Thursday, January 31, 2013




இயற்கை அறிவு


இன்றைய மாணவர் எதெதோ படிக்கிறார்கள். ஆனால் இயற்கையைப்படிப்பதோ புரிந்து கொள்வதோ இல்லை. இதனால் இயற்கையைப்பேணிப்பாதுகாப்பதில்லை. அதை பெருமளவில் சிதைக்கிறான். இயற்கையைக்கண்டு வியக்கவேண்டும். நீர், நிலம், ஆகாயம், நெருப்பு,காற்று என்ற பஞ்சபூதங்களில் இறைவன் இருக்கிறார். இவைகளை மாசுபடுத்தினால் உயிரினத்தில், (நாம் உட்பட) விஷம் ஏறும். பருவ மழைகள் அற்றுப்போனதற்குக்காரணம் மனிதன் தான். விலங்குள் அல்ல. நீரின்றி உலகம் அமையாது. குழாயில் நீர் தருவிக்கப்போய் குளம், ஆறு, கடல் ஆகியவற்றை மனிதன் மறந்தே விட்டான். அதில் சாக்கடை ஆறுகளை விடுகிறான். பள்ளி, கல்லூரிகளில்,  பொறியாளராக்கி பணம் சம்பாதிப்பது மட்டுமே நிகழ்கிறது. அதனால் மலைக்கு வெடிவைத்து இயற்கைச்செல்வங்களை சூறையாடுகிறான். அளவுக்கு அதிகமாக வாகனங்களை உற்பத்தி செய்து கார்பன் மானாக்சைடை ஏற்றி காற்றை நஞ்சாக்குகிறான். இயற்கை சீரழிந்தால் மனிதனும் அழிவான். நான் தரும் இயற்கை காட்சியை ரசிப்பதோடு நில்லாமல் அருகாமை இயற்கைக்கு சேவை செய்யுங்கள்.  

Monday, January 28, 2013


கண்ணுக்குள் வானவில்

                எவ்வளவோ பேருடன், எட்டு வயது குழந்தையும் கூட நிழற்படம் எடுக்கும் காலமிது. இப்போது காமராவே எல்லாம் பார்த்துக்கொள்கிறது. ஷட்டர் வேகம், அப்ரச்சர் ஒளி அளவை, ஜும், தூரம் என ஆட்டோ மோட் பார்த்துக்கொள்கிறது. குழந்தை க்ளிக் செய்தால் போதும். துள்ளியமான படங்கள் வந்து கணணியில் விழும். அதை போட்டோ ஷாப்பில் சலவை செய்து பேஸ் புக்கில் இட்டு பெயர் வாங்கலாம். பறவை கண்காணிப்பு காமராவோடு செய்யக்கூடாது. பைனாகுலரில் பறவை பார்த்து அடையாளம் கண்டு பரவசப்படவேண்டும். போட்டோகிராபியும், பேர்ட் வாட்ச்சும் சேர்ந்து செய்வது இரு குதிரையில் சவாரி செய்வது போல் என, என் குருநாதர் டாக்டர் ரத்னம் சொல்வார். சென்ற செல்வாய் அன்று வேலை நாளில் கூட பதினொரு நபர் பதினொரு காமராவுடன் கண்ணம்பாளையம் குளத்தில் சுற்றித்திரிந்து நத்தை குத்தி நாரை கூட்டத்தை தொந்தரவுக்குள்ளாக்கியது வேதனையை அளிக்கிறது. பேர்ட் வாட்ச் பிக்னிக்கோ,போட்டோகிராபி  போட்டியோ அல்ல. Please, d’ont spoil Bird watch charm. பறவையைத்துரத்தி நிழற்படம் எடுக்காதீர். நான் வெளியிட்டுள்ள படம் போல எடுத்து பார்வைக்கு சுவை ஊட்டலாமே! பாராட்ட மனசு இருந்தால் எனது காமராவைப்பாராட்டுவீராக!


