Showing posts with label Bird Rescue. Show all posts
Showing posts with label Bird Rescue. Show all posts

Sunday, June 12, 2016


தஞ்சமடைந்த புறா
                ஒரு காலைப்பொழுது உள்ளுர் நண்பர் ஆன்ட்ரூஸ் காரில் ஒரு வெண்புறா கையிலிருக்க வந்திறங்கினார். ‘சார்! இந்தப்புறா நம் சூலூர் குளத்தில் கிடைத்தது. கழுகு துரத்திக்கொண்டு வர, இது பயந்து போய் குளத்து நீர்ல விழுந்திருச்சு. இறக்கை முழுக்க ஈரமாக, இதனால் பறக்க முடியலை. நான் ஒரு கோலெடுத்து ஆகாசத்தாமரை மேல் வந்ததை பக்கமிழுத்து எடுத்தேன். இது காப்பாத்தறாங்கன்னு தெரிஞ்சுகிச்சு. அதனால அருகில வந்தது.’ என்று முன்கதைச்சுறுக்கத்தைச்சொன்னார்.
 நான் கையில் வாங்கி கடப்பைக்கல் பெஞ்சில் விட, அது பயந்து போய் மதில் சுவர் ஓரம் குதித்து அங்கேயே நின்றது. ஒரு வேளை இது sub adult-ஆக இருக்குமோ? என சந்தேகம் வந்தது. ஒரு வேளை ஈரம் உடம்பில் காய்ந்தால் பறக்கலாம். எதற்கும் ஒரு அட்டைப்பெட்டியில் இட்டு வைக்கலாம். எங்கள் காலனியில் பூனை, நாய் அதிகம். பிடித்துக்கொண்டு போய்விடும். உடனே ஒரு அட்டைப்பெட்டி காற்றுப்புக ஓட்டைகள் இட்டு, அதற்குள் குடிக்க நீர், என்னிடமிருந்த சாமையைத்தூவி, புறாவைப்பிடித்து உள்ளே விட்டேன்.
மதியத்துக்கு மேல் கம்பு வாங்கிப்போட ஜோசப் ரெஜினால்ட் யோசனை வழங்கினான். வினி, முடிந்தால் அட்டைப்பெட்டியிலிட்ட புறாவை கோவை கொண்டு வரவும் என்றாள். பயந்திருக்கும். அடி பட்டிருந்தால் சிகிச்சை அழிக்கலாம் என்றாள். இருவரும் Animal Rescuers என்ற NGO வைத்துள்ளனர். வாழ்க! ஒரு நாள் முழுக்க அட்டைப்பெட்டியில் இருந்தது. நான் இன்னொரு அட்டைப்பெட்டி வாங்கி வந்தேன். இப்போது இருப்பது இடம் போதவில்லை. போதிய இடமளிக்கும் அட்டைப்பெட்டிக்கு புறாவை மாற்றினேன். மறுநாள் காலை பார்க்க அட்டைப்பெட்டி கீழ் புறம் நனைந்திருந்தது. எச்சமிட்டிருக்க நாற்றம் குடலைபிடுங்கியது. பறவைகள் இயற்கையில் இருந்தால் ரசிக்கலாம்.
இயற்கை தான் அதைப்பராமரிக்க முடியும். ஆயிரம் வருஷங்களாக மனிதனோடு பழகும் புறா காலையில் வெளியில் எடுத்து விட அது மீண்டும் பயத்தில், படிக்கட்டு அடியில் போய் அமர்ந்து கொண்டது. நான் கையில் கம்பு வைத்துக்கொண்டு அழைக்கிறேன், வர மாட்டேன் என அடம் பிடித்தது. கீழே கம்பைத்தூவி விட்டேன். அதன் அலகு கம்பைப்பொறுக்க ஏதுவாக இருந்தது. வினிக்கு மறுபடியும் போன் செய்ய, ‘நீங்கள் அங்கு இருக்க வேண்டாம். வந்துடுங்க. அது தானே வந்து தானியம் பொறுக்கும்’, என்றாள்.

நானும் பறந்து போனால் இயற்கை பார்த்துக்கொள்ளும். நம்மால் இது ஆகாத செயல். தினமும் பெட்டியைச்சுத்தம் செய்ய வேண்டும். ஒரு பெட்டியைக்காயவைத்து உபயோகப்படுத்த வேண்டும். நான் குளித்து, சிவபெருமானை தேவாரம் பாடி போற்றி விட்டு வந்து பார்த்தால் வெண்புறா ஒன்று கையில் வராமலே….உனது கதை புதுக்கவிதை எனப்பாடுவதற்குள், அது அதன் ஞாபகமாக எனக்கு ஒரு இறகை மட்டும் விட்டு விட்டு பறந்து போய்விட்டது. சந்தோஷமாகப்பறந்து போவதை அடியேன் பார்க்கக்கொடுத்துவைக்கவில்லை.

