Tuesday, June 30, 2015


மரம் எனது உயிர்


86 year old Sri Palanisami in action. He planting a Mango sapling in front of their village Library

S/Sri Palanisami( 86 age) and Velusami,(81 age) Selakarachal villager, 


மரம் எனது உயிர்
இதை கலங்கல் கிளை நூலகத்திறப்பு விழாவின் போது மேடையில் சொன்னவர் 81 வயது மனதளவில் இளைஞர் திரு. வேலுசாமி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் செலங்கரிசல் எனும் கிராமத்தைச்சார்ந்தவர். காற்று பொச, பொச என வீசும் நீர் தட்டுப்பாடு உள்ள கிராமத்தில் ஆயிரம் மரம் வளர்த்த ஆபூர்வர். இவரது விவசாய நிலம் கைகொடுக்காதது போல, இங்கிருக்கும் பெரும்பாலான விவசாயிகள் அதே நிலைமையில் உளர். விவசாய மேட்டுக்காடுகளை காற்றாலைக்கு விற்றும், வாடகைக்கும் தந்து விட்டனர் பல விவசாயிகள். மர வேலுசாமி உண்மையில் மரம் தான். மரம் போல பலனை எதிர் பார்க்காமல் மரங்களை நட்டு வளர்க்கிறார். தனது சொந்தக்காசை செலவு செய்து மரங்களைப் பேணுகிறார்.
இது மாதிரி ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியரைப்பார்ப்பது அரிது. தனது இரண்டு மாத ஓய்வூதியப்பணம் ரூ. 40.000-த்தை வேலியிட்டு, மரநாற்றுகள்  கோயிலைச்சுற்றி, வைத்துள்ளார். நூலகத்தைச்சுற்றி, ஊராட்சியைச்சுற்றி மரங்கள் வைத்து வளர்த்து சோலைக்குள்அவை இயங்குவது போல குழுகுழு வென உள்ளது. மக்கள் மூடர்களாக உள்ளனர். ஆடு வளர்க்க மரக்கிளைகளை ஒடிக்கின்றனர். இவரது நண்பர் திரு, பழனிசாமி, 86 வயது பிராயத்தவர் இவருக்கு உறுதுணையாக உள்ளது, பக்கபலம். இரவுப்பொழுது கூட ஆடு வளர்க்கும் மூடர்கள் மரச்சிமிறு முறிப்பவர்களை நான் எப்படித்தடுப்பது என்கிறார்கள், இந்த பசுமைப்போராளிகள். புங்கன், நாவல், வேம்பு, மலையரசு, மரமல்லி, அரசு, அத்தி, மா என வகை, வகையாக வைத்து வளர்த்துள்ளனர்.
நான் கல்யாணமுருங்கை வேண்டுமென கேட்க, தார் சாலையோரமிருந்த ஒரேஒரு மரத்தில் அரிவாள் கொண்டு வந்து மூன்று கோல்கள் முள்ளுடன் வெட்டிக்கொடுத்த, இந்த இளைஞர்கள் வயதில் தான் முதியவர், ஆனால் செயல்களில் இளமை ததும்புகறது. கோயில், பள்ளி, அரசு அலுவலகம், பாதையோரம், புறம்போக்கு நிலம் என மரநாற்றுகள் நடப்பட்டு, அவைகளை வளர்த்து பசுமைப்போர்வையால் செலக்கரிசல் கிராமத்தைப்போர்த்தியுள்ளனர். பல வருடங்குளுக்கு முன்பு இவரது கிராம வீட்டுக்குச்சென்று என்னை அறிமுகப்படுத்திவிட்டு, என்னால் முடிந்த ரூ. 500 கொடுத்து அவரை மனசாற வாழ்த்தினேன். இவரை இளைஞர்கள் முன் உதாரண புருசராக ஏற்று, ஒவ்வொரு கிராமத்திலும் மர வேலுசாமி உருவெடுக்க வேண்டும்.
 உங்களுக்குள் உயிர் மூச்சாக சுழலுவது மரங்கள் சுத்திகரித்த காற்று. பிறகேன் மரங்களை உதாசினப்படுத்துகிறீர்கள்? நமது வாழ்வு ஆதாரமே மரங்கள் தாம். அவைகளை அழித்து விட்டு இன்னொரு சோமாலியா போல இந்தியாவை ஆக்குதல் தகுமா? தற்போது, எங்களின் நமது சுற்றுச்சூழலைக்காப்போம் ( protect Our Environment Trust) POET-என்ற இயக்கத்தின் மூலம் மரநாற்றுகளை மூட்டையிலிட்டு, கோவை கணபதியிலிருந்து செலக்கரிசல் கிராமத்துக்கு, 35 கி.மீ ஸ்கூட்டரில் பிரயாணித்து, ஆர்வப்பட்டு வளர்த்த முன்வரும் விவசாயிகள், மற்றும் மாணவிகள், குடிமக்கள் என இலவசமாக வினியோகிக்கிறோம். சில மரநாற்றுகளை நடவும் செய்தோம். இளைஞர்களே!  ஒரு பத்து விழுக்காடு மரத்தை நேசித்து, உங்கள் ஊரை, உங்கள் கிராமத்தை பச்சைக்கம்பளம் போர்த்துங்கள். காய்ந்து போன நதிகள் மீண்டும் உயிர்தெழும் தோழர்களே! நம்பிக்கையோடு செயல் படுங்கள். நீருக்காக, கேரளத்தையும், கர்நாடகத்தையும் கையேந்தி நிற்கும் அவலத்தை ஒழிப்போம். மரங்களை வளர்த்து மழை வருவிப்போம். சுபிட்சம் எங்கும் பரவி ஓடும் தோழா! நம் சுபிட்சத்தை மரம் பார்த்துக்கொள்ளும்.
ஓ! மரமே! எனதுஉள்மூச்சு உனது வெளிமூச்சு
எனது வெளிமூச்சு உனது உள்மூச்சு


