Friday, March 27, 2015



பழுப்பு ஈப்பிடிப்பான்
Asian Brown Flycatcher


                இப்பறவை நான் காடம்பாறை போனபோது என் மைத்துனர் வீட்டின் முன்புறத்திண்ணையில் அமர்ந்திருந்த போது முதன்முதலாக அறிமுகமானது. அப்போது மழை தூறிக்கொண்டிருந்தது. “சிலுசிலுவென பருவநிலை. எனக்கெதிரில் நாற்பதடி தூரத்தில் ஒரு முள் கம்பியில் அமர்ந்திருந்தது. அது என் இருப்பில் சலனமடையவில்லை. சிட்டுக்குருவியை விட பரிமாணம் குறைவு. பழுப்பு நிறம். அதன் விரிந்த வட்டக்கண் தான் எனக்கு அதன் முகவரியைச்சொன்னது. தலை கொஞ்சமே தூக்கல், வால் நுனி சற்றே இரு மடிப்பாக இருப்பது மட்டுமே அதன் அடையாளங்கள். அதற்கப்புறம் அதை நான் பார்க்கவில்லை. இது வலசை வருவது. எனது இல்லத்தின் வலது புற வீதிக்கு அப்பால் ஒரு இலந்தை மரம் குடைவிரித்து நின்றிருந்தது. அதில் இதைப்பார்த்தேன். பல வருஷங்கள் ஓடிவிட்டதால் சந்தித்தவரை மறப்பது போல மறந்து போய், யார் இவர் என்பது போல எனக்கு சிந்தனை ஓடியது.

புதர்கருவி!(Warbler!)இனம் என நினைத்துக்கொண்டேன். தினமும் இப்பறவையை இலந்தை மரத்தில் உற்றுஉற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன். அதுவும் வட்டமான அகலக்கண்ணால், மறந்து விட்டாயா? என்னைத்தெரியவில்லையா? என்பது போல என்னை மலங்க மலங்கப்பார்க்கும். எனது இல்ல சிறு பூங்காவுக்கு வரும். மருதாணி, Powder puff என்ற புதர் தாவரங்களில் பூச்சி பிடிக்கும். பிறகு இலந்தை மரத்தில் ஊஞ்சலாடுவது போல கிளைக்குக்கிளை தாவிக்கொண்டிருக்கும். இதுமலைப்பிரதேசங்களை ஒட்டி உலவும், பூங்காவில் உலவும், மரக்கூட்டத்தில் உலவும் மற்றும் கண்பெரியதாக வட்டவடிவத்தில் இருப்பதெல்லாம் இதனை அடையாளம் காண துப்புகள். எனது வீட்டின் முன்பு, நிறைய மரக்குழு இருப்பதுவும் ஒரு தடயம்.

நண்பனே! உன்னை வெகு நாட்களாகக்காணாது போனதால் உனது அடையாளங்கள் மறந்து விட்டன. மன்னியும். உன்னைப்பார்த்த நாள் மீண்டும் நினைவுக்கு வருகிறது. மழைத்தூறல் அத்தோடு ஈரப்பதமான குளிர். இருவரும் ஒருவரை ஒருவர் வெகு நேரம் பார்த்துக்கொண்டோமே! நீ முள்கம்பியில் அமர்ந்திருக்க, நான் மைத்துனர் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து அந்த மலைப்பள்ளத்தாக்கில் உயிர்த்திருந்தோமே! இப்போது ஞாபகம் வருகிறது .


நண்பனே! மீண்டும் சொல்லாமல் கொள்ளாமல் பறந்து விடுவாய். அதெப்படி! தனியாக இவ்வளவு தொலைவு வருகிறாய். நான் மட்டும் நண்பனொடு தான் எங்கும் செல்கிறேன். இலந்தை மரத்தில் வந்து முள்ளோடு முள்ளாக அமர்ந்த வண்ணம் உறங்குகிறாய். பகல் பொழுதில் இலந்தை மரக்கிளைகளில் ஊஞ்சல். பிறகு மரத்துக்கு மரம் தாவல், கிடைக்கும் பூச்சிகளை உணவாக்கிக்கொள்கிறாய். பஞ்சம் பிழைக்க வந்தவன் போல இருப்பது தகுமா! நீ என் நண்பனல்லவா! ஏற்கனவே அறிமுகமானவன் நீ! வாரும் என் இல்லத்துக்குள். இருவரும் தேனீர் அருந்தியவாறு பேசிக்கொண்டிருப்போம். என்னோடு தங்குவீர். தயவு செய்வீர்.

