Showing posts with label Trekking. Show all posts
Showing posts with label Trekking. Show all posts

Sunday, March 6, 2016


மலை முகடு- விமர்சனம்
ஓதிமலை

மஞ்சம் பட்டி
மலை முகடு – நூல்
நூலாய்வு……….                                                           சூலூர் கலைப்பித்தன்

மலையும் காடும் மனதுக்கு மகிழ்வைக்கொடுப்பனவாகும்.மலையோடும் காட்டோடும் இணைந்து வாழ்பவர்கள் இறைவனோடு உறவாடி வாழ்பவர்கள் என்று கூறலாம். அதனால் தான் சித்தர்களும், முனிவர்களும், தவசிகளும் இயற்கையொட்டி வாழ்ந்தார்கள். நம்மைப்போன்றவர்கள் அப்படியொரு மலைவனவாச ஆனந்தத்தைச் சந்திக்க முயற்சித்தால் சின்ன சாத்தன் போன்றவர்களின் நூலைப்படித்து செல்வது நல்லதாகும்.
            அவர் பயணிக்கும் போது, வனவலத்தை காசு கொடுத்து வராத சுகம் என்கிறார். எப்படியெனில் வனவலம் புத்துணர்வு தரும். அதை தண்டம் என்று யாரும் கூறிவிடமுடியாது. நடக்க மறந்தவர்களுக்கு இது முடியாது. வனவலத்தில் இயற்கை அறிவு, ஒருங்கிணைப்பு, ஒற்றுமை, தைரியம், சமயோசிதம், உடல்வலிவு, பழங்குடி வாழ்க்கை முறை, மூலிகை, விலங்கியல், தாவரவியல், புவியியல், மண்ணியல், திசைகள், வரைபட அறிவு என பலவும் பெறலாம். அதாவது  ஒரு பல்கலைக்கழகப்படிப்பே படிக்கலாம் என்கிறார்.
            தூவானம் காட்டில் தவழும் ஆற்றைப்பிரித்துக் கூறியிருக்கும் விதம் அழகு சேர்க்கிறது. விடலையாறு, வாலிப ஆறு, வயோதிக ஆறு எனப்பிரித்து கூறுகிறார். அங்கிருந்த நீர்வீழ்ச்சியில் இவர் நீராடும் போது இவர் கவிஞரும் கூட என்பதை நீரூபிக்கிறார்.
            நீரோடு நீராகக் கரைந்து போவேன்
            மேகத்தோடு மேகமாக நகர்ந்து போவேன்
வனவிலங்கு கணக்கெடுப்பு எந்த முறையில் எடுக்கப்படுகிறது என்பதை கூறியிருப்பது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
            வாண்டல் டேம் என்று ஒரு டேம். இந்த பயண வழியில் ஒரு மலையருவி வருகிறது.அதில் இவர் மனம் குளிர குளிக்கிறார். நண்பர் இளங்கோவன் கூப்பிடுகிறார். அதற்கு இவர் சலித்துக் கொண்டுகூறும்போது,‘பெண்உதட்டில்முத்தமிட்டுக்கொண்டிருந்தவனைப்பிரியச்சொன்னது போல’… உணர்வில் தோய்ந்து வெளியேற மனமில்லாமல் வந்தேன் என்கிறார். இது இயற்கையோடு இணைந்த இன்பத்துப்பாலின் வெளிப்பாடு.
            நான் அடிக்கடி மலைப்பிரதேசம் செல்லக்கூடியவன். எனக்கென்னவோ இயற்கை மீது அப்படியொரு வசீகரம். நீலவானம், பச்சையாகத்தேயிலைத்தோட்டங்கள், அதன் நடுவே சில்வர் ஓக்மரங்கள், யுகலிப்டஸ்கள் நெடிதுயர்ந்து வானம் துடைக்கும் ஒட்டடைக்குச்சிகள் போன்ற நடுக்கிளைகள். ஓ…என்னவேன்று நான் சொல்வேன்? என்கிறார். அதனால் ஒரு மலைவாழ் பெண் ஆடு மேய்ப்பதை இவர் ஆட்சேபணை செய்கிறார். ஆடு வளர்த்தால் காடு போய்விடும் என்கிறார். என்னே! இவரது இயற்கை வெறி!இயற்கையை விரும்பி தினம் கலந்தால் நோயில்லை.