Friday, December 18, 2015



நண்பர் TRA எடுத்த படம்
சாவல் குருவி                                                                                           
சாவல் குருவி (அ) கொண்டலாத்தி (அ) எழுத்தாணிக்குருவி என வட்டாரத்குக்கொரு நாமமிட்டு அழைக்கப்படும் இந்தப் பறவையை மக்கள் மரங்கொத்திப் பறவை என நினைக்கின்றனர். இது மரங்கொத்திப்பறவை அல்ல. இது மரங்கொத்தி மரத்தண்டுகளை அணைத்துப்பிடித்துக்கொண்டு, பல ஆயிரம் தடவை அலகினால ‘தட் தட்’என அடித்துப்பட்டைக்கடியிலிருக்கும் பூச்சிளை கிளப்பி நாக்கினால் விசிறி உண்ணாது. இது மண்ணைக்கிளறி புழு, பூச்சிகளைப்பிடித்து உண்ணும். நான் சூலூருக்கு 25 வருஷங்களுக்கு முன்பு குடி வந்த போது, இப்படி இந்த ஊர் பெருத்திருக்கவில்லை. குடியிருப்புப் பகுதியில் இவ்வளவு வீடுகளுமில்லை. அப்போது மதிர் சுவற்றில் ஒரு மழை நீர் வடியும் பிளவு  விட்டிருந்தேன். அது அரையடிக்கு முக்கால் அடியே இருக்கும் தரையொட்டிய பிளவு. அதில் கொண்டலாத்தி மூன்று முட்டைகளை இட்டிருந்தது. மக்கள் முதலில் நினைப்பது பாம்பு முட்டையாக இருக்குமோ என்று தான். வெள்ளை நிறம். இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு எனக்கு பறவைகளைப் பற்றிய விபரங்கள் மிகுதியாகத்தெரியாது.
அந்த மதில் பிளவுக்கு இரண்ட்டி முன்பு ஒரு குல்மோஹர் நாற்று வைத்து, அதைச்சுற்றி மூங்கில் குச்சிகளால் சதுரமாக கூண்டுகட்டி, ஆடுமாடுகளிலிருந்து காப்பாற்றியிருந்தேன். அப்போது என்னிடம் ஒரு அல்சேஷன் நாய் கிராஸ் இருந்தது. அது மூன்று அல்லது நான்கு மாத வயதிலிருந்தது. அது அடிக்கும லூட்டி சொல்லி மாளாது. அதனால் எனக்கு நேரமும் பணமும் விரையமானது பற்றி தனிக்கட்டுரையாக எழுதலாம். அதற்கு பிரவுனி  எனப் பெயரிட்டிருந்தேன். ஒரு முறை வழியில் போன சிறுமியைக்கடித்து வைத்து நான் மருத்துவ செலவுக்காக நஷ்டஈடு கொடுக்க வேண்டியிருந்தது.சங்கலி வாங்கினால் இரண்டு மாதத்தில் ‘பனால்’. தினமும் ரேஷன் சாதம் அரைக்கிலோவுக்கு மேல் உண்ணும். தடுப்பூசிகள் பல தெர்மாஸ் குடுவையில் ஐஸ்-உடன் 20 கி.மீ தாண்டியுள்ள நகரத்திலிருந்து வாங்கி வருவேன். ஒரு முறை பூச்சி மருந்தால் உண்ணிகளைப்போக்க, நாயைக்குளியலிட, நாய் பூச்சி மருந்தை நாவால் நக்கி விட, கால் நடை மருத்துவரிடம் நடத்திக்கொண்டு ஓட, ஹயோ! ஹயோ! ஒரே லூட்டி தான் போங்கள்.
சாவல் குருவி சாலமனுக்கு பறவை மொழிகளை கற்றுக்கொடுத்ததாம். இது தினமும் என் வீட்டைச்சுற்றியுள்ள மரங்களில் ஒன்றினைத் தெரிந்தெடுத்து கிளையலமர்ந்து ‘கூப்…கூப்’ என சப்தித்து என்னைப் பறவையுலகுக்கு இழுக்கும். தன்னைத்தானே சொல்லிக்கொள்கிறதா! இதை வைத்துத் தான் ஆங்கிலேயர் ‘கூப்பே’ என நாமம் சூட்டினரா? இது எதனால் கொண்டையை சுறுக்கி விரிக்கிறது? உணர்ச்சி மேலிட சுறுக்கி விறிக்கிறதா? இது மிக அழகு…… சில சமயம் புல்லாங்குழல் இசைப்பது போலவும் இருக்கும். தற்போது குரல்கள் வைத்தே இது என்ன பறவை  எனச் சொலவேன். இறைவன் ஒவ்வொரு பறவைக்கும் ஒரு குரலமைத்துள்ளது இனிமை. குரல் என ஒன்றில்லையானால் ஊமைதான்.
            வரிக்குதிரை போல, வெள்ளைக் கோடும், கருப்புக்கோடும், பழுப்பு நிறமும், விசிறி போல கொண்டையும், ஒடுங்கிய  உடம்பும், கருப்பில் சன்னமாக வளைந்த அலகும், திரும்பத்திரும்ப பார்க்க வைக்கும். இது வளைந்து, வளைந்து பறக்கும் பாங்கு அருமை.. இவை புல் வெளிகளிலும், பூங்காவிலும், தோட்டங்களிலும் விருப்பம் கொண்டது. அவ்விடங்களில் பூச்சி, கூட்டுப்புழு, வண்டு என கிடைப்பதும் ஒரு சவுகர்யம்.
