வளர்த்த மழை மரத்தில் ஒரு அண்டங்காக ஜோடி கூடு கட்டியிருந்தது. ஒரு பொழுது அந்த ஜோடி காகம் பூனையைத்துரத்திக்கொண்டு வந்தன. பூனை வாயில் ஒரு அண்டங்காக குஞ்சு. விஜயவினாகர் கோயில் அருகில் ஒரு செம்பருத்தி செடியருகில் வைத்து விட்டது. காகக்குஞ்சு உயிருடன் தான் இருந்தது. மரத்தின் மீது ஏறி கூட்டிலிருந்ததைக்கவ்விக் கொண்டு வந்து விட்டது. அம்மா, அப்பா காகம் முயற்சியில் இறங்கியிருந்தன. அருகிலிருந்த ஆலமரத்தில் அமர்ந்து கா….கா… எனக்கத்திக்கிடந்தன. என்ன முயற்சி செய்தாலும் மீண்டும் அந்த குஞ்சு கூட்டுக்கு காகங்கள் எடுத்துச்செல்ல முடியாது. நான் இடைமறித்தால் காகங்கள் என் மண்டையைப்பதம் பார்க்கும். மேலும் மரமேறிக் கூட்டில் கொண்டு போய் வைக்க முடியுமா? கொழுப்புப்பிடித்த பூனை உண்ணவும் இல்லை. கொஞ்சம் நாழி கழிந்து பார்க்க குஞ்சு அப்படியே உயிருடன் கிடந்தது. மூன்று அல்லது நான்கு முட்டை வைத்து அடைகாத்துப்பின் குஞ்சு பொரித்த பிறகு இந்த விபரீதம். ஒரு குஞ்சின் தலைவிதி அப்படியாயிற்று. நாம் இதில் செய்ய ஒன்றுமில்லை. வனத்தில் இன்னும் என்னென்ன நிகழும்!
மூன்றாம் நாள் குஞ்சை பெரிய குப்பைத்தொட்டியில் போடலாம், வாசம் பரவுகிறதே என குனிந்தால், எங்கிருந்தோ குஞ்சைப்பறி கொடுத்த ஜோடி அண்டங்காகம் பறந்து வந்து என்னை அடிக்க வந்தன. எப்படியொரு சோகம் அவைகளுக்கு! மூன்று நாட்களாகியும் காகஜோடிக்கு ஞாபகமிருக்கிறது. ஆச்சர்யமாகத்தான் உள்ளது. பறவைகளும் நம்மைப்போல் தாம். அதில் சந்தேகமா உங்களுக்கு? குஞ்சை நாய் கவ்வும் அல்லது குழி தோண்டிப்புதைக்க வேண்டும். இது முன்பொரு முறை எங்கள் வீதியில் உள்ள ஒரு வீட்டின் குட்டையான பாதாமி மரத்திலிருந்த கூட்டில் வெண்தலைச்சிலம்பன்களின் நான்கு குஞ்சுகளும் பூனை தூக்கி ஓடியது.

நாம் இதில் தலையிட முடிவதில்லை. தலையிடவும் கூடாது. அதனால் தான் பறவைகள் நான்கு முட்டைகள் வைக்கின்றன. ஒன்றிரண்டு கழிந்து விடும். பூனைகள் எங்கள் காலனியில் வளர்ப்பார் யாருமில்லை. அவைகள் இனப்பெருக்கமாகி தங்களுக்குள் ஒரு வீட்டை தத்து எடுத்துக்கொண்டன. மீதமான தயிர், பால் கொல்லைப்புறத்தில் கொட்டுவது, உணவு மீதமானவை, பிறகு இது போல குஞ்சுகள், எலி, வேலி ஓணான் என உண்டு வாழ்கின்றன. வீட்டுப்பூனை எங்கு போகும் வீட்டைஅண்டித் தான் வரும். பறவைகள் மரத்தின் மேல் தான் கூடு வைக்கும். ஈசன் பூஉலகை விளையாட்டாகப்படைத்திருக்கிறார். ஒன்றுக்கு ஒன்று உணவாகிப்போகிறது.