Sunday, June 12, 2016


தஞ்சமடைந்த புறா
                ஒரு காலைப்பொழுது உள்ளுர் நண்பர் ஆன்ட்ரூஸ் காரில் ஒரு வெண்புறா கையிலிருக்க வந்திறங்கினார். ‘சார்! இந்தப்புறா நம் சூலூர் குளத்தில் கிடைத்தது. கழுகு துரத்திக்கொண்டு வர, இது பயந்து போய் குளத்து நீர்ல விழுந்திருச்சு. இறக்கை முழுக்க ஈரமாக, இதனால் பறக்க முடியலை. நான் ஒரு கோலெடுத்து ஆகாசத்தாமரை மேல் வந்ததை பக்கமிழுத்து எடுத்தேன். இது காப்பாத்தறாங்கன்னு தெரிஞ்சுகிச்சு. அதனால அருகில வந்தது.’ என்று முன்கதைச்சுறுக்கத்தைச்சொன்னார்.
 நான் கையில் வாங்கி கடப்பைக்கல் பெஞ்சில் விட, அது பயந்து போய் மதில் சுவர் ஓரம் குதித்து அங்கேயே நின்றது. ஒரு வேளை இது sub adult-ஆக இருக்குமோ? என சந்தேகம் வந்தது. ஒரு வேளை ஈரம் உடம்பில் காய்ந்தால் பறக்கலாம். எதற்கும் ஒரு அட்டைப்பெட்டியில் இட்டு வைக்கலாம். எங்கள் காலனியில் பூனை, நாய் அதிகம். பிடித்துக்கொண்டு போய்விடும். உடனே ஒரு அட்டைப்பெட்டி காற்றுப்புக ஓட்டைகள் இட்டு, அதற்குள் குடிக்க நீர், என்னிடமிருந்த சாமையைத்தூவி, புறாவைப்பிடித்து உள்ளே விட்டேன்.
மதியத்துக்கு மேல் கம்பு வாங்கிப்போட ஜோசப் ரெஜினால்ட் யோசனை வழங்கினான். வினி, முடிந்தால் அட்டைப்பெட்டியிலிட்ட புறாவை கோவை கொண்டு வரவும் என்றாள். பயந்திருக்கும். அடி பட்டிருந்தால் சிகிச்சை அழிக்கலாம் என்றாள். இருவரும் Animal Rescuers என்ற NGO வைத்துள்ளனர். வாழ்க! ஒரு நாள் முழுக்க அட்டைப்பெட்டியில் இருந்தது. நான் இன்னொரு அட்டைப்பெட்டி வாங்கி வந்தேன். இப்போது இருப்பது இடம் போதவில்லை. போதிய இடமளிக்கும் அட்டைப்பெட்டிக்கு புறாவை மாற்றினேன். மறுநாள் காலை பார்க்க அட்டைப்பெட்டி கீழ் புறம் நனைந்திருந்தது. எச்சமிட்டிருக்க நாற்றம் குடலைபிடுங்கியது. பறவைகள் இயற்கையில் இருந்தால் ரசிக்கலாம்.
இயற்கை தான் அதைப்பராமரிக்க முடியும். ஆயிரம் வருஷங்களாக மனிதனோடு பழகும் புறா காலையில் வெளியில் எடுத்து விட அது மீண்டும் பயத்தில், படிக்கட்டு அடியில் போய் அமர்ந்து கொண்டது. நான் கையில் கம்பு வைத்துக்கொண்டு அழைக்கிறேன், வர மாட்டேன் என அடம் பிடித்தது. கீழே கம்பைத்தூவி விட்டேன். அதன் அலகு கம்பைப்பொறுக்க ஏதுவாக இருந்தது. வினிக்கு மறுபடியும் போன் செய்ய, ‘நீங்கள் அங்கு இருக்க வேண்டாம். வந்துடுங்க. அது தானே வந்து தானியம் பொறுக்கும்’, என்றாள்.

நானும் பறந்து போனால் இயற்கை பார்த்துக்கொள்ளும். நம்மால் இது ஆகாத செயல். தினமும் பெட்டியைச்சுத்தம் செய்ய வேண்டும். ஒரு பெட்டியைக்காயவைத்து உபயோகப்படுத்த வேண்டும். நான் குளித்து, சிவபெருமானை தேவாரம் பாடி போற்றி விட்டு வந்து பார்த்தால் வெண்புறா ஒன்று கையில் வராமலே….உனது கதை புதுக்கவிதை எனப்பாடுவதற்குள், அது அதன் ஞாபகமாக எனக்கு ஒரு இறகை மட்டும் விட்டு விட்டு பறந்து போய்விட்டது. சந்தோஷமாகப்பறந்து போவதை அடியேன் பார்க்கக்கொடுத்துவைக்கவில்லை.