            மலைமுகடுஆசிரியர்சின்னசாத்தன்நூலின்ஒவ்வொரு வனவலக்கட்டுரைத்தொடக்கத்திலும் உலகப்பேரறியர்களின் பொன்மொழிகளைக்கூறி தொடங்கியிருப்பது அழகு. ‘பூமி அனைத்து மக்களின் தேவைகளையும் பார்த்துக்கொள்ளும். ஆனால் தனி மனிதனின் பேராசைக்கு அது ஈடு கொடுக்க முடியாது’ - மகாத்மா காந்தி. இவை இயற்கையை சீரழிக்காதீர் என தாக்கீது கொடுக்கின்றன. பின் வரும் கட்டுரைகள் இயற்கையை ரசித்து இன்புறத்தூண்டுகின்றன.
            வனவலம் பத்து நாட்களுக்கு ரீங்காரமிடும். பிரியும் போது ஏக்கமாகயிருக்கும். அங்கங்கே உதிர்வும், பிரிவும் இருக்கும். இப்படித்தான் பிறப்பும், இறப்பும். தனித்தனியாக வருவோம். போவோம். யாரும் எவரும் சேர்ந்தே இருப்பதில்லை, எனத்தத்துவம் பேசுகிறார். பெருமாள் முடி மலைப்பயணத்தில் ஆசிரியர் GPS எனும் (Global position system) கருவியின் பயன்பாட்டை விளக்குகிறார்.
            மானாம்பள்ளி வனவலக்கட்டுரையில் ஆசிரியர் கொங்கு நாட்டு வரைபடத்தைக்கூறுகிறார். வனம் கொன்ற வரலாறு எனக்கூறும் இவர் ஆங்கிலப்பேராசைக்காரர்கள் எப்படியெல்லாம் வனத்தை அழித்தனர் என படம் பிடித்துக்காட்டுகிறார். தர்மலிங்க ஸ்வாமி மலை என்ற மலையேற்றக்கட்டுரையில் அந்தப்பகுதியில் இருக்கும் ராணுவப்பயிற்சி முகாமைக்குறிப்பிடும் போது ‘ராணுவத்துக்கு செலவழிக்கும் பணமிருந்தால் உலகிலேயே வறுமையை ஒழித்து விடலாம்’ என்கிறார்.
            கழுகு மலை மலையேற்றக்கட்டுரையில் அங்குள்ள கோயில் முற்றுப்பெறாமல் பாதி நிலையில் நிற்கிற நிலை கண்டு வேதனையில் ஆசிரியர் அதைப்பற்றிக்கூறும் போது, ‘ எனக்கு இந்த வெட்டுவான் கோயில் முற்றுப்பெறாமல் நிற்பது கவலை அளிக்கிறது. இனிமையான கீதம் பாதியில் நின்றது போல……அழகிய இளம் பெண் தன் யவ்வன வயது கடக்கும் முன்னே இறந்து விட்டது போல…. சுவராஸ்யமான கதை பாதியில் நின்றது போல… என வர்ணனை படிப்போரையெல்லாம் வருத்தத்தில் ஆழ்த்துகிறது.
            நீர் காகம் இறுதிப்பகுதி வேட்டைக்காரனுக்கும், பறவை ப்ரியருக்கும் நடக்கும் சம்பாஷணை போர் வித்தியாசமான உக்தியில் போகிறது. வேட்டைக்காரன் நீர் காகத்தை சுட விரும்புவதை, பறவைப்ரியர் அதை எப்படியெல்லாமோ தடுத்தும், இறுதியில் வேட்டைக்காரன் வெற்றிக்களிப்பில் நீர் காகத்தை சுட்டு வீழ்த்துவது மனதில் வடு ஏற்படுத்தி விட்டு நினைவில் அகலாத சம்பவமாக உள்ளது.