            சாவல் குருவி புத்திசாலி, நண்பர் TRA சொன்னது. சத்தியமங்கலத்தில் ஒரு வீட்டினுள் தப்பித்தவறி வந்த சாவல் குருவியை அந்த வீட்டார் பாது காத்து வந்தனர். சில நாளில் இணை சாவல் குருவி எப்படீயோ இருப்பிடத்தைக்கண்டுபிடித்து ஐன்னல் வழியே கண்டு, அமர்ந்து குரல் கொடுத்து கூட்டிக்கொண்டே சென்று விட்டது. பறவைகளின் குரலைப்பதிவு செய்து அதன் ஏற்ற இறக்கங்களை நீட்டிக்குறைத்து, புது ராகங்களைக்கண்டு பிடிக்கலாம். பறவை ஒவ்வொரு இனமும், ஒரு ராகத்தில் பாடுது. இவை குரல் கொடுப்பது இணையை அழைக்க, எச்சரிக்க, பயத்தை, சந்தோஷத்தை, ஆத்திரத்தை வெளிப்படுத்த பயன் படுத்துகிறது. அழைக்க, நீண்ட குரல் கொடுக்கிறது. பயத்தைக்குறைவாகவும், அழுத்தமாகவும் குரல் கொடுக்கும். இப்படி அதற்கும் பாஷையுண்டு.
            பறவைகளுக்கு குறைந்த பட்ச பரிபாஷை இருந்தால் போதுமானதாக உள்ளது. பெண்கள் மாதிரி வழவழ எனப்பேசிக்கொண்டே இருக்கத்தேவையில்லை அல்லவா! இதில் கதிர் குருவிகள் (Warblers) விதிவிலக்கு. உண்ணிப்பாக கவனித்தால் பறவைகள் எதற்காக குரல் கொடுத்தன என அறிய முடியும். மேலும் குரல்கள் எழுப்புவதால், அலகுக்குள் பிராணவாயு சென்று, உடம்பு பறக்க ஏதுவாகிறது. ஆட்காட்டிப்பறவை இடையூரை அறிவிக்க எல்லாப்பறவைகளுக்கும் எச்சரித்து விடும். அதன் குணம் அது. கழுகுகளுக்கு விசில் ஒலி. உயர வானில் பறந்தவாறும், உயரக்கிளைகளில் அமர்ந்தவாறும், ஒலி எழுப்பினால் தான் இணைக்கு அல்லது குழுவுக்கு கேட்க முடுயும்.
            கொக்கரக்கோ எனச்சேவல் கத்துவது பற்றிஒரு பட்டிமன்ற அன்பர் சொன்னது. கோ=என்றால் முருகன் (அ) அரசன் (அ)தலைவன். அரக்கு= எனில் மாமரம். ரக்கோ= என்றால் பிளந்தது.மாமரமாக மாறிய சூரபத்மனை இரண்டாகப்பிளந்தது. இனி மக்கட்குத்துன்பமில்லை. இதோ! காலைச்சூரியன் வந்து விட்டான். கோ= முதல்வன். துன்பங்கள் அழிந்தொழியும் எனச்சேவல்கள் அதிகாலையில் கொக்கரக்கோ என முகமன் கூறி மக்களைத்துயில் எழுப்புகின்றன. இந்த ஒலி பிராய்லர் கோழி மரபணுவின் கூட பதிந்துற்றது. நான் அதிகாலை சூலூர் பேருந்து நிலையத்துக்கு நடந்த போது, ஒரு கோழிக்கடை வந்தது. அங்கிருந்த கோழிக்கூண்டிலிருந்து  காலை 05.15 மணிக்கு கொக்கரக்கோ என ஒரு பிராய்லர் கோழி ஒலி எழுப்பியது விந்தையாக  இருந்ததது.
            கிளிகள் இனம் பழக்கினால் சரியாகப்பேசி ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். மைனா கூடப்பேசும். அதன் நாக்கில் வசம்பு தடவத்தடவ நாக்குரிந்து, லேசாகி, பழக்கினால் பேசும். விசிலடிக்கும். பன்னிரு திருமுறையில்
‘ஆடு மயில் அகவும் நாடன்’
‘கான மஞ்ஞை கடிய ஏங்கும்’
‘மீன் ஆர் குருகின் கானல் அம் பெருந்தறை
வெள் வீத்தாழை திரை அலை
நள்ளென கங்குலும் கேட்கும், நின் குரலே?’
            பிரணாயாமாவில் காகப்பிராணா செய்தால் காகம் மாதிரி உடல் லேசாகும். குரல் இனிமை கிடைக்கும்.
            மீண்டும் எனது வீட்டு மதில் சுவர் மழை நீர் வடிப்பிளவில் மூன்று வெள்ளை முட்டைக்கு வருவோம். இருபது வருஷம் முன்பு அக்கம்பக்கம் வீடுகளும் இல்லை. சாவல் குருவி திடீரென அந்த மதில் ஓட்டையிலிருந்து பறக்கும். எனக்கு அப்போது ஒன்றும் விளங்கவில்லை. அடை காக்க அவ்வப்போது வந்து போகிறது எனத்தெரியவில்லை. சாவல் குருவி குரல் எனக்குப்பிடித்தமானது. சமீபகாலமாக, எனது கவிதைகளுக்கு நான் ராகம் (ட்யூன்) போட ஆரம்பித்தேன். வீட்டில் மிருதங்கம், தாளம், ஸ்ருதிப்பெட்டி உள்ளது. கீ போர்டு வாங்கினால் போதும். ஒரு இசைக்குழு ஆரம்பிக்கலாம். குழுவுக்கு இசை ஆர்வம் உள்ள அன்பர்கள் தேவை. சாவல் குருவி எனது கவிதைக்கு அடியெடுத்துக் கொடுக்க நான் இப்படிப்பாடினேன்.
            கூப்…..கூப்…….கூப்……. எனப்பாடியே