Friday, May 20, 2016


வீகன் ஆசிரமம் 
பிரம்ம பிரகாசம் தொடர்பு; 98423 77758


           நான் அடிக்கடி வீகன் ஆசிரமம் போய் விடுவேன். தேடல் இருந்தால் தான் எதுவுமே பெற முடியும். இந்த ஆசிரமம் பொள்ளாச்சியின் கோவைப் பாதையில் வடக்கி பாளையம் பிரிவில் இறங்கி, சிவாலிக் பள்ளிப்பாதையில் 1 கி.மீ போனால் ஆசிரமத்துக்குள் நுழையலாம். ஐந்தரை ஏக்கர் தென்னந்தோப்பு, சுற்றிலும் வேலியோரம் தேக்கு. மாமரம், பலா, சர்க்கரைப்பழ மரங்கள், காட்டுமல்லி என மனதிற்கு இனிமை தரும். நண்பர் பிரம்மப்பிரகாசம் அரிசி, நீர், தேங்காய் வைத்து, அணில், மரங்கொத்தி, சிலம்பன், காகம், வால்காக்கை எனக்கவருவார். பனங்காடைகள் சப்தமிட்டு மின் கம்பிகளில் அமர்ந்திருக்கும். 
                   தோப்புக்கு நடுவே கவ் பாய் ஸ்டைலில் மேலே ஏற்றிப்போடப்பட்ட வெட்டவெளி ஷவர் இரண்டு பொருத்தியிருக்கும் பாங்கு அருமை. அவைகளில் ஒன்று தபதப வென அருவி போல வீழும் குழாய், இரண்டாவது ஷவர். ஆனந்தமாகக்குளிக்கலாம். வெட்டவெளிக்குளியல். சுற்றிலும் தென்னந்தோப்பு. குளியலறைக்குளியலைவிட அனுபவித்து இயற்கையோடு இயற்கையாக மாறிப்போகலாம். பிறகு எதிரிலிருக்கும் காட்டு மல்லிகை, ராமபாணம் வெள்ளைப்பூக்களை ரசித்துகொண்டே உரையாடல் எனக்கும், பிரம்ம பிரகாசத்துக்கும் நடக்கும். மகாசைவத்தைப்பற்றி ஒரு நூல் எழுத ஆழமான கலந்துரையாடல்  நாள் முழுக்க நடக்கும். தொடக்கத்தில் நான் தேவாரம் இசையோடு பாடுவேன். ஆசிரமம் என்றால் நானும் என் நணபரும் மட்டும் தாம். நான்கு நாட்களுக்கு கூட தங்கிவிடுவேன். சில வேளைகளில் மேற்குப்புற நாடுகளில் வந்து தங்குவர். 
               அனைவரும் தாவர உண்ணிகளாக மாறினால் இந்த பிரபஞ்சம் சிபிட்சமாக இருக்கும் என்பது எல்லோரும் உள் வாங்க வேண்டும். திணிக்கும் கருத்தல்ல. உங்கள் வயிறு என்ன சுடுகாடா? உங்களையே அண்டியிருக்கும் பிராணிகளை கொன்று ஏன் உண்ணுகிறீர்கள்? உண்ண எவ்வளவோ இருக்கும் போது உயிர் வதை செய்வது ஞாயமா? உங்கள் இதயத்தைத்தொட்டு உணர்ந்து பாருங்கள். எங்கள் குடும்பம் NV குடும்பம் என்றால்,நீங்கள் ஏன் கண்மூடித்தனமாக உங்கள் குடும்பத்தை பின்பற்றுகிறீர்கள். 
             