வனவலப்பயணம், மலையேற்றம், இலக்கிய நயமான இருவேறு துருவத்தில் இயற்கை பற்றிய கணவன் மனைவி சம்பாஷணை, கட்டுரைகளில் பறவைப்பிரியர்களுக்கு விருந்து, பல இயற்கை சால் அறிவுப்பொக்கிஷம் என கைப்பிடித்து வனத்துக்குள் அழைத்துச்செல்லும் சின்ன சாத்தன், இயற்கை அன்னைக்கும், ஏன் தமிழன்னைக்கும் புதிய அணிகலன் பூட்டி அழகு பார்க்கிறார். வாசித்தால் நாமும் தான். தமிழுக்குப்புதுமை படைக்கும் நூல். இது ஒரு பசுமை இலக்கிய விருந்து.

Friday, October 17, 2014

பெருமாள் மலை வனவலம்- Trekking ( 4.10.2014-சனிக்கிழமை)


Rough sketch map prepared by Guna

vellaipparai-  standing middle Dr.Gunasekaran,& Mohan prasadh: (sitting) Dinesh

            பெருமாள் மலை படு உயராமனதும், வெள்ளியங்கிரி மலையைப் போலவே பராக்கிரமம் வாய்ந்தது. இதன் ரகஷ்யங்கள் தெரியாமல் ஏறப்போக படு சிரமத்துக்கு ஆளானோம். இந்த கரடு முரடான மலை மீது ஏற புரட்டாசி சனிக்கிழமைகளில் காட்டு இலாக்கா அனுமதி வேண்டியதில்லை. நாங்கள் மூன்றாவது சனிக்கிழமை சென்றோம். ஏழு பேர் சென்றதில் ஒரே ஒரு நண்பர் வீரர் குணசேகரன் மட்டுமே மலை முகட்டை தொட முடிந்தது. இந்த பராக்கிமமலையை தெற்கிலிருந்து தேவராயபுரம் வழியாக நாங்கள் அணுகினோம். விராலியூர்காரர்கள் தென்மேற்கு திசையிலிருந்து வருவார்கள். கேரளத்திலிருந்து, வெள்ளக்குளம் கிராமத்தினர் மேற்கிலிருந்து வருவார்கள். வடக்குப்புறமாக அணுகக்கூடியவர்கள் தூமனூர் காரர்கள். (Please refer attached sketch map given by Dr. Gunasekaran- not for scale) வடக்கில் செம்பக்கரை வழி வந்தால் யானை துரத்தும். ஆயுள் கெட்டியாகஇருந்தால் தப்பிக்கலாம்.
            வடக்கில் Slim Ali Centre for ornithology and natural science (SACON) உள்ளது. நான் இங்கிருந்து இரண்டொரு முறை பறவை நோக்கலில் தூமனூர் சென்றிருக்கிறேன். அடிவாரப்பெருமாள் கோயிலில் இருந்து தீபம் காட்டினால் முகடுப்பெருமாள் கோயிலுக்குத்தெரியும். முன்னோர் திறமையைப்பார்த்துமெய்சிலிர்க்கிறேன். இச்சிக்குழி என்ற காட்டு ஓடை வழியாக அடிவாரப் பெருமாளை தரிசித்து விட்டு மலையெறலாம் வாருங்கள். முதலில் எங்களை தடுமாற வைத்தது அப்போது தான் அங்கிருந்து சென்ற ஒரு ஜோடி யானையும் அதன் குட்டியும்; குட்டியோடு இருப்பின் தாய் யானையும், தகப்பன் யானையும் கோபம் கொள்ளும். வழி மாற்றி நடந்தோம். காட்டுப்பன்றிகள் கிழங்கு சாப்பிட நிறைய இடங்களில் மண்ணைப்பறித்திருந்தன.

