Sunday, March 6, 2016


மலை முகடு- விமர்சனம்
ஓதிமலை

மஞ்சம் பட்டி
மலை முகடு – நூல்
நூலாய்வு……….                                                           சூலூர் கலைப்பித்தன்

மலையும் காடும் மனதுக்கு மகிழ்வைக்கொடுப்பனவாகும்.மலையோடும் காட்டோடும் இணைந்து வாழ்பவர்கள் இறைவனோடு உறவாடி வாழ்பவர்கள் என்று கூறலாம். அதனால் தான் சித்தர்களும், முனிவர்களும், தவசிகளும் இயற்கையொட்டி வாழ்ந்தார்கள். நம்மைப்போன்றவர்கள் அப்படியொரு மலைவனவாச ஆனந்தத்தைச் சந்திக்க முயற்சித்தால் சின்ன சாத்தன் போன்றவர்களின் நூலைப்படித்து செல்வது நல்லதாகும்.
            அவர் பயணிக்கும் போது, வனவலத்தை காசு கொடுத்து வராத சுகம் என்கிறார். எப்படியெனில் வனவலம் புத்துணர்வு தரும். அதை தண்டம் என்று யாரும் கூறிவிடமுடியாது. நடக்க மறந்தவர்களுக்கு இது முடியாது. வனவலத்தில் இயற்கை அறிவு, ஒருங்கிணைப்பு, ஒற்றுமை, தைரியம், சமயோசிதம், உடல்வலிவு, பழங்குடி வாழ்க்கை முறை, மூலிகை, விலங்கியல், தாவரவியல், புவியியல், மண்ணியல், திசைகள், வரைபட அறிவு என பலவும் பெறலாம். அதாவது  ஒரு பல்கலைக்கழகப்படிப்பே படிக்கலாம் என்கிறார்.
            தூவானம் காட்டில் தவழும் ஆற்றைப்பிரித்துக் கூறியிருக்கும் விதம் அழகு சேர்க்கிறது. விடலையாறு, வாலிப ஆறு, வயோதிக ஆறு எனப்பிரித்து கூறுகிறார். அங்கிருந்த நீர்வீழ்ச்சியில் இவர் நீராடும் போது இவர் கவிஞரும் கூட என்பதை நீரூபிக்கிறார்.
            நீரோடு நீராகக் கரைந்து போவேன்
            மேகத்தோடு மேகமாக நகர்ந்து போவேன்
வனவிலங்கு கணக்கெடுப்பு எந்த முறையில் எடுக்கப்படுகிறது என்பதை கூறியிருப்பது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
            வாண்டல் டேம் என்று ஒரு டேம். இந்த பயண வழியில் ஒரு மலையருவி வருகிறது.அதில் இவர் மனம் குளிர குளிக்கிறார். நண்பர் இளங்கோவன் கூப்பிடுகிறார். அதற்கு இவர் சலித்துக் கொண்டுகூறும்போது,‘பெண்உதட்டில்முத்தமிட்டுக்கொண்டிருந்தவனைப்பிரியச்சொன்னது போல’… உணர்வில் தோய்ந்து வெளியேற மனமில்லாமல் வந்தேன் என்கிறார். இது இயற்கையோடு இணைந்த இன்பத்துப்பாலின் வெளிப்பாடு.
            நான் அடிக்கடி மலைப்பிரதேசம் செல்லக்கூடியவன். எனக்கென்னவோ இயற்கை மீது அப்படியொரு வசீகரம். நீலவானம், பச்சையாகத்தேயிலைத்தோட்டங்கள், அதன் நடுவே சில்வர் ஓக்மரங்கள், யுகலிப்டஸ்கள் நெடிதுயர்ந்து வானம் துடைக்கும் ஒட்டடைக்குச்சிகள் போன்ற நடுக்கிளைகள். ஓ…என்னவேன்று நான் சொல்வேன்? என்கிறார். அதனால் ஒரு மலைவாழ் பெண் ஆடு மேய்ப்பதை இவர் ஆட்சேபணை செய்கிறார். ஆடு வளர்த்தால் காடு போய்விடும் என்கிறார். என்னே! இவரது இயற்கை வெறி!இயற்கையை விரும்பி தினம் கலந்தால் நோயில்லை.
