Wednesday, April 20, 2016


ஆலமரத்தின் கதை





ஆலமரத்தின் கதை
            ஆலமரத்தின் விதை ஒரு மீன் முட்டையை விட சிறியதானாலும் வளர்ந்துவிட்ட பிறகு ரஜ, கத, துரக, பதாதிகள் கீழே தங்க நிழல் தந்து நிற்கும் ஒரு தடாகம். எத்தனை ஜூவராசிகள்! அட! அட!  அப்போதைய காலகட்டத்தில் கிராம சபையென்ன, சிறார் ஊஞ்சலாட்டமென்ன, பெண்கள் ஊர் வம்பென்ன, என எப்போதும் குழுமுமிடமாக இருக்கும். அக்காலத்தில் பணியர் என்ற வியாபார இனம் இம்மரத்தடியில் குழுமி வியாபாரம் செய்வர். ஆலமரத்தடியில் வியாபாரம் நடத்தினால் கொடுக்கல், வாங்கல் பிரமாதமாக நடக்குமாம். விழாக்கள் வேறு இம்மரத்தடியில் ஜோர் படுமாம். பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. பணியர் இதனடியில் கூடுவதால் இதற்கு Banyan Tree என்று நாமகரணம் செய்விக்கப்பட்டது. எனது மர குருநாதர் வேலுசாமி ஐயாவுக்கு இந்த மரம் எனில் உயிர். அவரது உற்ற தோழர் பழனி ஐயா ஆலான் என்று தான் பகருவார். இருவரும் வாட்ட சாட்டமாக 6 அடிக்கு மேல் 80 வயது தாண்டி இருந்தனர். பழனிக்கவுண்டர் கடின உழைப்பில் தண்ணீர் சுமந்து, சுமந்து மரங்களை செலக்கரிசிலில் வளர்த்தார். வேலுக்கவுண்டர் காசு செலவு செய்தார். இவ்வளவு கடின உழைப்பிலும் ஊர் மக்கள் விட்டேத்தி- யாக இருப்பது எனக்கு வியப்பாக உள்ளது. ஒருவரும் துணைக்கு வரவில்லை. இளைஞர்கள் தாங்கள் உண்டு தங்கள் படிப்பும், கனவுக்கன்னிகளும் உண்டு என்று இருக்கின்றனர். பிற மனிதர்கள் தானுண்டு தங்கள் பொண்டு, பிள்ளையுண்டு என பிழைபைப்ப்பார்த்து கடுகு உள்ளத்தோடு இருக்கின்றனர். ஆலமரம் இனி இப்பூமியில் அதுவும் ஊருக்குள் வாழ முடியாத நிலை ஏற்பட்டு விட்டது எனலாம். காரணங்கள்;-
# இடத்தை அடைக்கிறது (ஆம்! ரியல் எஸ்டேட் பாதிக்குமே!)
#வேரும் விழுதும் விடும் போது அருகில் உள்ள கட்டிடம் பாதிக்கும்.

கொஞ்சம் நஞ்சம் இருக்கும் மரங்களின் விழுதுகளை ஊன்ற விடாமல் மரத்தின் கீழ் வியாபாரம், தண்டுகளில் ஆணியடிப்பது, விழுதுகளில் ஊஞ்சலாடுவது, இதில் மாடு, எருமை குட்டி ஈனும் போது வரும் நஞ்சை பையிலிட்டுக்கட்டுவது, விழுது ஊன்ற வழியில்லாமல் தார் ரோடு இடுவது, ஏரி மேட்டில் வைத்து, விழுது நீரில் ஊசலாடுவது போல சகல விதமான துன்மார்க்க செயல்களையும் செய்து ஆலானை வாழ வழியற்றுப்போகுமாறு செய்வது மனிதன் உள்ளத்தில் கருணை என்பது துடைத்தெறியப்பட்டதைக்காட்டுகிறது. நீங்களெங்கே! நம் முன்னோர்களெங்கே! மண்ணில் ஆசை வைத்த மக்கள் உருப்படுவது கிடையாது. ஆலானுக்கு நிச்சயமாக இடம் தர மாட்டார்கள். அந்தகோ!
நீ மரமல்ல மகான்

ஆலமர நிழல் கிராம மையம்
அக்கால கிராம மக்களுக்கு நன்றி
ஆல் எனக்கு ஒரு சின்னத்தடாகம்
தர்ம சிந்தனை கிராமத்தாருக்கு;
ஆல் மக்கள் நீதிசபை
ஆலம் பழங்களின் சிகப்பு
இதயம் சுண்டும் காதலி விழிகள்
தடாகம் நிறையப் பறவைகள்
கிளைகள் தோறும் பறவையொலி
ஓ! ஆலே! வாழ்ந்தாலுன் போல
பெரு வாழ்வு வாழனும் பூமியில்
உன் மடி தொங்கும் விழுதுகளில்
ஊஞ்சலாடுவேன். சந்தன நிழலே!
மனசுக்குள் ஆனந்தம் முட்டும்
மைனா நானா வித ஒலி கூட்டும்
வா! உண்ணு! இளைப்பாறு!
செர்ரி நிறப்பழங்கள் அசைந்து கூப்பிடும்.
குக்குறுவான், மாங்குயில், கொண்டைக்குயில்
நீந்தும்; ஆல் எனக்கு சின்னத்தடாகம்.
சிறார் கும்மாளமிடும் திடல்
உன்னை அன்னாந்து பார்த்து
பெருமூச்சு விடுவேன்; முத்தமொன்று
கட்டிப்பிடித்து ஈய்வேன்
ஆயின் என் கைகள் போதாது
பரந்த மனசு போல நீ விரிந்தவன்
தர்மவான் போல உயர்ந்தவன்
உனை அண்டி எத்தனை ஜீவன்கள்!
ஆல் எனத்தழைத்து விரியணும்
ஆசி நல்கல் இப்போது புரியது.

