Wednesday, October 1, 2014


சுறுட்டைப்பள்ளி    ---          ஒரு பயணம்



                                          

                    பயண சுகம் ஆன்மாவுக்கு தேவையானது. அரக்கோணத்திலிருந்து திருவள்ளூர் வரை ரயில், பிறகு ஆட்டோவுக்கு பத்து ரூபாய் கொடுத்து, பேருந்து நிலையம் சென்றேன்.அந்தப்பேருந்து பூண்டி நீர்த்தேக்கம் வழியாக உளுந்தூர் பேட்டை சென்று, அங்கிருந்து வேறொரு பேருந்து மூலமாக சுறுட்டைப்பள்ளி போய்ச்சேர்ந்தேன். தனிமைப்பயணம். சுறுட்டைப்பள்ளியில் எம்பெருமான் ஆலகாலவிஷத்தை அருந்தி, சிறிது மயக்கத்தில் அம்பாள் பார்வதி மடியில் படுத்து ஓய்வு கொள்கிறார். தேவர்கள் சமுத்திரத்தைக்கடைந்து அமிர்தம் எடுக்க நினைக்க ஆலகாலவிஷம் வெளிப்பட்டதால் பயந்து அரற்றி சிவபெருமானிடம் வேண்ட, அவர் விஷத்தைஉள்ளகையில் வைத்து சிறியதாக்கி உட்கொள்ள, பார்வதி தேவி கழுத்தைப்பிடித்து உண்ணலாகாது எனப்பிடிக்க, விஷம் கழுத்துக்கண்டத்தில் தங்கி விட்டது. எனவே நீலகண்டர் எனப் பெயர் பெற்றார்.
தெய்வங்கள், சிவபெருமானிடம் ஓடோடி வந்து, அலறி உதவி கேட்டனர். யாவரும் அழியும் நிலைமை. அமுதம் கிடைக்காது போகும். விஷ்ணு, பிரம்மா போன்ற தெய்வங்கள் பயப்பட்டு, விஷத்தைப்பங்கி உண்ணலாம் எனக்கூடச்சொல்லவில்லை.உமாதேவி தடுத்தும் கேட்டாரில்லை. விஷத்தைத்தொண்டையில் அடக்கினார். இத்தகைய கருணையாளர். அவரால் தெய்வங்கள் பிழைத்தன.
அப்பர்பிரான்
பொங்கி நின்றெழந் தகடல் நஞ்சினைப்
பங்கி உண்டதோர் தெய்வமுண்டோ சொலாய்-  5-6-1,2

                கோயில் பழமையான கோவில் என்று சொல்லமுடியாது. புதுப்பித்துள்ளார்கள். சிற்பங்கள் இல்லை. அனந்தசயனர் விஷ்ணு பல கோயில்களில் Srirangam மாதிரி தரிசிக்கலாம். சிவபெருமான் பார்வதிதேவி மடியில் படுத்த நிலை ஒரு காணக்கிடைக்காத காட்சி. கோயிலில் கூட்டமில்லை. தரிசித்துவிட்டு வெளியில் வந்து நிழலில் அமர்ந்தேன். மண்டபத்தில் ஒரு அன்பர் மூன்று பழம் கொடுக்க ஒரு பழம் போதுமே என வாங்கிக்கொண்டேன். சந்நதியில் காசு கொடுத்து லட்டு ஒன்று வாங்கினேன். காகம் ஒன்று தையரியமாக, அருகில் வந்து லட்டு கேட்டது அந்நியம். அது பக்தர்களிடம் உணவு பெற்றே பழக்கப்பட்டு விட்டது. உணவு தேட எங்கும் போவதில்லை.

            திருப்பு பயணத்தில், ஒரு ஷேர் ஆட்டோவில் பின்புறம் லக்கேஜ் மாதிரி அமர்ந்து வந்தேன். ஒரு மணிப்பொழுது காத்துக்கிடந்து ஒரு பேருந்தைப்பிடிக்க திருவள்ளூர் வரை கூட்டநெரிசலில் நின்று கொண்டு வந்தேன். ஆட்டோ கேட்டால் ரூ 50 என ஒரு மினி பஸ்சைப்பிடித்து ரயிலடி வந்தேன். பசி எடுக்க, கடலைமிட்டாய் கிடைக்குமா என கடைகளில் பார்க்க கிடைக்கவில்லை. நல்லவேளை! ஆவின் பாலகம் ரயிலடியில் தென்பட பால் அருந்தினேன். மதியம் இரண்டைநெருங்கிக்கொண்டிருந்தது. ரயிலுக்காகக்காத்திருந்தேன். வாழ்க்கை ரயில் பாதை போல நீண்டிருக்கிறது என் முன்னே…………………….

No comments:

Post a Comment