                                                       எனை மயக்கியது நியாயமா
            கூப்…..கூப்….கூப்…….    இந்த ராகத்தை யாருனக்குச்சொல்லியதோ….
                                                       கவிதை வரிகளும்
                                                       காற்றினில் அலையுதா….
                                                       இசைக்குறிப்புகளும்
                                                       இலைகளில் தொங்குதா?
            கூப்….கூப்…கூப்…….       மழைத்துளிகளும்
                                                       சலங்கையொலி கூட்டுதா…..
                                                       மூங்கில்களும்
                                                       குரலிசைக்குதா…?…..
                                                                                                                                                11      
 கூப்…..கூப்…..கூப்….                       கொண்டலாத்தியே…!
                                                            உன்னிசையைத்தருவாயா?
                                                            நானும் கற்றுத்தான்
                                                            பெம்மானை இசைப்பேனே…..
            சூலூர் குளத்தின் ஏரிமேட்டில் போகும் போது, என் பறவை குருநாதர் டாக்டர் ரத்தினத்துக்கு பாடிக்காட்டினேன். அவரிடம் பாராட்டு வாங்குவது மிக்ககடினம். நன்றாக இருக்கறது எனப் பாராட்டினார். அலுவலகத்தில் பாடும் திறமையுடைய நண்பர் தினகரன் ஓய்வு பெறும் போது பிரிவு உபச்சார விழாவில் சாவல் குருவி இசை பாடல் பாடி எல்லோர் பாராட்டுதலும் பெற்றேன்.இது போல பல பாடல்கள் உள. நான் இதை எப்போது ‘சிடி’ யாகப்போடுவது. அதை நீங்கள் எப்போது கேட்பது? இதற்கு இசை நிரப்ப யாராவது வருவீரா?
            நாய்க்கு மோப்ப சக்தி அதிகம். ஒரு நாள் எனது ரளொடி நாயை வீட்டைச்சுற்றி நடை பயில விடும் போது, காலை வேளையில், செயினோடு என்னை இழுத்துக்கொண்டோடி மதில் சுவர் ஓட்டையினுள் இருந்த மூன்று முட்டைகளையும் கபளீகரம் செய்தது. வெண்கரு வாயலிருந்து ஒழுக, ஒழுக கடித்து நக்கி, நாக்கைச்சுழற்றிமுழுங்கி விட்டது. இது திடும்மென கண நேரத்திதல் நிகழ்ந்து விட்டது. என் செய்வது? இன்னும் என் மனதை அரித்துக்கொண்டிருக்கிறது.
            பிள்ளையை இழந்த தாய் போல இரண்டு மூன்று தினங்கள் சாவல் குருவி ஒன்று, மதில் பொந்தைப்பார்த்தவாறு சோகமாக குல்மோஹர் கூண்டில் சிறிது நேரம் அமரும். பிறகு பறந்து விடும். முட்டையைக்காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கம் இன்றும் எனக்குண்டு. சாவல் குருவியில் ஆண், பெண் இனம் பிரித்துச்சொல்வது கடினம். ஒன்று போலவே இருக்கும். பெரும்பாலும் தாய்ப்பறவை தான் அடைகாப்பதும், வளர்ப்பதும், குஞ்சுகளின் மேல் பாசமாக இருப்பதும் அதுவே.குல்மோஹர் மரக்கூண்டில் அமர்ந்திருக்கும் போது தாய் சாவல் குருவியின் சோகம், அது திரும்பத்திரும்ப மதில் பொந்தைப்பார்த்த பார்வையும் என்னை வாட்டியது. நான் அசிருத்தையாக இருந்து விட்டேனோ! புரவுனி எதையும் உண்டு விடும். அது விவஸ்தை கெட்ட நாய். அதன் லூட்டி பொருக்க முடியாமல் ரூ. 500-க்கு வாங்கியிருந்தாலும், ஒரு வருஷமாக அதன் ‘லொள்ளு’ தாங்க முடியாமல் ஒரு தோட்டச்சாளைக்கு இனமாகக் கொடுத்துவிட்டேன். அதுவும் என்னை விட்டுப்பிரிகிறேனே என்ற சோகம் இல்லாமல் ‘டெம்போ’வில் ஏறி ஜாலியாகச்சென்று விட்டது.