நத்தை  Pallikkarani Eco-system
Snail

மிருதுவான உடலைக் கொண்ட உயிரினம் ஒரு அதிசயம். முதுகில் ஓட்டைச்சுமந்து கொண்டு பாவமாகவும், மெதுவாகவும் ஊர்ந்து போய்க்கொண்டிருக்கும். ஆபத்து வந்தால் ஓட்டுக்குள் போய் விடும்.நத்தைகளுக்கு ஈரப்பதமான நிலமும், சூழலும் வேண்டும்.இல்லையானால் ஓட்டுக்குள் நீண்ட உறக்கத்துக்குப் போய் விடும்.ஓடு எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதற்கும், வெய்யிலிலிருந்து தப்பிப்பதற்கும், சூழலோடு ஒன்றிப்போவதற்கும் துணை செய்கிறது. ஓட்டில் கால்சியம் உள்ளது. அது வலது பக்கம் சுழற்றப்பட்டிருக்கும்.  நத்தை பெண்ணைத்தேட வேண்டியதில்லை. பிறப்பு உறுப்புகள் இரண்டும் அதில் உள்ளது. ஆயிரக்கணக்கான வகை நத்தைகள் உலகில் உண்டு. கடல் நத்தைகள் கில்ஸ் (gills) கொண்டு சுவாசிக்கும். நிலத்தில் உள்ளவை நுரையீரல் கொண்டு சுவாசிக்கும். நத்தைக்கு கண், வாய், நாக்கு,பாதம் உண்டு. நிழற்படத்தில் காணப்படும் நத்தை சென்னை பள்ளிக்கரணையில் ஊர்ந்துகொண்டிருந்தது. இத்தகைய அருமையான சதுப்பு நிலமும், நீர் நிலையையும் சார்ந்த இடத்தைச்சுற்றி ஐடி கம்பெனிகள் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை நிறுவி தங்களுக்கு Eco system-த்தைப்பற்றி ஒன்றும் தெரியாது என பறைசாட்டிக்கொண்டனரா அல்லது டாலர் கண்களை மறைத்து விட்டதா எனத்தெரியவில்லை. நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னம் பள்ளிக்கரணைச்சுற்றியுள்ள ஐடி கம்பெனிகளுக்கு இ-மெயில் கொடுத்து மீந்துள்ள சதுப்புநீர்நிலையையாவது பேணிப்பாதுகாத்து சுத்தப் படுத்தி நடைபாதை அமையுங்கள் என்றேன். பதிலில்லை. அவர்கள் தான் சுற்றிலும் கண்ணாடி போர்த்திக்கொண்டு அமர்ந்திருக்கிறார்களே! நிதி உள்ளது, மனமில்லை.

Tuesday, January 1, 2013


சுற்று சூழல்
 

Open Bill Stork                 
(Anastomus oscitans)
நத்தை குத்தி நாரை      

                
Common Sandpiper on shells
          



                  
                                                                       




நத்தை குத்தி நாரை, நாரை வகைகளில் வினோதமானது. இது சதுப்பு நிலம் மற்றும் நீர் நிலைகளில் காணலாம். இதன் அலகு பாக்கு வெட்டி போல இருக்கும். இந்த விஷேச அமைப்பு நத்தைகளை உணவாகக் கொள்ளும் இந்தவகை நாரைக்கு உறுதுணையாக உள்ளது. நத்தை மேல் இருக்கும் ஓட்டினை உடைக்க உதவுகிறதுஎனலாம் என்ற Dr. சலீம் அலி, மேலும் இதைப் பற்றி அறிய வேண்டியிருக்கிறது என்கிறார். இந்த வகை நாரை தற்போது  கண்ணம்பாளையம் குளத்தில் சுமார் 60 நாரைகளை கடந்த சில மாதமாக காணமுடிகிறது. படத்தில் காணப்படும் நாரையின் அலகில் சிப்பி உள்ளது. கரையில் உளவும் உள்ளான் பறவையைச்சுற்றி ஏராளமான சிப்பிகளைக் காணலாம். இப்பறவைகள் அருகிலுள்ள சூலூர், பள்ளபாளையம், ஆச்சான் குளங்களில்இது போல காணக்கிடைக்கவில்லை. ஏன்? சிப்பி விளைச்சல் கண்ணம்பாளையம் குளம் போல மற்ற குளங்களில் இல்லை. சிப்பிகள் சாக்கடை நீர், அதிகம் கலந்தால் விளையாது. ஆனால் சாக்கடை நீர் கலந்து கொண்டுதான் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக நாம் இயற்கைச் செல்வங்களை இழப்போம். PWD இதை கவனிக்குமா? கண்ணம்பாளையம் பஞ்சாயத்து தான் கவனிக்குமா? சிப்பிகள் விளையாவிட்டால் நத்தை குத்தி நாரைகள் தொடுவானில் மறையுமோ! Stills contributed: R. Vijayakumar

Monday, December 31, 2012


பறவை அறிமுகம்


Indian Great Horned Owl (Bubo bubo)
கொம்பன் ஆந்தை


            

           பார்த்தாலே பயம் கொள்ள வைக்கும் கொம்பன் ஆந்தையை முதன் முதலில் சென்னை நன்மங்கலம் ரிசர்வ் முட் காட்டில் சில வருஷங்களுக்கு முன்பு பார்த்தேன்.அதுவும் ஒற்றையாக ஒரு கல் குவாரியில் பார்த்தேன். தற்போது சூலூர் ஊர்வேலங்காடு கல் குவாரியில் இரட்டையாகப்பார்த்தேன். ஆண், பெண்ணுக்கு வித்தியாசம் தெரியாது. பூபோ என அலறல் குரல் எழுப்பியும், கண்கள் உருட்டியும் பார்த்து பயத்தை ஏற்படுத்தும். இது பகல் முழுக்க கல் குவாரியில் ஓய்வு கொண்டு, இரவில் எலி, முயல், பறவை, ஓணான் போன்றவற்றை வேட்டையாடும். முதலில் பார்த்த போது அது தொந்தரவுக்கு உள்ளாகி குவாரியின் மறுபக்கம் பறக்க நான் கழுகு இனம் என நினைத்தேன். இரண்டடி உயரம் இருக்கும். பறந்து சென்று உட்கார்ந்த இடம் தெரியவில்லை. குத்து மதிப்பாக ஒரு குவாரி பாகத்தினை படம் எடுத்து வந்து கணனியில், உருப்பெருக்கி பார்த்த போது கொம்பன் ஆந்தை எனத் தெரிந்தது. இது காலையில் நிகழ்ந்தது. உடனே மதியம் 3 மணிக்கு மேல் சென்று புகைப்படம் எடுத்து வந்தேன். இரண்டு ஆந்தைகளைப்பார்த்து ரவசம் கொண்டேன். ஆந்தை என்றாலே நம்மை வசிகரிக்கக் கூடிய பறவை. அதைப்பற்றிய கட்டுக்கதைகள் உண்டு. பார்த்தால், அதன் குரல் கேட்டால் நல்லது இல்லை என்பது அபத்தம். யாராவது கோவைவாசிகள் கொம்பன் ஆந்தையை பார்க்க ஆவல் இருப்பின் என் கைபேசி எண்; 98421 06430 தொடர்பு கொள்ளவும். அழைத்துச்செல்கிறேன்.

