Saturday, September 13, 2014




குயில் அக்கா
(Common Hawk-Cuckoo or Brainfever Bird)
இது என்னடா! குயிலுக்கு அக்காவா! அப்போது தங்கை யார் ? எனக்கேட்டு விடாதீர். இது குயில் போல இனிமையாகக் கூவக்கூடியது தான். ஆனால் காய்ச்சலில் அனத்துவது போல விடாமல் குரல் கொடுக்கும். தொண்டை வலிக்குமே! எனக்கூட நான் நினைப்பேன். வாய் ஓயாமல் அதிகாலை ஐந்து மணிக்கு கத்த ஆரம்பித்தால் முக்கால் மணி நேரத்துக்கு கூவும். நான் பல முறை பிரம்ம மூர்த்தத்தில் எழும் போது கேட்டு சந்தோஷப்பட்டிருக்கிறேன். இப் பறவை பூங்காக்கள், அடவிய தாவரங்கள் வளர்ந்திருக்கும் இடங்களில் காணலாம். என் இல்லத்துக்கு மேற்குப்புறமாக அடவிய தாவரங்கள் வளர்ந்திருக்கும் இடம் உள்ளது. டார்ச் எடுத்துக்கொண்டு இன்னும் புலராத கங்குலில் மேற்குப்புறமாக ஒலி வரும் திசையில் செல்லலாமா என நினைப்பேன்.
விடிந்தும் விடியாத பொழுது இது குரல் கொடுக்கிறது. தனிமையாக மரக்கூட்டத்தினூடே இருக்கும் என்பது உண்மை தான். எனது நகரத்தின் மேற்குப்புறம் சந்தடியற்ற, தாவரம் அடவிய பகுதி உள்ளது. ஒரு நாள் சோளம் மாட்டுத்தீவனத்துக்காக பயிரிடப்பட்ட விளைநில மேற்குப்புறத்தில் மாமரக்கூட்டமிருக்க, அதிலிருந்து குயில் அக்கா குரல் கேட்டது. அப்போது காலை மணி 07.30 இருக்கும். உள்ளே சோளக்காட்டுக்குள் போய் பார்த்தேன். கண்ணில் படவில்லை. இதை ஒரு சில போது தான் பார்த்திருக்கிறேன். இது கூடு கட்டாது அடுத்தவனை நம்பி இருக்கும் பறவை.சாம்பல் நிறத்தில் சிக்கரா போன்றது. நிலா காயும் போது இது ‘எனது காதலி எங்கே?’ என இந்தியில்(pee-kahan?) கேட்கிறதாம். ‘மழை வருகிறது’ என மராத்தியிலும்(paos-ala)சொல்கிறதாம். இரு வாக்கியங்களும் அருமை. எதையாவது நினைத்துக்கொண்டு கேட்டால் அதுவாகத்தான் நமக்குத்தோன்றும்.
ஆங்கிலேயன் மூளைக்காய்ச்சல்(Brain fever) என்பது போல ஒலிக்கிறது என்கிறான். மூளைக்காய்ச்சல் வந்தவன் போல பிதற்றுகிறதா! சிக்கரா ஹாக் போல பறக்கவும் வல்லது. கம்பளிப்பூச்சி, மற்ற பூச்சி, பெர்ரி, காட்டுப்பழங்கள் உண்ண ஹாக் போல ஏன் பறக்கவேண்டும்?
சலிம் அலி இப்பறவையின் கூவலை எப்படி வர்ணிக்கிறார் படியுங்கள்; A loud, screaming brain-fever, brain-fever, repeated with monotonous persistency 5 or 6 times, rising in crescendo and ending abruptly. இதன் கூவல் ‘நோட்ஸ்’ வைத்து ஒரு பாடல் எழுதி ‘ட்யுன்’ போடலாம் என இருக்கிறேன்.
எது எப்படியோ! இப்பறவையின் விடிந்தும் விடியாத கூவல் இனிமை. குயிலக்கா…குயிலக்கா… என எனக்குப்பாடத்தோன்றுகிறது. இதை அடிக்கடி குயில் போல பார்க்கமுடியவில்லையே என எனக்குள் ஏக்கமிருப்பது உண்மை தான்.