            விலாவாரியாக இப்போது எழுத மாட்டேன். அதை எனது எட்டாவது நூலாக,சந்தியாப்பதிப்பகத்தின் மூலம் வெளியிடயிருக்கும் மலைமுகடு (Trekking) எனும் நூலில் படித்து வியப்படையுங்கள்.  முதலில் எங்களை சிராய்த்தது முட்காடு(scrub jungle). நடந்தோம். மலைமேல் நீர் ஓடை ஒன்றுமே இல்லாதது வியப்புத்தான். அதனால் நா வரட்சி. பிறகு சைக்கஸ் (Cycus)நிறைய காணமுடிந்தது. இவை அறுகி வரும் தாவரம். வெளியில் இனப்பெருக்கம் நிகழ்த்தும் தாவரம். வெள்ளைப்பாறை வந்ததும் தண்டபாணி திரும்பினார். அதற்கு முன்னமே பிரகாஷ், சந்தோஷ் கழன்று கொண்டனர். வெள்ளைப்பாறைக்கு இடது பக்கம் சோத்தாபாளையம் வெகுசிறு கோயில். பிறகு வரண்ட இலையுதிர் காடு (Dry deciduous forest)தென்படுகிறது. வழி,மழை பெய்தால் இறங்கிவரும் சிற்றோடைகள் தாம். வழியெங்கிலும் யானைச்சாணம். நிறைய வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்தன. ஈரமான இலையுதில் காடு(Moist deciduous forest) ஆரம்பத்திலேயே இடி மின்னலுடன் மழை வெழுத்துக்கட்ட, எண்பது விழுக்காடு நடந்த நானும் மோகனும் திரும்பினோம். பிறகு தினேஷ் அரைமணிக்குப்பின்பு திரும்பினார். நான் நடந்த நேரம் ஆறரை மணிப்பொழுது.இலையுதிர் காட்டில் நான்கடிக்குப்புல்வெளி பரந்து கிடக்கிறது. குணா நடந்த நேரம் பதினோரு மணிப்பொழுது. கடைசி மலை படு பிரயத்னப்பட்டு ஏறிய நண்பர் குணா, மனைவி தொடுத்த துளசி மாலையை உச்சிப்பெருமாளுக்கு சாத்தி, வழிபட்டார் எங்களுக்காகவும், அவர் குடும்பத்துக்காகவும்……….

Thursday, September 26, 2013


Himalaya Trekking
ட்ரெக்கிங்-கை வனவலம் என்று சொல்வேன்.
மழை வரும் போலிருந்தது, தூறல் போட ஆரம்பித்ததும், காமெராவை உறையில் போட ஆரம்பித்தேன்.மழை பெய்தால் வழுக்கி, வழுக்கி வரவேண்டியதுதான். பெரும் மழை பெய்தால் ட்ரெக் பை, துணிகள் நனைந்து எடையேறி நடப்பது படுசிரமமாகிவிடும். நடுங்க ஆரம்பித்தோம். 'இடிஇடி'த்தது.மரங்களடியில் அமர முடியாது. இடி விழலாம். பயந்தவாறு நடந்தேன். அண்ணாந்து பார்த்தால், மலைப்பு கொள்ள வேண்டியிருந்தது. எப்படி ஏறப்போகிறோம்! அவ்வளவு தூரமா! என திகைப்பு ஏற்பட்டது.எனவே பத்தடி தூரம் மட்டும் பார்த்துக்கொண்டு நடந்தால் போதுமானது. 'மடங்கி மடங்கி'ஏறினோம். மழைத்தூறல்-- ஏறும் போது, இரு கைகளாலும், 10 கிலோ எடை முதுகுப்பையாலும், புவியீர்ப்பை மையத்தில் சரியாக விழச்செய்து நடந்தோம்.