Water canal adjacent to Vegan Ashram

Front view of Ashram. Any spiritual & vegans may contact Brahma Prakasam-cont:: 98423 77758
சரி! மாலையில், சைக்கிளில் கிராம எழிலைப்பார்ப்பதற்கு பெடலை மிதிப்பேன். காலை மாலை தோப்பின் அருகில் நெளியும் வாய்கால் தண்ணீரில் குளிக்க ஓடுவேன். மக்கள் அங்கேயும் என்னை தனிமையில் குளிக்க விடுவதில்லை. துவைக்கும் பெண்டிர். என்ன செய்ய? சைக்கிளை மிதித்து கிழக்கில் ஒரு கி.மீ போய் ஒரு ஆள் இறங்கும் படிக்கட்டில் இறங்கி, ஆளை இழுக்கும் விசையில் ஓடும் நீரில் ஜட்டியுடன் இறங்கி குப்புறப்படுத்துக்கொள்வேன். நீரில் மிதந்து கிடக்க, நீர் என்னை படு வேகமாக இழுக்கும். கைவிரல்கள் சிமெண்ட் தளம் பாவிய காரைப்பிளவைப்பிடித்துக்கொள்ளும். இல்லையேல் நான் புரட்டப்பட்டு, பல கிமீ போய் விடுவேன். நீர் உடம்பை மிருதுவாக்க, முழங்கையில் ஒரு முறை, பிறகு வலது கால் பெருவிரலில் சிராய்ப்புக் காயம் பட எரிந்தது. நீர் எனது அம்மை… நீரைச்சுத்தமாக வைத்திருப்பது நமது தலையாய நியதி.

Friday, May 6, 2016

ஒன்றையொன்று…


பூனை பிடித்து வந்த அண்டகாகக்குஞ்சு

குஞ்சை இழந்து தவிக்கும் அண்டங்காக ஜோடி
ஒன்றையொன்று…………
நான் வளர்த்த மழை மரத்தில் ஒரு அண்டங்காக ஜோடி கூடு கட்டியிருந்தது. ஒரு பொழுது அந்த ஜோடி காகம் பூனையைத்துரத்திக்கொண்டு வந்தன. பூனை வாயில் ஒரு அண்டங்காக குஞ்சு. விஜயவினாகர் கோயில் அருகில் ஒரு செம்பருத்தி செடியருகில் வைத்து விட்டது. காகக்குஞ்சு உயிருடன் தான் இருந்தது. மரத்தின் மீது ஏறி கூட்டிலிருந்ததைக்கவ்விக் கொண்டு வந்து விட்டது. அம்மா, அப்பா காகம் முயற்சியில் இறங்கியிருந்தன. அருகிலிருந்த ஆலமரத்தில் அமர்ந்து கா….கா… எனக்கத்திக்கிடந்தன. என்ன முயற்சி செய்தாலும் மீண்டும் அந்த குஞ்சு கூட்டுக்கு காகங்கள் எடுத்துச்செல்ல முடியாது. நான் இடைமறித்தால் காகங்கள் என் மண்டையைப்பதம் பார்க்கும். மேலும் மரமேறிக் கூட்டில் கொண்டு போய் வைக்க முடியுமா? கொழுப்புப்பிடித்த பூனை உண்ணவும் இல்லை. கொஞ்சம் நாழி கழிந்து பார்க்க குஞ்சு அப்படியே உயிருடன் கிடந்தது. மூன்று அல்லது நான்கு முட்டை வைத்து அடைகாத்துப்பின் குஞ்சு பொரித்த பிறகு இந்த விபரீதம். ஒரு குஞ்சின் தலைவிதி அப்படியாயிற்று. நாம் இதில் செய்ய ஒன்றுமில்லை. வனத்தில் இன்னும் என்னென்ன நிகழும்!
மூன்றாம் நாள் குஞ்சை பெரிய குப்பைத்தொட்டியில் போடலாம், வாசம் பரவுகிறதே என குனிந்தால், எங்கிருந்தோ குஞ்சைப்பறி கொடுத்த ஜோடி அண்டங்காகம் பறந்து வந்து என்னை அடிக்க வந்தன. எப்படியொரு சோகம் அவைகளுக்கு! மூன்று நாட்களாகியும் காகஜோடிக்கு ஞாபகமிருக்கிறது. ஆச்சர்யமாகத்தான் உள்ளது. பறவைகளும் நம்மைப்போல் தாம். அதில் சந்தேகமா உங்களுக்கு? குஞ்சை நாய் கவ்வும் அல்லது குழி தோண்டிப்புதைக்க வேண்டும். இது முன்பொரு முறை எங்கள் வீதியில் உள்ள ஒரு வீட்டின் குட்டையான பாதாமி மரத்திலிருந்த கூட்டில் வெண்தலைச்சிலம்பன்களின் நான்கு குஞ்சுகளும் பூனை தூக்கி ஓடியது.