Monday, December 24, 2012



  



 பறவை குணாதிசயம்


 பாம்புத்தாரா
Snake Bird or Darter
(Anhinga melanogaster)                 


        


பாம்புத்தாரா நீர்மூழ்கிக் கப்பலைப் போல நீருக்குள் நீந்தி மீனைப்பிடிக்கும். பிடித்துவிட்டால் நீர் பரப்புக்கு வந்து பல சமயம் மீனை இரண்டடி உயரத்துக்கு தன் தலைக்கு மேலே விசிறி விடும். மீனின் தலை பாகம் கீழ்நோக்கி வருமாறு பார்த்துக்கொள்ளும். அப்போது தான் மீனை விழுங்குவதற்கு எளிதாக இருக்கும். அலகிலிருந்து நழுவி விடாது. பொதுவாகவே கொக்கு, நாரை, மீன்கொத்தி, நீர்காகம் போன்ற மீன் உண்ணும் பறவைகள் அலகுக்குள் முதலில் மீனின் தலையைத்தான் செலுத்தும். பாம்புத்தாரா மீனை இரண்டடி உயரத்துக்கு தன் தலைக்கு மேலே விசிறி விடும் காட்சியை புகைப்படம் எடுப்பது மிகக்கடினம்.அதனால் நான் எழுதிய Diary on the nesting behavior of Indian Birds- நூலில் பாம்புத்தாராவின் இந்த வியக்கத்தக்க குணாதிசயத்தை நானே சித்திரம் வரைந்து வெளியிட்டேன். தற்போது தான் அதிஷ்டகரமாக இந்த புகைப்படம் கோவை பள்ளபாளையம் குளத்தில் கிடைத்தது. பறவை அன்பர்களே! சித்திரங்களையும், புகைப்படத்தையும் பார்த்து ரசியுங்கள். இதை விட நல்ல படம் எடுக்க முடிந்தால் எனக்கு sukubird@yahoo.comக்கு மெயில் செய்யவும்.

Thursday, December 20, 2012



பூச்சிகள் ராஜ்ஜியம்


 கட்டெறும்பும் அதன் பசுமாடும்
Ant and its Cowbug

 புகைப்படத்தில் பசு பூச்சி மெர்ன்பிரேசிட் (Cowbug Mernbracid) என்ற டெலங்கானா (Telengana) பறக்கும் பூச்சியை சீமகருவேல் மரத்தில்(Acacia) பார்க்கிறீர்கள். இந்தக் கட்டெறும்பு அதை என்ன செய்து கொண்டிருக்கிறது?  பசு பூச்சியிடமிருந்து பால் உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. எறும்புகளில் சில பூஞ்சை, சில எறும்பு, இலை, தாவரம், மற்றும் சில, பூச்சி உண்ணும். கூட்டைக்கலைத்தால் கடியுடன் ஃபார்மிக் அமிலத்தை உமிழ்ந்து கடித்த இடத்தில் எரிச்சலை உண்டாக்கும். குழு வாழ்க்கை ஸ்வராஸ்யம் நிரம்பியது. பசு பூச்சிகள் இலை, தண்டுகளில் உறிஞ்சும் தாவரரசமே எறும்புகளுக்கு இனிப்பு ரசமாகிறது. நாம் வீட்டில் கொல்லைப்புறத்தில் பசு மாட்டைக்கட்டி வைத்துக்கறப்பது போல் எறும்புகள் அவ்வப்போது தன் இலைக்கூட்டுக்கு பசு பூச்சியை இழுத்து வந்து இனிப்பு திரவத்தை உறிஞ்சும். இயற்கையில் ஆச்சர்யங்கள் நிறைய உள, எனவே இயற்கையை பேணிப்பாதுகாக்காவிட்டாலும் பரவாயில்லை, அதை சீரழிக்காதீர்கள். இயற்கையை அளவோடு நுகர்ந்தால் மகிழ்வோடு வாழலாம்.