Saturday, November 28, 2015


புள்ளி ஆந்தைக்கு ஆபத்து     Bird rescue





                ஆடி 18, 2014(ஆகஸ்ட்-3) அன்று ஆடி அமாவாசை, அம்மாவும், தம்பியும் என்னை, மேற்கே உள்ள இராமநாதபுரம் வீட்டில், அம்மாவாசை படையல் இட்டுக்கும்பிட வருமாறு அழைத்திருந்தனர். கீதா மகள் வசிக்கும் அரக்கோணம் சென்றிருந்தாள். மணி பதினொன்று இருக்கும். நல்ல வெளிச்சமான கதிரவன். பேருந்து நிலையம் செல்ல நடந்து போய்க்கொண்டிருந்தேன்.
            அலைபேசிக்க்கடையைத்தாண்டிய திருப்பத்தில் ஒரு புள்ளி ஆந்தை மின் கம்பியில் மாட்டித்தவித்துக்கொண்டிருந்தது. நான் இதைக்காலையில் (ஞாயிறு) ஏழு மணிக்கு பறவை நோக்கலுக்குப் போகும் போது பார்த்தேன். அந்த இடம் வீடுகளுக்கு நடுவே ஒரு அரை ஏக்கர் பரப்பளவு கொண்ட வெற்று பூமி. அங்கு சாணிக்குவியல் இருக்கும். கடைக்கோடியில் தில்லி முட்புதர்கள். இந்த அரை ஏக்கர் நிலத்தைச்சுற்றி வீடுகளுக்குச்செல்லும் மின்சாரக்கம்பிகள். ஒன்றிரண்டு வேம்பு மரங்கள்.
            இந்த மாதிரியான இடத்துக்கு காலை, மாலை பல பறவைகள் வரும். சாணியில் புழு, பூச்சிகள் கிடைக்கும். வெற்று நிலத்தைக்கிளறினாலும் சில இரைகள் கிடைக்கும். அதனால் பல பறவைகள் அங்கு வருவது வியப்புக்குரியதல்ல. கரிச்சான், கொண்டலாத்தி, புள்ளிதினைக்குருவி, சிட்டுக்குருவி, வெண்மார்புமீன் கொத்தி, மைனா,காகம், வலசைப்பருவத்தின் தாம்பாடிகள் சில சமயம் ஆந்தை, மாட்டுக்கொக்கு, புதர்க்குருவி என வரும். அன்று காலை செல்லும் போது ஒரு புள்ளி ஆந்தை, தினைக்குருவிகள், சிட்டுக்குருவி, கரிச்சான் என சில பார்த்தேன். நான் அன்று, பெட்ரோல் அடித்துவிட்டு, குளத்தின் வடக்கு ஏரி மேட்டில் நடையுடன் கூடிய பறவை நோக்கல் செய்தேன்.
            மீண்டும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த புள்ளி ஆந்தைக்கு வருவோம். அது இளைஞனாக இருக்க வேண்டும். அந்தப்பறவை அருகில் இரண்டு கம்பிகள் இணைக்கும் ‘ப’ வடிவக்கம்பி சந்திப்பில் கெட்டியான நூலில் சிக்குண்டிருந்தது. நான், அலைபேசிக்காமெராவில் பதிவு செய்துவிட்டு, இதை எப்படிக்காப்பாற்றுவது என யோசித்தேன். முதலில் மின்சாரம் தாக்கி விட்டதோ என நினைத்தேன். இல்லையே! அது தவித்துக்கொண்டிருந்தது. எதிர் வீட்டில் கம்பு கேட்கலாமெனில், இரு வீட்டில் யாரும் தென்படவில்லை. கம்பு இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது.
            அப்போது ஒரு 18 வயது மதிக்கத்தக்க பையனும், பத்து வயது மதிக்கத்தக்க பையனும் வந்தார்கள்.
என்ன பாத்துட்டிருக்கீங்க?
கண்ணாடி போட்டிருக்கே! என்ன பாத்துட்டிருக்கேன்னு தெரியலையா?
இது என்னங்க?
                                                                                                                                                2