Wednesday, March 18, 2015


                                       பெருமாள் ஐயா

Red wattled Lapwing

Wood pecker (பெருமாள் ஐயா ஓவியங்கள்)

L to R Dr. K. Ratnam, Arulagam Bharathi Dasan and Perumal Sir



பெருமாள் ஐயா
                இவர் திடீரென பறவை சித்தர் Dr. ரத்னம் ஐயா மூலமாக எனக்கு அறிமுகமானார். ரத்னம் சார் வீட்டில் அமர்ந்து அவரோடு பேசிக்கொண்டிருந்தேன். அண்ணாருக்கு வயது அப்போது 75 இருக்கும். பெருமாள் ஐயா வருகிறார் அவர் எனக்கு மூத்தவராக இருப்பார், நீ போய் பஸ் நிறுத்தம் போய் அழைத்து வா, அவருக்கு வீடு தெரியாது, தற்போது பொள்ளாச்சியிலிருந்து வருகிறார் எனப் பணித்தார். முன்பின் தெரியாதவர் இருப்பினும் அவரைப் பார்த்ததும் அடையாளம் காணலாம். நல்ல சிகப்பு, தாடி வைத்திருப்பார். கண்ணாடி மற்றும் குல்லாய் அணிந்திருப்பார். அவரை சுலபமாக அடையாளம் கண்டு ரத்னம் ஐயா இல்லம் அழைத்து வந்தேன்.
முக்கால் மணி பேசிக்கொண்டிருந்தோம். இரவு உணவும், தங்கலும் எனது இல்லத்துக்கு வருகிறேன் எனச்சொன்னது உண்மையில் எனது பாக்யம். கல்கத்தா சாந்தி நிகேதனில் இருந்து ஓவியங்களை சுவற்றில் தீட்டி பல நன்னெறிகளைப்பரப்பியவர். நல்ல ஓவியர், கூட     எழுத்தாளரும் ஆவார். ரபீந்தராநாத் தாகூருக்கு மாணவர். பிறகு சாந்தி நிகேதனில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். சில நன்னெறி நூல்களை எழுதி, அவரே செலவிட்டு வெளியுட்டுள்ளார். இரு நூல்களை நான் கேட்காமலேயே எனக்குத்தந்தார். அதில் ஒன்று சிந்தனைக்கதிர். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
           வீட்டுக்கு அழைத்து வந்தேன். மனைவி என் பிள்ளைகள் அவரைச்சுற்றி அமர்ந்து கொண்டு இரவு நல்ல நெறிகளை அவர் வாயிலாகக் கேட்டோம். மறுநாள் சின்னார் உலாப்போவதாகத்திட்டம். நான் கார் ஏற்பாடு செய்திருந்தேன். அதிகாலை பெருமாள் ஐயா, ரத்னம் ஐயா, நண்பர் பாரதி தாசன் (அருளகம் NGO) மற்றும் நான் சின்னார் சென்றோம். சின்னார் நெருங்கும் போது ஒரு பின் நீர் நிலை வசிகரமாக நம்மை மயக்கும். அங்கு காரை நிறுத்தி, இறங்கி இயற்கையை ரசித்தோம். பெருமாள் ஐயா உடனே சிறு டயரியில் பென்சிலால் அந்தக்காட்சியை வரைந்தார். இதற்கு அவருக்கு லேசாக கை நடுக்கமிருந்த்து. என்னே ஆர்வம், அதுவும் இந்த வயதில்

இயற்கையைப்பற்றிய பேச்சும், அறிவும், எழுதுவதும், ரசிப்பதும், வரைவதும் எல்லையில்லா பரவசம் உள்ளத்தில் ஏற்படுத்தும். அதில் சந்தேகமே வேண்டாம். 80 வயதை நெருங்கிக்கொண்டு இருப்பவர் யார் தயவும் இல்லாமல் நடந்தும், பஸ் ஏறியும் ஊர்விட்டு ஊர் வந்து வெளிப்படையாகப்பழகிப்பேசி,எழுத்து, ஓவியம், திறமையுடன் இயற்கையாளராக இருப்பது எனக்கு வியப்பையும், அவர் மேல் எனக்கு பெரும் மரியாதையும், மகிழ்வையும் ஏற்படுத்தின. மனைவி அவர் சென்ற பின்பு அவரைப்பற்றி சிலாகித்தாள். இவர் ஓவியங்கள் மற்றும், இவரைப்பற்றியும் இந்திரன் என்பவர் தொகுத்து வெளியிட்டுள்ளார். நல்லதொரு ஆன்மா எப்போதும் தன் சுவடுகளைப்பதிக்கத்தவருவதில்லை. அவரை சில போது நினைத்துக்கொள்வேன். தனக்கென ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்கொள்ளாது சுயநலமற்று எப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்து மறைந்திருக்கிறார். எளிமையானவர், இனிமையானவர் இன்றும் நினைக்கின் நல்ல ஊற்றுப்பெருகி வழிகிறது.