நாம் இதில் தலையிட முடிவதில்லை. தலையிடவும் கூடாது. அதனால் தான் பறவைகள் நான்கு முட்டைகள் வைக்கின்றன. ஒன்றிரண்டு கழிந்து விடும். பூனைகள் எங்கள் காலனியில் வளர்ப்பார் யாருமில்லை. அவைகள் இனப்பெருக்கமாகி தங்களுக்குள் ஒரு வீட்டை தத்து எடுத்துக்கொண்டன. மீதமான தயிர், பால் கொல்லைப்புறத்தில் கொட்டுவது, உணவு மீதமானவை, பிறகு இது போல குஞ்சுகள், எலி, வேலி ஓணான் என உண்டு வாழ்கின்றன. வீட்டுப்பூனை எங்கு போகும் வீட்டைஅண்டித் தான் வரும். பறவைகள் மரத்தின் மேல் தான் கூடு வைக்கும். ஈசன் பூஉலகை விளையாட்டாகப்படைத்திருக்கிறார். ஒன்றுக்கு ஒன்று உணவாகிப்போகிறது.

Wednesday, April 20, 2016


ஆலமரத்தின் கதை





ஆலமரத்தின் கதை
            ஆலமரத்தின் விதை ஒரு மீன் முட்டையை விட சிறியதானாலும் வளர்ந்துவிட்ட பிறகு ரஜ, கத, துரக, பதாதிகள் கீழே தங்க நிழல் தந்து நிற்கும் ஒரு தடாகம். எத்தனை ஜூவராசிகள்! அட! அட!  அப்போதைய காலகட்டத்தில் கிராம சபையென்ன, சிறார் ஊஞ்சலாட்டமென்ன, பெண்கள் ஊர் வம்பென்ன, என எப்போதும் குழுமுமிடமாக இருக்கும். அக்காலத்தில் பணியர் என்ற வியாபார இனம் இம்மரத்தடியில் குழுமி வியாபாரம் செய்வர். ஆலமரத்தடியில் வியாபாரம் நடத்தினால் கொடுக்கல், வாங்கல் பிரமாதமாக நடக்குமாம். விழாக்கள் வேறு இம்மரத்தடியில் ஜோர் படுமாம். பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. பணியர் இதனடியில் கூடுவதால் இதற்கு Banyan Tree என்று நாமகரணம் செய்விக்கப்பட்டது. எனது மர குருநாதர் வேலுசாமி ஐயாவுக்கு இந்த மரம் எனில் உயிர். அவரது உற்ற தோழர் பழனி ஐயா ஆலான் என்று தான் பகருவார். இருவரும் வாட்ட சாட்டமாக 6 அடிக்கு மேல் 80 வயது தாண்டி இருந்தனர். பழனிக்கவுண்டர் கடின உழைப்பில் தண்ணீர் சுமந்து, சுமந்து மரங்களை செலக்கரிசிலில் வளர்த்தார். வேலுக்கவுண்டர் காசு செலவு செய்தார். இவ்வளவு கடின உழைப்பிலும் ஊர் மக்கள் விட்டேத்தி- யாக இருப்பது எனக்கு வியப்பாக உள்ளது. ஒருவரும் துணைக்கு வரவில்லை. இளைஞர்கள் தாங்கள் உண்டு தங்கள் படிப்பும், கனவுக்கன்னிகளும் உண்டு என்று இருக்கின்றனர். பிற மனிதர்கள் தானுண்டு தங்கள் பொண்டு, பிள்ளையுண்டு என பிழைபைப்ப்பார்த்து கடுகு உள்ளத்தோடு இருக்கின்றனர். ஆலமரம் இனி இப்பூமியில் அதுவும் ஊருக்குள் வாழ முடியாத நிலை ஏற்பட்டு விட்டது எனலாம். காரணங்கள்;-
# இடத்தை அடைக்கிறது (ஆம்! ரியல் எஸ்டேட் பாதிக்குமே!)
#வேரும் விழுதும் விடும் போது அருகில் உள்ள கட்டிடம் பாதிக்கும்.