ஆந்தை. சரி! உங்க வீடு எங்கே?
அங்கே.
வா! ஒரு கம்பு எடுத்திட்டு வரலாம்.
அவர்கள் வீட்டுக்குச்சென்றேன். இரும்பு நுழைவாயில் கதவு தென் புறத்தோட்டத்தில் நாய் உலைத்தது. அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர், ஆசிரியை. வரவேற்றனர்.ஒரு பிளாஸ்டிக் மின் கம்பிக்கு உறை போடும் பைப் கிடைக்க, அதைத்தூக்கிக்கொண்டு, விபத்து இடத்துக்கு வந்தேன்.
மூன்று கெட்டி நூல்கள், ஆந்தையைப்பிணைத்திருந்தன.கம்பியில் அமர்ந்திருந்த ஆந்தை மெதுவாக நகர, நூல் காலில் மாட்டிக் கொள்ள, அதை உதற, சுழன்று போய் உடம்பில் சுற்றி விட்டது போலும். பிளாஸ்டிக் பைப் காற்றில் ஆடியது. நூல் ஆந்தையின் கழுத்தை இறுக்கிவிடுமோ என்ற பயத்தில், எப்படியோ, கஷ்டப்பட்டு ஒரு நூலை அறுத்தேன்.
            PVC  20 அடி உயரக்கம்பு காற்றுக்கு ஆடியதால் மீண்டும் ‘கவட்டி’ யுள்ள கம்பு கிடைக்குமா என ஆசிரியர் வீட்டுக்குச் சென்றேன். கூட இரு சிறுவரும் வந்தனர். சிறு ‘கவட்டி’ உள்ள ஒரு கம்பு, அதில் இன்னொரு கம்பு கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்தது. அதைத் தூக்கிக்கொண்டு, மீண்டும் விபத்து இடத்துக்கு வந்தேன். ‘கவட்டி’யில் நூலை சிக்க வைத்து, அதை அறுக்க முயற்சித்து, முயற்சித்துத்தோற்றேன். இணைத்திருந்த கம்புகள் முன்னும் பின்னும் நழுவி ஆடின. குண்டான ஆசிரியர், அந்தக்கம்புகளை இறுக்கிக்கட்டினார்.
            மீண்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது, பிரபாகரன். குடும்ப நண்பர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் கம்பை வாங்கி, முயற்சியில் ஈடுபட்டார். இரண்டு நூல்களில் மட்டுமே புள்ளி ஆந்தை தொங்கிப்போராடிக்கொண்டிருந்த்து. கழுத்து இறுக்கப்படாமல் ஆந்தை நூலைக்காலால் தடுத்திருந்தது, அதன் அறிவை உணர முடிந்தது. இதை குண்டாசிரியர் சிலாகித்தார். மேலும்
‘மின்சார இலாகாவிற்கு போன் செய்து மின் இணைப்பை துண்டிக்கலாம்’ என்றார்.
 ‘அது நடக்காது’ என்றேன்.
பிரபாகரன் இரண்டு நூல்களை அறுத்து வெற்றி பெற்றார். ஆந்தை கழுத்து இறுகாமல் தப்பித்தது. இதில் இன்னொரு சிக்கல் இருந்தது. மின்சாரம் தாக்கி விடுமோ என பயமிருந்தது. ஆனால்அதி மின்கடத்தும் ஒயரில்லை.மேலும் PVC பைப் கம்பு, பிறகு மூங்கில் கம்பு, இவை தவிர செருப்பு அணிந்திருந்தேன். விடுபட்ட ஆந்தை கிழக்குப்புறமாக, இருந்த வேப்ப மரங்களுக்கு அருகில் பறந்து, தரையின் நிழலில் அமர்ந்தது.
             நாங்கள் ஓடிப்போய் அதன் அருகில் சென்று நின்றோம். பிரபாகரன் கையில் எடுத்தார். ‘கழுத்தில் நூல் சுற்றியிருக்கா, பாருங்க!’ என்றேன்.
‘ இல்லே. நூல் சுற்றலே’ என்றார் பிரபாகரன்.
           