Saturday, September 6, 2014

பீரடிக்கும் இளைஞர்கள்
சமுதாயச்சீரழவு
            குடிமக்கள் என்றால் தங்களுடைய சமுதாயக்கடமைகளைச்செய்து, தானும் தன் குடும்பமும் வாழ்ந்து, பிறரையும் வாழ்வில் நல் வழிப்படுத்துவது தான் நல்ல குடிமகனுக்கு அழகு. மேலும் பிறருக்கு சேவை செய்வதில் தனது தெய்விக உள்ளத்தைப்பார்க்க வேண்டும். ஆனால் இப்போது அரசு வருமானத்துக்காக, சாராயம் விற்று சாதாரண மக்களை குடிகாரமகனாக உருவாக்குவது நியாயமற்ற செயல். இதற்குரிய தண்டனை இறைவன் நீதி மன்றத்து முன்பு மிகப் பெரிய தண்டனையாகக் கிடைக்கும். கள் குடிக்கக் கூடாது, அரசு மட்டுமே சாராயம் விற்று பணம் செய்யும் என்று ஏழை மக்களிடமிருந்து பணத்தை உருவி அவனுக்கு இலவசங்களைக்கொடுத்து கெடுப்பது அருவருப்பாக உள்ளது. உழைக்கும் வர்க்கம் இப்போது குறைவு பட்டதற்குக் காரணம் இலவசங்கள் அரசு கொடுப்பதால் தான். இது நிதர்ஷனமான உண்மை.
            எங்கள் வீட்டில் சிறு தோட்டம், மற்றும் பொது இடப் பராமரிப்புக்கு வேலையாள் கிடைப்பதில்லை. நான் அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் ரிசர்வ் சைட்டை பராமரிப்பதால் எனக்கு வேலையாள் கிடைப்பதில்லை. நானே பாத்திகட்டுவது, களையெடுப்பது, நீர் ஊற்றுவது, மரம் வைப்பது,பிளாஸ்டிக் கேரிபேக்குளைப்பொருக்குவது என இருக்கிறேன். '62 வயதில் இது எனக்குத்தேவையா?' என மனம் நொந்து போகிறேன்.
 வேலையாளோடு பேசினால், அவன் போடும் சட்டங்களாவன;-
அரை நாள் தான் வேலை செய்வேன். காலை வந்தவுடன் போண்டாவோடு தேநீர், திரும்பும் போது வடையோடு தேநீர், சம்பளம் 500. இதற்கு ஒத்துக்கொண்டு அட்வானஸ் 100 கொடுத்தால் நாளை முடிந்தால் வருவேன்.’ என்கிறான்.
அரசு கட்டிலேறிய சாதாரண திராவிடஅரசியல்வாதிகள், சமுதாயத்தை எப்படி சீரழித்து விட்டனர் பாருங்கள். இப்படி ஒரு வேலையாள் சொல்வது எதனால்? 20 கி. அரிசி, சர்க்கரை, வேட்டி, சேலை, தொலை காட்சிப்பெட்டி, மிக்ஸி,ஃபேன், கிரைண்டர், சைக்கிள், பொங்கல் பரிசுகள் எனக்கொடுத்தால் அவன் வேலைக்குப்போகமாட்டான். மேலும் அன்னதானங்கள் என்ற பெயரில் அரசு,கோயில்கள், அறக்கட்டளைகள், மடாலயங்கள் இடும் சோற்றுடன் இலவசத்திருமணம், இலவசத்தாலி, கல்யாணத்துக்கு பணம், என வரிப்ணத்தை வாரி வழங்கினால் அவன் உழைப்பானா? அரசா? அல்லது அன்னமடமா? குடிகாரன் குடிப்பதற்கு இயற்கைச்சூழலைத்தேடி அமர்ந்து, குடித்துவிட்டு, பாட்டிலை உடைக்கிறான். அரசே! எந்த மாதிரி குடிமகன்களை உருவாக்குகிறீர்கள்? உங்கள் பதவி ஆசைக்காக பலியாகும் நாடே! நீ வாழ்வது எப்போது?