நீ மரமல்ல மகான்!

Monday, April 4, 2016


இரக்கம் என்பது சிறிதும் இல்லையடா……!

Both Photo taken by Sri T.R.A. Arunthavaselvan

கொண்டலாத்தி (Hoopoe) 
 இரக்கம் என்பது சிரிதும் இல்லையடா……!
பொள்ளாச்சி, பணிக்கம் பட்டி மஹா சைவம் ஆசிரமத்துக்கு போயிருந்தேன். தோப்புகள்  மற்றும் வானம் பார்த்த நிலங்கள், மழை பெய்தால் புற்கள் தோன்றும் பூமியாகிப்போயின.அங்கு நானும் நண்பரும் உணவுக்காக ஸ்கூட்டரை உருட்டிப்போகும் மண் பாதை தெற்குப்புறம் தோகைகள் உதிர்ந்து போன மொட்டைத் தென்னை மரங்கள். அங்கு வேலை நடந்து கொண்டிருந்தது. விசாரித்துப்பார்த்த போது, வீட்டு மனைகள் பிரிப்பதாக சொன்னார்கள். எனக்கு ‘திக்’கென ஆயிற்று.
தென்னை காய்ந்து போன மரங்கள் தாம், ஆனால் அதன் உயரமான தண்டுகளின் துளைகளில்  புள்ளி ஆந்தை, பச்சைக்கிளி, பனங்காடை, மைனா, மரங்கொத்தி, கொண்டலாத்தி  என சாதாரணமாக நாம் பார்க்கக்கூடிய பறவைகள் முட்டைகள் வைத்து குஞ்சு பொரிக்கும்.  துளைகள் இப்பறவைகளால் ஏற்படுத்துவதல்ல, ஏனெனில் இதன் அலகுகள் அப்படியொன்றும் வலிவில்லை. காய்ந்த மரங்களின் தண்டுகள் வெய்யிலுக்கும், மழைக்கும் இளகிப்போய் துளை ஆவதுண்டு. இந்த பொந்துகளை இப்பறவைகள் பயன்படுத்திக்கொள்ளும். தற்போது மார்ச் (பங்குனி). இன்னும் ஒரு மாதத்தில் சித்திரை சுழி மழை வரும். பிறகு தென்மேற்குப்பருவ மழை. அப்போது நிறையப்பூச்சிகள் கிளம்பும். பிப்ரவரி நமக்கு வஸந்த பருவம். குளிர் முடிந்து கதிரவன் கதிர்கள் உக்கிரமாக எத்தனிக்கும் போது பழங்கள், மலர்கள் அரும்பி மலரும், காய்க்கும். எனவே இப் பறவைகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் காலமிது.
இந்த ரியல் எஸ்டேட் பேராசைக்காரகள் காய்ந்த தென்னை மரங்களை வெட்டத்தொடங்கினர். நானும் நண்பரும் உணவுக்குச்செல்லும் போது பேசிப்பார்த்த போது,குஞ்சோ அல்லது முட்டையோ இருந்தால் அந்த மரங்களை வெட்ட மாட்டோம் என்றார். ஆனால் மூன்று வாரம் கழித்து வெட்டி சாய்த்தார்கள். எமக்குத்தெரிந்து மூன்று கிளிக்குஞ்சுகள் மண்ணோடு மண்ணாகின.

பொள்ளாச்சிநெடுஞ்சாலை நான்கு வழிப்பாதை ஆகிக்கொண்டிருக்கிறது. நான் போன மாதம் சென்றிருந்த போது நானும் நண்பரும் நெடுஞ்சாலை ஓரம் மேற்குப்புறமாக நின்றிருந்த மழை மரத்தில் அதாவது தூங்க வாகை மரத்தின் கிளைகளில் நான்கைந்து காகத்தின் கூடுகள் பார்த்தோம். அப்போது இரு சிறுவர்கள் உண்டிவில்லில் கூட்டை அடிக்க, நாங்கள் அவர்களைத்துரத்தினோம். கைபேசி படம் எடுக்கப்பின்னால் ஓட, அவர்கள் பயந்து பாதம் பிடரியில் பட ஓடினர். அப்பாடா! நான்கு கூடுகள் காப்பாற்றி விட்டோம். சரி! கண்ணுகளா! நெடுஞ்சாலை அகலமாகிக்கொண்டிருக்கிறது, தெரியுமில்லே! இப்ப என்ன செய்வே மக்கா? மனிதன் சுயநலத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். செய்யத்தயங்கவும் மாட்டான். இயற்கை மவுனமாக கண்காணித்துக்கொண்டு தான் உள்ளது. இயற்கையின் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.