                                                                                                                                                3
ஆந்தை கண்கள் சுற்றிலும் மஞ்சள், நடுவில் கருப்பு. உடல் பழுப்பு மற்றும் புள்ளிகள். அரையடி இருக்கும். புள்ளி ஆந்தையை ஏராளமான முறை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். இது எங்கள் காலனியில் அடிக்கடி பார்க்கலாம். ‘கிர்ரிக், கிர்ரிக்’ என ரசிக்க முடியாத ஒலி எழுப்பி என் இல்லத்து அருகிலிருக்கும் ஒயரின் இருளில் அமர்ந்திருக்கும். தெரு விளக்கு வெளிச்சத்துக்குக்கீழ் முன்னும் பின்னும் பறக்கும் பூச்சிகளை குறுக்குமறுக்கும் பறந்து பிடித்து ஒயரில் அமர்ந்து உண்ணும். இவை மரப்பொந்துகள், கிணற்றுப்பொந்துகள் போன்ற இடங்களில் ஏழு, எட்டு என குடும்ப உறுப்பினர்களோடு இருக்கும், அல்லது ஜோடியாக இருக்கும். இதன் உணவு எலி, வெட்டுக்கிளி, தவளை. உழவர்களுக்குத்தோழன். ஒரு நாளைக்கு ஒரு எலியாவது வேண்டும். குண்டு ஆசிரியர் ஓய்வு பெற்றவர்,
‘ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது,பழவகைகள் சாப்பிடும்’ என்று என்னிடம் சொன்னார்.
நான், ‘கிடையாது’ எனச்சொன்னதை அவர் நம்பவில்லை. புள்ளி ஆந்தையை விடுவித்ததை, யுவன்கள் விடியோ, மற்றும் புகைப்படம் எடுத்தனர்.
பத்து வயதுப் பையன் சற்று பயந்தவாறு, ‘ தொட்டுப்பார்க்கட்டுமா?’ என,
 ‘தொடு’ என்றார் பிரபாகரன்.
அவன் புள்ளி ஆந்தையை வாங்கினான். அவன் கண்களில் வியப்பு கலந்த மகிழ்ச்சி. விரலில் தடவிக்கொடுத்தான். ஆந்தை களைப்பாகவும், நடுக்கத்துடனும் இருந்த்து. அது பறக்கும் தெம்பில் இல்லை. ‘தண்ணி கொடுக்கலாம்.’ எனப்பிரபாகரன் சொல்ல 18 வயதுப்பையன் விரைந்து போய் நீர் கொண்டு வந்தான். புள்ளி ஆந்தைக்கு உள்ளங்கையில் நீர் ஊற்றித்தந்தார் பிரபாகரன்.
            18 வயது, 10 வயதுப்பையன்கள் ஆந்தைகளைப்பெற்றுக்கொண்டனர்.
 ‘ஆந்தை, களைப்பும், பயமும் தெளிஞ்ச பிறகு பறக்க விடலாம்’ என ஆசிரியர் சொல்ல,
நான், ஆமா, அப்படியே செய்யுங்க’ என்றேன்.
            தம்பிகளே! பெயரென்ன?
அரவிந்த-18 வயது, பிரவின் 10 வயது.
‘அரவிந்த் போகும் போது, உங்களுக்குத்தான் கிரடிட். நீங்க தானே பறவை ஆபத்திலிருந்ததை முதலில் பாத்திங்க. நீங்க பிரஸ்சா?
‘ அட! நா எதுவுமில்லே’
            இரண்டு நாட்களுக்குப்பிறகு, ஆசிரியரைப்பார்த்து, ‘ ஆந்தை பறந்து போச்சா? என ஆவலுடன் கேட்டேன்.
            ‘ஆந்தை வீட்டுக்குள்ளார வரக்கூடாதுன்னு பொண்டாட்டி சொல்லீட்டா. நாங்க வேப்ப மரத்துலகொண்டு போய் விட்டுட்டோம்.’