Sunday, June 14, 2015

Oorvelan kuttai

Kalangal
ஊர்வேலன் குட்டை
            ஊர்வேலன் குட்டை நிறைந்து ஐந்து வருஷங்களிருக்கும். சனிக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு பெய்த மழை 91 mm என்று நண்பர் சொல்ல நான் பிரம்மித்துப்போனேன். அன்று இடி மின்னலுடன் பலத்த மழை. ஐந்து வருஷத்துக்கு ஒரு முறை மழை செம்மத்தியாக தட்டுகிறது. இடையில் அப்படி மழை பெய்வதில்லை என்று பறவை குருநாதர்(வயது 80), பக்கத்துக்காலனி பெரியவர் (வயது 80) இருவருமே தங்கள் அனுபவத்தில் சொல்கின்றனர். ஒரு இரவில் கொட்டிய மழை குட்டையை நிரப்பி விட்டது. ஞாயிறு அன்று பார்த்த போது சேறுடன் கலங்கிய நீர் நின்று கொண்டிருந்தது. வியாழன் அன்று பார்த்த போது தெளிந்திருந்தது.
கலங்கிய நீருக்கும், குட்டை நிறையத்தண்ணீர் இருந்தாலும் பறவைகள் வராது. கலங்கிய புது நீரில் ஜீவராசிகள் உற்பத்தி ஆகாதது பறவைக்குத்தெரியும். மேலும் விளிம்பு அளவு இருக்கும் நீரில் வேடர்(Waders) பறவைகள் நின்று மீன் அல்லது மற்றஜுவராசிகளை கொத்திப்பிடிக்க முடியாது. இன்னொரு மழை பெய்திருந்தால் கடைவிழுந்து நிரம்பிப்போயிருக்கும். முக்குளிப்பான் ஜோடிக்கு புதிய மழைச்செந்நீர் கூட ஆனந்தம். அமைதிப்பிரதேசத்தில் முக்குளிப்பான்கள்‘குலவை’யிட்டுப்போனது மனதை இதமாக்கியது. குட்டையை மனித ஜன்மங்கள் எப்படியெல்லாம் நாசம் செய்கின்றனர். ஊர்க்குப்பை, பவுண்டரிக்கழிவு, வீடு உடைப்புகள் என சொல்லி மாளாது. குழாயில் நீர் கொண்டு வந்து கொடுக்க, மக்கள் குளம் குட்டைகளை உதாசினப்படுத்துகின்றனர்.
காலை, மாலை சூர்ய உதயம், அஸ்தமனம் பார்த்து ரசிக்கத்தெரியா ஜன்மங்கள். அவர்களுடைய குறிக்கோள், குளம் குட்டை மேல் கட்டிடம் கட்டி காசு சம்பாதிக்க வேண்டும் என்பது தாம். எங்கிருந்தோ ஒரு கொக்கு பறந்து வந்து இறக்கையை மடக்கியவாறு அமர இடம் பார்க்க, ஒரு நீர்க்காகம், பெண் ஒரே ஒரு கட்டிய சேலையை உலர்த்துவது போல உலர்த்த, கால் பகுதி மூழ்கிய கருவேலமரங்கள் நீரில் அசைய, மாக்களே! இதை ரசிக்க நேரமேது? அந்தக்காலங்களில் ஜனத்தொகை குறைவு. மலம் கழிக்க ஊர் எல்லையில் ஒதுங்க வேலமரங்களை வைத்தனர். நீர் இல்லாமலே வரட்சியைத்தாங்கி வளரக்கூடியவை. அவைளை வெட்டி தண்ணீர் காயவைத்து ஊற்றியாயிற்று. இப்போது தில்லி முட்கள் எனும் வேலி காத்தான்கள்.

