Monday, January 27, 2014

மாறுபட்ட கோணத்தில்
மயில்                 
Common Peafowl                                                        
(Pavo cristatus)                                                                  
              
சூலூர் அருகாமை ஆச்சான் குளத்தின் ஓரம் நடனம்

தைபூசத்திருநாளுக்கு இறகுகளை உதிர்த்த மயில்

            மயில் தேசியப்பறவை. மயில், ரயில், யானை எப்போதுமே வியப்பையும், மகிழ்வையும் எந்த வயதிலும் கொடுக்கக்கூடியவை. மயில் தோகை விரித்தாடினால் மழை வரும் என்பதெல்லாம் வாய் வழி, செவி வழி உலவும் கதை. ஆண் மயில் கழுத்து நீலநிறமும், பெண்மயில் கழுத்து பச்சை நிறமும் வெல்வட் போல நம்மை மயக்கும். ஆண்மயில் தோகை விரித்தாடும் போது நாம் மட்டும் மயங்குவதில்லை. விரிந்தாடி சிலிர்க்கும் தோகை அழகைப்பார்க்க தோகையற்ற பெண் மயில்கள் சில சுற்றி நின்று வேடிக்கை பார்த்து மயங்கும். நாமோ மயில் தோகைகளை இடுப்பில் ஏந்திக்கொண்டு கைகளால் தோகையைச்சிலிர்த்தாடும் மங்கையை திருவிழாவில் பார்க்க கூடுகிறோம்
                   பறவைகளில் ஆண் பறவைகளே அழகு படைத்தவை. இனிமையாக குரல் கொடுக்கவும் வல்லவை. அவைகள் பெண் பறவைகளைக் கவர இறைவன் கொடுத்தது. பரஸ்பரம் ஆணும்,பெண்ணும் கவரும் உத்திகள் மாநிடருக்கு மட்டும் உரியதல்ல. எல்லா உயிரினங்களுக்கும் இந்த யுக்தியை இறைவன் வைத்துள்ளார். மயில் இந்த கால கட்டத்தில் அதிகமாகிப்போக விவசாயிகள் தங்கள் காய்கறிகள் கொத்தப்படுகின்றன, என தாக்கீது கொடுக்கின்றனர். அவைகளுக்குரியதான அடவிய முட்காடுகள், இலையுதில் காடுகள், ஓடை, ஆறு கொண்ட மலை அடிவாரம் போன்றவற்றில் வாழக்கூடியவை. அவைகளுக்கு விவசாயிகளின் விளை நிலங்களில் உள்ள தக்காளி, கத்தரி, போன்ற காய்கறிகள் அவசியமில்லை. இவை உண்ணுவது பூச்சியினம், பாம்பு, தானியம், தாவரத் தண்டு மட்டுமே. அவைகளுக்குரிய வாழிடங்களைச்சிதைத்ததால் விளைநிலங்களுக்கு வந்து விட்டன. மலை அடிவாரம் வரை ஆக்கரமித்து விளைநிலமாக்குவது, வீட்டுமனைகள் இடுவது, இப்படியே மயில் வாழிடம் போல யானை வாழிடத்தையும் குறுக்கிக்கொண்டே போனால் அவை எங்கு செல்லும்
                    மாநிடருக்கு மட்டும் இந்த புவியுலகு சமைக்கப்படவில்லை. எல்லா உயிர் இனங்களும் சமமாகப்பங்கிட்டு ஒருவருக்கொருவர் இடையூறில்லாமல் வாழ்வது சுவர்க்கம். மனிதன் ஆற்றிவு கொண்டு பேராசைப்படாமல், அனைத்து உயிரினங்களையும் அரவணைத்து மகிழ வேண்டும். எந்த உயிரையும் விஷம் வைத்துக் கொல்வது இரக்கமற்ற தன்மை. இறைவனில் கருணையும், அன்பும் இருப்பதால் தான் நீவர் புவியில் உயிர் தப்பி இருக்கிறீர்கள். இறைவன் போல நீங்களும் இருக்கவேண்டும். மயில் பறப்பது ஒரு விந்தை. இரவில் உயரமான மரத்தில் அமர்ந்து உறங்கும்
            அழகன் முருகனின் வாகனம். இந்த வாகனமான மயில் கார்த்திகை, மார்கழியில் முருகப்பெருமானின் தைப்பூசக்காவடிக்காக தோகைகளை உதிர்த்துவிடும். மார்கழி முடிந்த தை மாதத்தில் பழனிக்கு காவடி எடுக்கும் பக்தர்கள் முட்காடுகளில் உதிர்ந்து கிடக்கும் இறகுகளை சேகரித்து காவடியை அலங்கரிப்பர். நானும் கூட சிறுவயதில் உதிர்ந்த மயில் இறகை பொறுக்கி ஒரு புத்தகத்தில் வைத்து அது குட்டி போடுமா எனக்காத்திருந்த காலமும் உண்டு. அது ஒரு ஆச்சர்யம் குமிழிடும் அழகிய கனா காலம். மயில் எனக்கு எப்போதும் வசிகரிக்கும் தேவதை. உங்களுக்கு அப்படி இல்லையா?

No comments:

Post a Comment