தினமும் ஒரு எலியாவது பிடித்து உண்டு, விவசாயிக்குத்தோழனாக இருக்கும் ஜீவனை வெறுக்கும் மக்கள் எப்பேர்பட்ட மூடநம்பிக்கையில் இருக்கிறார்கள் பாருங்கள்! இது எப்போது விலகுவது?

Friday, August 1, 2014





ஒரு பறவை உயிர் போனது

            வெண்தலைச்சிலம்பன்கள் (White headed Babblers) நிறைய என் சின்னத்தோட்டத்துக்கு வருகை தரும். அவைகளின் சங்கீத ‘க்லிங், க்லிங்’ ஒலி காதுகளில் விழத் தேன் பாய்வது போல இருக்கும். அவைகளின் தாகம் தணிக்க ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஒரு குடம் நீர் பிடிக்கும் அளவில் தோட்டத்தில் வைத்திருந்தேன். தினம் சிலம்பன்கள் நான் வைத்து வளர்த்த எழுபது மரக்கூட்டங்களில் ஆடித்திளைத்து, இரை பொறுக்கித் திரிந்து என் இல்லத்தோட்டதுக்கு வரும். இங்கும் வந்து காய்ந்த தேக்கு இலைகளுக்குக்கீழ் எட்டிப்பார்த்து, அவைகளை தள்ளி விட்டு, மதிலில் அமரும். பிறகு இரண்டு, மூன்று என பிளாஸ்டிக் பாத்திரத்தின் விழிம்பில் அமர்ந்து, சிலம்பன்கள் நீர் அருந்தும். சில சமயம் நீரைப்பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் குளிக்கும்.
             பெரும்பாலும் அனைத்துப்பறவைகளும் குளிக்கும். உடம்புச்சூட்டைத்தணிக்கவும், இறகில் உற்பத்தியாகும் உண்ணிகளை நீக்கவும் இது உதவும். சில பறவைகள் உண்ணி நீக்க மண் குளியலிடும். தேன்சிட்டு போன்ற சின்னப்பறவைகள், மலர்களில் முத்துக்களாய் அரும்பியிருக்கும் காலைப்பனி முத்துக்களில், தேனுக்காக நுழையும் போது உரசி விடும். அதற்கு அதுவே போதுமானது. இறகுளில் படும் ஈரத்தை கோதி விடும். ஆனால் பறவைகள் அதிகமாக நனைந்தால் அதனால் பறக்க முடியாது. உடலில் உள்ள பொங்குகள், சிறகுகளில் உள்ள சின்னச்சின்ன பொங்குகள் அதிக ஈரத்தில் இழுபட்டு உதிரும். உலர நேரமாகி, உடல் எடை கூடி பறக்க முடியாது. அதற்குள் கழுகு போன்ற எதிரிகள் அவைகளை இரையாக்கி விடலாம்.
            ஒரு வெள்ளிக்கிழமை நாள், பள்ளியில் இயற்கை வகுப்பு எடுப்பது பற்றி வினவ கிளம்பிய போது, தோட்டத்தைச்சாளரம் வழியாக எட்டிப்பார்க்க, ஒரு சிலம்பன் நீர் பாத்திர விளிம்பில் அமர்ந்து நீரில் படுத்து நீந்திக் கொண்டிருந்த மற்றொரு சிலம்பனை எடுத்துத்தள்ளி விட,முயன்று கொண்டிருந்தது. இது எனக்கு திடீரெனப்புரியவில்லை. ஆனந்தமாக குளியலிடுகிறது என இதைப்புகைப்படமாக்க மாடியிலிருந்த காமெராவை எடுக்க படிக்கட்டுகளில் ஓடினேன். அதற்குள் நீரில் நன்கு ஊறிய சிலம்பன் மயிர்களை கால்களில் இழந்து உயிருக்குப்போராடி கொண்டிருந்தது. நானும்  இரு நிமிஷம் தாமதம் செய்யது விட்டேன்.பாத்திரம் அருகே நெருங்கி பறவையை எடுத்த போது கிட்டத்தட்ட உயிர் போய் விட்டது. அதை மீட்க பிரயத்தனப்பட்ட விளிம்பில் அமர்ந்திருந்த சிலம்பன் மதில் மேல் அமர்ந்து என்னையும், இறந்த சகபறவையையும் பார்த்து சோகப்பட்டது எனது மனதைப் பிசைந்தது.

            குடித்த நீர் வருமா எனப்பறவையைத்தலைகீழாகப்பிடித்து, மார்பை சற்றே அழுத்தி, அலகு வழியே காற்றை ஊதி, ஒன்றுக்கும் சிலம்பன் கண்திறக்கவில்லை. அதன்கதை முடிந்தது. ஒரு சிலம்பன் கண்மூட நானும் கால் பங்கு காரணமாகி விட்டது, என்னை உறுத்தியது. அதன் தலைவிதி முடிந்தது என என்னை நானே தேற்றிக்கொண்டேன்.குற்ற உணர்வினால் அன்று இரவு சரியாக உறக்கம் பிடிக்கவில்லை. எப்போதும் தன்னிலையிலிருத்தல் அவசியம். பல சிந்தனையிலிருந்தால் இப்படித்தான் விபரீதம் நடக்கும்.

Saturday, June 28, 2014

நீர் காகம்

சூரியக்குளியலிடும் நீர்காகங்கள்

அரும்பு மீசையிலிருந்த போது நின்னை
காகமெனும் வகையென்றிருந்தேன்.
காகத்துக்கு மாறுபட்டவன் நீ!
தனியாகவமும் கூட்டமாகவும் சஞ்சரிப்பு
வானில் வரிசையாய் உயரே பறந்து
எங்கு போகிறீர் வேற்றூறுக்கா?
நீண்ட பொழுது தாமதிக்கும் பொறுமைசாலி
இலையுதிர்த்த மரங்களில் கும்பலாய் அமர்வு,
அதிசயமாயிருக்கும். நகலில் காகமென
நினைத்து தங்கள் எண்ணத்தோடு போவார்
ஒரேயொரு கருப்பு சேலை கொண்ட ஏழை
நனைந்த சேலை உலர்த்துவது போல,
காலை வெய்யிலில் உலர்த்தி நிற்பாய்.
மீனை மட்டுமே நம்பியிருப்பவளே!
நீரில்லாமல் நீயில்லையாதலின்
நீர் உன் நாமத்தில் முதன்மையாயிற்று.
நீரில் குதியாட்டமிடும் சிறாரென
கூட்டமாக குளத்தில் வரிசையில் விழுந்து
தெப்பமாய் நனைந்து, மிதந்து, தாவி
! உங்கள் களிப்பு இவனுக்கும் தாவட்டும்.
நீர் மூழிகிக்கப்பலென மாறும் காகமே!
மீனைப்பிடிக்க என்ன தந்திரம்!
நெடுங்கழுத்துப் பறவையே! நீர்க்காகமே!