ஊர் வேலன் குட்டைக்கு மழை பெய்தால் காட்டு நீர் தான் ஆதாரம். புங்கன் குட்டை என்ற இன்னொரு குட்டை கலங்கல் பாதைக்கு கிழக்குப்புறமாக உள்ளது. இதற்கும் காட்டு நீர் தான் ஆதாரம். ஆனால் தறிகெட்ட மக்கள், இதையெல்லாம் அசட்டை செய்து, பஞ்சாயித்தும் காசு வாங்கிக்கொண்டு, வசதிகள் செய்து தர வீடுகள் உருவாக காட்டில் மழைநீர் வடிந்து இந்த இரண்டு குட்டைகளுக்கும் நீர் வந்து நிரம்ப வாய்ப்பில்லாமல் போனது. இனி வருங்காலத்தில் இந்த இனிய இயற்கை காட்சி தரும் குட்டைகள் இல்லாமல் போகும். சாமானியன் யான் ஏதும் செய்ய முடியாது போகும். 

Friday, June 5, 2015



 இடி விழுந்த இடம்



பூமியில் கத்தி சொருகியது போல் காணப்புடும் இடம் இடி விழுந்து இடம்

            வாழ்நாளில் நான் இடி விழுந்த இடம் பார்த்ததில்லை. நிறையப்பேர் என்னை மாதிரி தான். நான் என் வீட்டருகில் இருக்கும் விஜயவிநாயகர் கோயிலில் இருக்கும் போது நண்பர் பேச்சியண்ணன் பக்கத்துக்காலனி நேரு நகரில் இடி விழுந்ததாகச்சொன்னார். பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது என்றார். என் வீட்டிலிருந்துதென்கிழக்கு திசையில் ஒரு கி.மீ. தான் இருக்கும். ஆம்! சனிக்கிழமை அதிகாலை நான்கிருக்கும் ‘சடச்சட’ வென செமத்தியான மழை. இடி மின்னல் கர்னகொடூரமாக உருமி அதிர்ந்தது. இரண்டு இடி நிலம் அதிர்வது போல விழுந்தது. மாடியில் தனியறையில் படுத்திருந்த எனக்கு பயம் கவ்விக்கொண்டது. எப்படா! இடிஇடிப்பது ஓயுமென இருந்து பிறகு அரைகுறை உறக்கம்.
ஞாயிறுக்கிழமை பேச்சியண்ணன் இந்தச்செய்தியைச்சொல்ல இடி விழுந்த இடத்தைப்பார்க்க ஆவல் முட்டியது. இரண்டு நீர் உட்கொண்ட மேகங்கள் மோதிக்கொள்ளும் போது மின்சாரம் ஏற்பட்டு முதலில் மின்னல் கண்ணுக்குத்தெரிகிறது. பிறகு காதுக்கு இடி சப்தம் கேட்கிறது. பொதுவாக மக்கள் பயந்து போய் அர்ஜுனா அர்ஜுனா என்று ஜபிக்க ஆரம்பித்து விடுவர். மின்னல் ஒரு விந்தை. அதிலிருந்து