அந்த வழியாக மூன்று இமயமலைப் வாசிகளான இளம் பெண்கள் முதுகில்வெண்சாக்குடன் வந்தனர்.’பஹன் ஏக் போட்டோ’ என தயவாகக் கேட்டு நிழற்படம் எடுத்தேன். அவர்கள் கால்களில் வெறும் சாதாரண ‘கட் சூ’. விரல்களில் லேஸ் போட்டவாறு நடக்கின்றனர். எங்களுக்காக மலைமீது, பனிக்குளிரில் காய்கறி, அரிசி, கோதுமை கொண்டு போகின்றனர். அவர்கள் தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக எப்படியெல்லாம் தங்களை சிரமப்படுத்திக்கொள்கிறார்களென என் மனம் கசிந்தது. அவர்களுக்கு பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் கொடுத்தேன். தன்யவாத்பஹனோ
ஆஹா! வாழ்நாளில் இது போல பரவசத்தின் உச்சியில் இருந்ததில்லை. தொலைநோக்கியில் ராதாப்பாணியிலிருந்து பார்த்த நீலநிறடெண்ட் வந்தது. அங்கு சிறு திறந்த வெளிக்கடை. தீ, கட்டைகளில் எரிந்து கொண்டிருந்தது. இதயமும், நுரையீரல்களும் அழுத்தி,அழுத்தி ஆக்சிஜன் எடுத்து, கரியமலவாயுவை வெளியேற்றிக்கலைத்துப்போய், கால்கள் கெஞ்ச, உச்சியை அடைந்து ஓய்வெடுக்கும் முதல் பத்துநிமிஷங்கள், ஆஹா! இந்த சின்னசாத்தன் வெறும் எழுத்துகளால் விளக்க முடியாது. அதை மலையேறி உணர வேண்டும்.




பனிமலைவாசி,அலுமினிய திறந்தகெட்டிலில் கொதித்த தேநீரில் புதினா, இஞ்சி எல்லாம் இட்டு அருமையான தேநீர் தயாரித்துத்தந்தார். தேநீர் எட்டு ருபாய். பனிரெண்டாயிரம் அடி உயரத்தில் கிடைக்குமா? வாவ்! அருமை! பனிமலை வருடிய குளிருக்கு தேநீர் 'சுடச்சுட' தொண்டையில் இறங்கியது. அந்த இடம் சுவர்க்கமாக இருந்தது. ஐஸ் கட்டி மழை பெய்தது.எனது தோள்பை மீது வீழ்ந்து அரைஅங்குலத்துக்குப்படிந்தது. குகை என்று சொல்ல முடியாத, உள்வாங்கிய குழிவில் அமர்ந்திருந்தோம். அருகில் தீ எரிந்து கொண்டிருந்தது. குளிருக்கு படு இதமாக இருந்தது. உள்ளங்கை வாட்ட தீ நாக்குகள். ! சுவர்க்கம் இது தானா! கருப்பு நாய் மேல் ஐஸ் துகள்கள்வீழ்ந்தன. பாவம். அதை என்னருகில் வரவழைத்து நிறுத்தினேன்.
ஆலம்கட்டி மழை பார்த்து எவ்வளவு நாளாயிற்று. சுற்றிலும் ஐஸ்கட்டி மலை மடிப்புகள், இரண்டடியில் எரியும் நெருப்பின் கனப்பு. கையில் சுடச்சுடத் தேநீர். இறைவன் என்னுள் சுகந்தமாக ஆனந்திக்கிறார். மலையேற்றமா! வனவலமா! உடலும், மனமும், ஆன்மாவும் ஒரே லயம் தோழா! ஏறி ஏறி கால்கள் கெஞ்ச, மூச்சிறைப்பது எனக்கு மட்டும் கேட்க, காதோரம் ஜிவ்வென இரத்தம் ஏற சிரமத்தின் உச்சியால் 12,000 அடி உச்சி அடைந்தேன். Welcome to Nagaru-என துணி பேனர் தெரிய, கீழே வாழ்வா, சாவா, என்று வந்த தோழர் தோழியருக்கு இமயமலை எதிரொலிக்க கேம்ப் பகூன்சி என குதூகலமாகக்கத்தினேன்.





மேலே சொன்னது எனது ‘இமயவலம்’ நூலின் 91-ம் பக்கம்-இந்த நூல் பயண இலக்கியத்தில் ரூ- 10000 பரிசு பெற்றது. தமிழக நூலக ஆணைக்குழு இந்த நூலைத்தேர்வு செய்து, 600 நூல்களை தமிழக அனைத்து நூலகங்களுக்கும் வழங்கியது. 2004-ல் என் வாழ்வில் நடந்த நிகழ்வை பகிர்கிறேன்.