புத்தகத்திருவிழா
ஈரோடு புத்தகத்திருவிழாவுக்குப்போயிருந்தேன்.
திருவிழாக்கூட்டம் தான், ஆனால் புத்தகம் வாங்குவதில் தயக்கம் காட்டும் கூட்டம் தான்
அதிகம். சுத்துப்பட்டு பல மாவட்டங்களிலிருந்து சுற்றுலா போல வந்த பள்ளி மற்றும் கல்லூரி
மாணவ, மாணவிகள் வெள்ளம் அப்படியே கால்வாய் போல புத்தகக்கடை வழித்தடத்தில் ஓடியது. புத்தகம்
எப்படிப்பார்ப்பது, அதை எப்படித்தான் தேர்வு செய்வது? என்ற அடிப்படை அறிவு அற்ற செம்மறி
ஆட்டு மந்தைகள் போவது போல இருமருங்கும் உள்ள புத்தகக்கடைகளின் வழித்தடத்தில் புழுதியைக்கிளப்பிக்கொண்டு
நடந்தன(ர்). பல மாணவச்செல்வங்கள் கடைக்கு வருவர், புத்தகத்தைத்தடவிப்பார்த்து, சீட்டுக்கட்டு
கலக்கும் போது புரட்டுவுமே அது போல புத்தகப்பக்கங்களை புரட்டிவிட்டு, மற்ற புத்தகங்களின்
படங்களைப்பார்த்து அப்படியே நகர்ந்து போய்விடுவார்கள். இதைவிட அறிவு சால் ஆசிரியைகள்
அதைவிட சொல்லக்கூடிய தரத்தில் இல்லை. ஆட்டு மந்தைகளை மேய்ப்பவர் போல வந்து போயினர்.
புத்தங்களைப்பார்த்த கண்களில் எந்த வித ஆர்வமும் இல்லை. நான் பல மாணவ மணிகளுக்கு எப்படிப்புத்தகம்
பார்ப்பது எனச்சொல்லிக்கொடுத்தேன். ஒரு புத்தகத்தின் தலைப்பை முதலில் படி, பிறகு யார்
எழுத்தாளர் எனப்படி, அதன் பிறகு பின்னட்டையில் அந்தப்புத்தகத்தில் என்ன உள்ளது என சில
வரிகளில் சொல்லியிருப்பார்கள். பின்னாலேயே விலையிருக்கும். கண்காட்சியாக இருப்பதால்
விலையில்10% கழிவு, என சொல்லிக்கொண்டிருந்தேன். பல குழுவை என்ன பிக்னிக்கா எனக்கேட்டதற்கு, ஆம் என்றனர். சில குழுக்களிடம் என்ன எக்ஸ்கர்சனா எனக்கேட்டதற்கு ஆம் என்று உண்மையை ஒத்துக்கொண்டனர். திருவிழாவில்
எதையாவது வாங்குவார்கள், இங்கு அதுவும் இல்லை. கண்காட்சி தான். நூல்கள் கண்ணுக்கு காட்சி
தரும் ஒரு பொழுது போக்கு. 200 கடைகள் இருக்கும். பள்ளி பேருந்து புறப்படத்தயாராக உள்ளது,
முன்புறம் வரவும் என ஒலிபெருக்கியது வேறு, தமாஷ்சாக அவ்வப்போது கேட்டது. ஆசிரியைகள்
மாணவமணிகளுக்கு எப்படி, பாடமற்ற புத்தகம் பார்ப்பது என அடிப்படையைக்கூட சொல்லி அழைத்து
வரவில்லை. எவர் கையிலும் திருவிழாக்கடைகளில் வாங்கப்பட்ட மருந்துக்குகூட ஒரு நூல் இல்லை.
ஒரு 50, 100-க்கு என வாங்கியிருந்தால் சந்தோஷப்படலாம். பதினைந்து வயதைத்தாண்டிய மாணவ
மைனர்கள், பெண்கள் பின்னால் வட்டமடித்துக்கொண்டிருந்தனர். இந்தத்தலைமுறை தொலைக்காட்சியாலும்,
மொபைல் எனும் கைபேசியாலும் மற்ற நூல்கள் படிப்பதில் சொட்டும் பரவசத்தை இழந்த ஆட்டுமந்தைகள்.
பாவம்! பிறகு ஜொச்சி, பஜ்சி கடைகளில் அலைமோதினர்.
No comments:
Post a Comment