Sunday, June 12, 2016


தஞ்சமடைந்த புறா
                ஒரு காலைப்பொழுது உள்ளுர் நண்பர் ஆன்ட்ரூஸ் காரில் ஒரு வெண்புறா கையிலிருக்க வந்திறங்கினார். ‘சார்! இந்தப்புறா நம் சூலூர் குளத்தில் கிடைத்தது. கழுகு துரத்திக்கொண்டு வர, இது பயந்து போய் குளத்து நீர்ல விழுந்திருச்சு. இறக்கை முழுக்க ஈரமாக, இதனால் பறக்க முடியலை. நான் ஒரு கோலெடுத்து ஆகாசத்தாமரை மேல் வந்ததை பக்கமிழுத்து எடுத்தேன். இது காப்பாத்தறாங்கன்னு தெரிஞ்சுகிச்சு. அதனால அருகில வந்தது.’ என்று முன்கதைச்சுறுக்கத்தைச்சொன்னார்.
 நான் கையில் வாங்கி கடப்பைக்கல் பெஞ்சில் விட, அது பயந்து போய் மதில் சுவர் ஓரம் குதித்து அங்கேயே நின்றது. ஒரு வேளை இது sub adult-ஆக இருக்குமோ? என சந்தேகம் வந்தது. ஒரு வேளை ஈரம் உடம்பில் காய்ந்தால் பறக்கலாம். எதற்கும் ஒரு அட்டைப்பெட்டியில் இட்டு வைக்கலாம். எங்கள் காலனியில் பூனை, நாய் அதிகம். பிடித்துக்கொண்டு போய்விடும். உடனே ஒரு அட்டைப்பெட்டி காற்றுப்புக ஓட்டைகள் இட்டு, அதற்குள் குடிக்க நீர், என்னிடமிருந்த சாமையைத்தூவி, புறாவைப்பிடித்து உள்ளே விட்டேன்.
மதியத்துக்கு மேல் கம்பு வாங்கிப்போட ஜோசப் ரெஜினால்ட் யோசனை வழங்கினான். வினி, முடிந்தால் அட்டைப்பெட்டியிலிட்ட புறாவை கோவை கொண்டு வரவும் என்றாள். பயந்திருக்கும். அடி பட்டிருந்தால் சிகிச்சை அழிக்கலாம் என்றாள். இருவரும் Animal Rescuers என்ற NGO வைத்துள்ளனர். வாழ்க! ஒரு நாள் முழுக்க அட்டைப்பெட்டியில் இருந்தது. நான் இன்னொரு அட்டைப்பெட்டி வாங்கி வந்தேன். இப்போது இருப்பது இடம் போதவில்லை. போதிய இடமளிக்கும் அட்டைப்பெட்டிக்கு புறாவை மாற்றினேன். மறுநாள் காலை பார்க்க அட்டைப்பெட்டி கீழ் புறம் நனைந்திருந்தது. எச்சமிட்டிருக்க நாற்றம் குடலைபிடுங்கியது. பறவைகள் இயற்கையில் இருந்தால் ரசிக்கலாம்.
இயற்கை தான் அதைப்பராமரிக்க முடியும். ஆயிரம் வருஷங்களாக மனிதனோடு பழகும் புறா காலையில் வெளியில் எடுத்து விட அது மீண்டும் பயத்தில், படிக்கட்டு அடியில் போய் அமர்ந்து கொண்டது. நான் கையில் கம்பு வைத்துக்கொண்டு அழைக்கிறேன், வர மாட்டேன் என அடம் பிடித்தது. கீழே கம்பைத்தூவி விட்டேன். அதன் அலகு கம்பைப்பொறுக்க ஏதுவாக இருந்தது. வினிக்கு மறுபடியும் போன் செய்ய, ‘நீங்கள் அங்கு இருக்க வேண்டாம். வந்துடுங்க. அது தானே வந்து தானியம் பொறுக்கும்’, என்றாள்.

நானும் பறந்து போனால் இயற்கை பார்த்துக்கொள்ளும். நம்மால் இது ஆகாத செயல். தினமும் பெட்டியைச்சுத்தம் செய்ய வேண்டும். ஒரு பெட்டியைக்காயவைத்து உபயோகப்படுத்த வேண்டும். நான் குளித்து, சிவபெருமானை தேவாரம் பாடி போற்றி விட்டு வந்து பார்த்தால் வெண்புறா ஒன்று கையில் வராமலே….உனது கதை புதுக்கவிதை எனப்பாடுவதற்குள், அது அதன் ஞாபகமாக எனக்கு ஒரு இறகை மட்டும் விட்டு விட்டு பறந்து போய்விட்டது. சந்தோஷமாகப்பறந்து போவதை அடியேன் பார்க்கக்கொடுத்துவைக்கவில்லை.