Wednesday, January 27, 2016


எனது Trekking நூல் " மலை முகடு' வெளி வந்து விட்டது. நூல் பெற sandhyapathippagam@gmail.com தொடர்பு கொள்ளவும்.  



ஆலமரம் கார்த்திகையில் இலைகள் உதிர்க்காதே!
            
                       செலக்கரிசலிலிருந்து 86 வயது இளைஞர் பழனிக்கவுண்டர் தொலை பேசினார்.
“சந்தைப்பேட்டையில் நிற்கும் 25 வயசு ஆலமரம் சுத்தமா இல உதிர்த்துச்சு! நீங்க இதுக்கு என்ன பண்ணுவீங்களோ, தெரியாது. ஆலன எப்படியாவது பொழைக்க வைக்கணும்.”

ஸ்கூட்டரில் 10 மைல் தூரத்திலிருக்கும் செலக்கரிசல் கிராமத்துக்கு விரைந்தேன். இலைகளெல்லாம் உதிர்த்து பரிதாபமாக நின்றது. எத்தனை பேருக்கு நிழல் கொடுத்து நின்ற மரம். அதன் உடம்பில் சில ஆணிகள். மனிதன் விளம்பரத்துக்காக அடித்திருந்தான். ஏசுவிற்கு சிலுவையில் ஆணிகள் போல எனக்குத் தெரிந்தன.  விரல்கள் போன்ற சிமிறுகள் லகுவாக ஒடிந்தன. உள்ளே ஓட்டை, அதில் சிறு வெண்புழுக்கள். பழங்கள்கரிந்து போயிருந்தன. மாதிரிகளை எடுத்தேன். நோயாளியாய், எலும்புகூடாய் நின்ற 50 அடி உயர ஆலமரத்தை புகைப்படம் எடுத்தேன். மறுநாள் கோயம்புத்தூர் IFGTB சென்று விவசாய அதிகாரி ரோகிலா, Dr. மோகன்,(Pathology) மற்றும் Dr. Jacob (Entomology) ஆகியோரைக்கலந்து ஆலோசிக்க, பெரிய ஜிவனை பழைய மாதிரி உயிர்ப்பிக்க சில வழிவகைகள் கிடைக்கப்பெற்றேன். மீண்டும் செலக்கரிசல் சென்று, ஒரு கை வாகு கிளையை ஒடித்துப்பார்க்க அதில் வெண் பாலும்,வெட்டக்கடினமாயும் இருந்தது. சிகிச்சை அளிக்கலாமென முடிவு செய்து சூலூரில் டைக்களவஸ் 100 மிகி வாங்கிக்கொண்டு ஸ்கூட்டரில் பறந்தேன். பத்துக்குடம் நீர் (அங்கு கிடைப்பதற்கு அரியது!) சேகரித்து, மருந்தை அதில் கலக்கி, வேலுக்குட்டி ஊற்றினார். பழனிக்கவுண்டர் கடப்பாரையில் குத்திக்கொடுக்க, வேரைச்சுற்றிலும் ஊற்றினார். இந்த ஆலமரம் பிளைக்குமா ? வீழ்ந்து படுமா? சிவபெருமானே உணர்வார். மனித முயற்சி ஒரு அளவோடு மட்டுமே…….வேலுக்கவுண்டர், கூட இருந்தார் . சிவனை வேண்டிக்கொண்டோம். இரண்டு கவுண்டர்களும் செலக்கரிச்சலில் பசுமைப்புரட்சி செய்தவர்கள். அவர்களின் சேவை மகத்தானது. மருந்து கிளை முழுதும் பரவ 1000 லிட்டர் ரூ 200 என வண்டியில் நீர் வாங்கி, மடை கட்டி  ஊற்றினோம். இது மாதிரி வாரம் ஒரு முறை வண்டி நீர் ஊற்றி சிவபெருமானை வேண்டி பிரார்த்தித்தோம். பலன் கொடுப்பது அவர் அனுகிரகத்தில், என்ன நிகழும்?…………………

Wednesday, January 13, 2016



300 Beautiful photographs in my book “Diary on the nesting behavior of   Indian Birds” Buy from amazon.in thro’ on line.

நல்லதொரு நிழற்படம்

            காலை அல்லது மாலை வேளையில் நல்ல நிழற்படம் அமைய நிறைய வாய்ப்பு. நிழற்படக்கலைஞன் ஒரு ஓவியன். இப்படியும் சொல்லலாமே! நல்லதொரு கவிஞன். கவிதை வடிப்பதும், ஓவியம் வரைவதும் எனக்குப்பிடித்தமானது. உங்களுக்கு? இதோ! நிழற்படத்தில் ஒரு  எளிமையான கவிதை. இதோ! ஒரு அழகான ஓவியம். இதை எழுத எந்த ஒரு முயற்சியும் இல்லை. எந்தத் திட்டமும் இல்லை. ஒரு அழகிய கிராமம். மாலை வேளை சூரிய கிரணங்கள் மேற்கிருந்து கிழக்காக வருகின்றன. நங்கை அரசமரத்துப்பிள்ளையாரை வணங்கிவிட்டு மேற்கத்திய கிரணங்களை நோக்கி நடக்கிறாள். இரண்டு மரங்கள் மாலை மஞ்சள் கிரணங்கள் பச்சை, அடர் பச்சை, வெளிர் பச்சை வெளிப்படுத்துகின்றன. இடுப்பில் இருக்கும் சிகப்பு குடத்தில் கூட வெளிச்சகிரணங்கள் ஊடுருவி நிற்கும் அழகு. கையில் பூக்கூடை. இடது புறம் கிராமத்துக்குரிய சிமெண்ட் தொட்டி. எதிரே மற்றுமொரு இறை சந்நதி. அதன் சுவர்கள் கோயில் கோபி நிறம், குட மங்கை பச்சை சேலை, மரங்களின் பரந்த தண்டுகள், அதன் மஞ்சள் இலைகள் என மாலைக்கதிரவன் தன் கிரணங்களால் ஓவியம் வரைந்தது உண்மை. வெளிச்சமும், நிழலும் கைகோர்த்த அருமைக்காட்சியிது.  கவிஞனுக்கு இது சுவையான கவிதை. ஓவியனுக்கு இது அழகான ஓவியம். கிராமத்து காட்சிகள் எளிமையின் அழகை சொல்லாமல் சொல்லும். மனம் சலனமற்ற நிஷ்சலமான கணங்கள் இவை. இது மாதிரி படைப்புகள் எதிர் பாராமல் கிடைக்கும். பார்த்து ரசித்து, கவிதை எழுதுங்கள். இல்லையெனில் ஓவியம் தீட்டுங்கள், நண்பர்களே!