மின்சாரம் எடுக்க முடியுமா? அதிலிருந்து எடுக்க நமக்கு வல்லமை குறைவு. இடி மழையில் காளான்கள் பூமியிலிருந்து மேல் எழும்பி வரும். நீர் இடி நீரைத்தரும். நெருப்பு இடி தீப்பிளம்பு ஆகும். இடி விழுவது இல்லை. நான் சிறுவனாக இருக்கும் போது இடி விழுவது என்றால் ஒரு பெரிய பாறை மாதிரி எதோ ஒன்று வானிலிருந்து விழும் என்று நினைத்திருந்தேன். மிகைபட்ட மின் தாக்கு.
         மின்னல் பூமியை நோக்கி வருவது அதற்கு எதாவது ஒரு பொருள் வேண்டும். தனது சக்தியை வடிய அது பூமியை நாடுகிறது. உயரமான கட்டிடங்கள், மரங்கள் போல இடி தாக்கலாம். உயரக்கட்டிடங்களில் இடி தாங்கி வைத்துள்ளனர். மின்னல் வெட்டி வரும் போது மரங்களுக்கு அடியில் இருக்கக்கூடாது என்கின்றனர். நான் இப்போது தான் மின்னல் தாக்கிய இடத்தைப்பார்க்கிறேன். கத்தியில் துளைத்தது போல ஒரு பிளவு. அதிலிருந்து மின்னல் தாக்கிய சனி அதிகாலையிலிருந்து, அன்று மதியம் வரை நீரூற்று அதன் வழியே வந்து கொண்டிருந்தது. பிறகு நின்று விட்டது. அது வெற்று இடம். வீடுகட்ட யாரோ வாங்கிப்போட்டிருக்கின்றனர். அவர் அங்கு ஆழ்குழாய் இட்டால் தண்ணீர் வற்றாது என்கின்றனர். நல்லவேளை! அந்த மின்னல் தாக்கிய இடத்தின் மேற்குப்புறமும், வடக்குபுறமும் தார்சு வீடுகள். அவை மேல் விழவில்லை.      
             Lightning arrester, Lightning conductor, Lightning rod இவை எல்லாம் மின்னல் கட்டிடம், மின் டவர் ஆகியவற்றைத்தாக்கினால் மின் கடத்தி பூமிக்குள் அனுப்பி விடும். மின்னலில் தான் எத்தனை வகை! lightning எனத்தட்டி வலைதளங்களுக்குப் போய் படித்தால் பிரம்மிப்பாக உள்ளது. உன் தலை மேல் இடி விழ என யாரையும் சொல்ல வேண்டாம். Star watching போல Lightning watch , மழை பெய்யும் போது கவனித்தால் பத்து விதமான மின்னல்களை கண்டு ரசிக்கலாம். ஒரு நாளில் பார்ப்பது அரிது.ஆனால் கண்ணுக்கு யார் உத்திரவாதம்? ஆகவே வலை தளத்திலாவது கண்டு ரசியுங்கள்.