            மலைமுகடுஆசிரியர்சின்னசாத்தன்நூலின்ஒவ்வொரு வனவலக்கட்டுரைத்தொடக்கத்திலும் உலகப்பேரறியர்களின் பொன்மொழிகளைக்கூறி தொடங்கியிருப்பது அழகு. ‘பூமி அனைத்து மக்களின் தேவைகளையும் பார்த்துக்கொள்ளும். ஆனால் தனி மனிதனின் பேராசைக்கு அது ஈடு கொடுக்க முடியாது’ - மகாத்மா காந்தி. இவை இயற்கையை சீரழிக்காதீர் என தாக்கீது கொடுக்கின்றன. பின் வரும் கட்டுரைகள் இயற்கையை ரசித்து இன்புறத்தூண்டுகின்றன.
            வனவலம் பத்து நாட்களுக்கு ரீங்காரமிடும். பிரியும் போது ஏக்கமாகயிருக்கும். அங்கங்கே உதிர்வும், பிரிவும் இருக்கும். இப்படித்தான் பிறப்பும், இறப்பும். தனித்தனியாக வருவோம். போவோம். யாரும் எவரும் சேர்ந்தே இருப்பதில்லை, எனத்தத்துவம் பேசுகிறார். பெருமாள் முடி மலைப்பயணத்தில் ஆசிரியர் GPS எனும் (Global position system) கருவியின் பயன்பாட்டை விளக்குகிறார்.
            மானாம்பள்ளி வனவலக்கட்டுரையில் ஆசிரியர் கொங்கு நாட்டு வரைபடத்தைக்கூறுகிறார். வனம் கொன்ற வரலாறு எனக்கூறும் இவர் ஆங்கிலப்பேராசைக்காரர்கள் எப்படியெல்லாம் வனத்தை அழித்தனர் என படம் பிடித்துக்காட்டுகிறார். தர்மலிங்க ஸ்வாமி மலை என்ற மலையேற்றக்கட்டுரையில் அந்தப்பகுதியில் இருக்கும் ராணுவப்பயிற்சி முகாமைக்குறிப்பிடும் போது ‘ராணுவத்துக்கு செலவழிக்கும் பணமிருந்தால் உலகிலேயே வறுமையை ஒழித்து விடலாம்’ என்கிறார்.
            கழுகு மலை மலையேற்றக்கட்டுரையில் அங்குள்ள கோயில் முற்றுப்பெறாமல் பாதி நிலையில் நிற்கிற நிலை கண்டு வேதனையில் ஆசிரியர் அதைப்பற்றிக்கூறும் போது, ‘ எனக்கு இந்த வெட்டுவான் கோயில் முற்றுப்பெறாமல் நிற்பது கவலை அளிக்கிறது. இனிமையான கீதம் பாதியில் நின்றது போல……அழகிய இளம் பெண் தன் யவ்வன வயது கடக்கும் முன்னே இறந்து விட்டது போல…. சுவராஸ்யமான கதை பாதியில் நின்றது போல… என வர்ணனை படிப்போரையெல்லாம் வருத்தத்தில் ஆழ்த்துகிறது.
            நீர் காகம் இறுதிப்பகுதி வேட்டைக்காரனுக்கும், பறவை ப்ரியருக்கும் நடக்கும் சம்பாஷணை போர் வித்தியாசமான உக்தியில் போகிறது. வேட்டைக்காரன் நீர் காகத்தை சுட விரும்புவதை, பறவைப்ரியர் அதை எப்படியெல்லாமோ தடுத்தும், இறுதியில் வேட்டைக்காரன் வெற்றிக்களிப்பில் நீர் காகத்தை சுட்டு வீழ்த்துவது மனதில் வடு ஏற்படுத்தி விட்டு நினைவில் அகலாத சம்பவமாக உள்ளது.

வனவலப்பயணம், மலையேற்றம், இலக்கிய நயமான இருவேறு துருவத்தில் இயற்கை பற்றிய கணவன் மனைவி சம்பாஷணை, கட்டுரைகளில் பறவைப்பிரியர்களுக்கு விருந்து, பல இயற்கை சால் அறிவுப்பொக்கிஷம் என கைப்பிடித்து வனத்துக்குள் அழைத்துச்செல்லும் சின்ன சாத்தன், இயற்கை அன்னைக்கும், ஏன் தமிழன்னைக்கும் புதிய அணிகலன் பூட்டி அழகு பார்க்கிறார். வாசித்தால் நாமும் தான். தமிழுக்குப்புதுமை படைக்கும் நூல். இது ஒரு பசுமை இலக்கிய விருந்து.

No comments:

Post a Comment