Saturday, March 7, 2015


                                    ராமச்சந்திரா குளம்


நானும் நீயும் பாடலாம் Great pied Wagtail

குளத்தில் சிற்றலைகள்


        இந்தக்குளம் சூலூரிலிருந்து செங்கத்துறை போகும் வழியில் அலாதியான குளம். கண்மாய் தடுப்பில் குளத்து நீர் நிற்கும். கண்மாயின் கிழக்குப்புற தடுப்புச்சுவரில் அமர்ந்து தவம் செய்தவாறு பறவைகளைப்பார்த்து பரவசம் கொள்வேன். முன் காலத்தில் ராமச்சந்திரன் என்ற ஒரு ஐயர் இருக்க, அவருக்கு பட்டயமாக இதைச்சுற்றிய நிலபுலன்களை அரசு கொடுத்தது. இந்தியத்திரு நாடு போல எந்த நாட்டிலும் ஆற்றிலும், குளத்திலும் இப்படி சாக்கடை கலப்பதில்லை. சூலூர் குளம் நிறைந்து, சின்னக்குளம் நிறைந்து பிறகு இந்தக்குளத்துக்கு வரும். நான் அபாக்யவான், எனது முன்னோர் இப்படிப்பட்ட சாக்கடை கலக்கும் குளங்களைப்பார்க்கவில்லை. இந்தக்குளத்தைச்சுற்றி உள்ள முட்காட்டு பூமியில் அமர்ந்து எழுந்து பறக்கும் கருப்பு வயிற்று கல்கெளதாரிகளப் (Black bellied Sandgrouse) பார்க்கலாம். முக்குளிப்பான்கள் நீர் மேற்ப்பரப்பில் ரயில் விடும். நீர் சறுக்கிப்பூச்சிகள் (Water skatter) நீர்த்தோல் மேல் கோலமிடும். இந்தக்குளத்து சூரிய அஸ்தமனம் அழகாக இருக்கும். சூரியன் கலங்கல் நீர் எனப்பாகுபாடு காட்டதல்லவா!
நணரோடும், தோழியோடும் பறவைகளைப்பார்த்து மகிழ்ச்சி கொள்ள தேர்ந்தெடுத்தால் இந்தக்குளத்தைத்தான் தேர்வு செய்வேன். பல சமயம் நானும் கண்மாயும் தனித்தே இருந்து மெளனமாக இருப்போம். பலபோது வலசைப்பறவைகளைப் பார்த்து வியப்படைந்துள்ளேன். நீர் கால்பங்கிருந்தால் நின்று இரைபிடிக்கும் (Waders) நிறையப்பறவைகள் வரும். கண்மாய் சரிவில் வாலாட்டி ஜோடி(Wagtail) மற்றும் உள்ளான்கள்(Common Sandpiper) சறுக்கி வரும் அல்லது சறுக்கி ஏறும்.
சில போது பறவைகளைப்பற்றி எழுதிய கவிதைகளை நானே மெட்டு அமைத்துப் பாடுவேன். என் பறவை குருநாதர் ரத்னம் வாயிலிருந்து பாராட்டுதல் வாங்குவது கடினம். இருந்தும் கொண்டலாத்தி(Hoopoe) பற்றி நான் இயற்றிய பாடலை நான் பாட ரசித்துப்பாராட்டினார். தோழி கைதட்டுவாள். நண்பர் தலையசைப்பார். DKM College for women, Vellore – கல்லூரியில் மாணவிகளுக்கு பறவையும் சுற்றுச்சூழலும் என்ற வகுப்பு எடுக்கும் போது, மாணவிகள் வற்புறுத்த இரண்டு வரிகள் பாடினேன். இதற்கு இசை அமைத்து முகநூலில் ஏற்றலாம் என இருக்கிறேன். எனது முகநூல் முகவரி; http://www.facebook.com//Sukumar Arumugam.988. அதற்கு முன்பு சில வரிகள்;-

கூப்கூப்….கூப்….. எனப்பாடியே
                                    எனை மயக்கியது நியாயமா?....
கூப்கூப்….கூப்…. இந்த ராகத்தை

                                  யாருனக்குச் சொல்லியதோ…..