கொஞ்சம் நஞ்சம் இருக்கும் மரங்களின் விழுதுகளை ஊன்ற விடாமல் மரத்தின் கீழ் வியாபாரம், தண்டுகளில் ஆணியடிப்பது, விழுதுகளில் ஊஞ்சலாடுவது, இதில் மாடு, எருமை குட்டி ஈனும் போது வரும் நஞ்சை பையிலிட்டுக்கட்டுவது, விழுது ஊன்ற வழியில்லாமல் தார் ரோடு இடுவது, ஏரி மேட்டில் வைத்து, விழுது நீரில் ஊசலாடுவது போல சகல விதமான துன்மார்க்க செயல்களையும் செய்து ஆலானை வாழ வழியற்றுப்போகுமாறு செய்வது மனிதன் உள்ளத்தில் கருணை என்பது துடைத்தெறியப்பட்டதைக்காட்டுகிறது. நீங்களெங்கே! நம் முன்னோர்களெங்கே! மண்ணில் ஆசை வைத்த மக்கள் உருப்படுவது கிடையாது. ஆலானுக்கு நிச்சயமாக இடம் தர மாட்டார்கள். அந்தகோ!
நீ மரமல்ல மகான்

ஆலமர நிழல் கிராம மையம்
அக்கால கிராம மக்களுக்கு நன்றி
ஆல் எனக்கு ஒரு சின்னத்தடாகம்
தர்ம சிந்தனை கிராமத்தாருக்கு;
ஆல் மக்கள் நீதிசபை
ஆலம் பழங்களின் சிகப்பு
இதயம் சுண்டும் காதலி விழிகள்
தடாகம் நிறையப் பறவைகள்
கிளைகள் தோறும் பறவையொலி
ஓ! ஆலே! வாழ்ந்தாலுன் போல
பெரு வாழ்வு வாழனும் பூமியில்
உன் மடி தொங்கும் விழுதுகளில்
ஊஞ்சலாடுவேன். சந்தன நிழலே!
மனசுக்குள் ஆனந்தம் முட்டும்
மைனா நானா வித ஒலி கூட்டும்
வா! உண்ணு! இளைப்பாறு!
செர்ரி நிறப்பழங்கள் அசைந்து கூப்பிடும்.
குக்குறுவான், மாங்குயில், கொண்டைக்குயில்
நீந்தும்; ஆல் எனக்கு சின்னத்தடாகம்.
சிறார் கும்மாளமிடும் திடல்
உன்னை அன்னாந்து பார்த்து
பெருமூச்சு விடுவேன்; முத்தமொன்று
கட்டிப்பிடித்து ஈய்வேன்
ஆயின் என் கைகள் போதாது
பரந்த மனசு போல நீ விரிந்தவன்
தர்மவான் போல உயர்ந்தவன்
உனை அண்டி எத்தனை ஜீவன்கள்!
ஆல் எனத்தழைத்து விரியணும்
ஆசி நல்கல் இப்போது புரியது.

நீ மரமல்ல மகான்!

Monday, April 4, 2016


இரக்கம் என்பது சிறிதும் இல்லையடா……!

Both Photo taken by Sri T.R.A. Arunthavaselvan

கொண்டலாத்தி (Hoopoe) 
 இரக்கம் என்பது சிரிதும் இல்லையடா……!
பொள்ளாச்சி, பணிக்கம் பட்டி மஹா சைவம் ஆசிரமத்துக்கு போயிருந்தேன். தோப்புகள்  மற்றும் வானம் பார்த்த நிலங்கள், மழை பெய்தால் புற்கள் தோன்றும் பூமியாகிப்போயின.அங்கு நானும் நண்பரும் உணவுக்காக ஸ்கூட்டரை உருட்டிப்போகும் மண் பாதை தெற்குப்புறம் தோகைகள் உதிர்ந்து போன மொட்டைத் தென்னை மரங்கள். அங்கு வேலை நடந்து கொண்டிருந்தது. விசாரித்துப்பார்த்த போது, வீட்டு மனைகள் பிரிப்பதாக சொன்னார்கள். எனக்கு ‘திக்’கென ஆயிற்று.
தென்னை காய்ந்து போன மரங்கள் தாம், ஆனால் அதன் உயரமான தண்டுகளின் துளைகளில்  புள்ளி ஆந்தை, பச்சைக்கிளி, பனங்காடை, மைனா, மரங்கொத்தி, கொண்டலாத்தி  என சாதாரணமாக நாம் பார்க்கக்கூடிய பறவைகள் முட்டைகள் வைத்து குஞ்சு பொரிக்கும்.  துளைகள் இப்பறவைகளால் ஏற்படுத்துவதல்ல, ஏனெனில் இதன் அலகுகள் அப்படியொன்றும் வலிவில்லை. காய்ந்த மரங்களின் தண்டுகள் வெய்யிலுக்கும், மழைக்கும் இளகிப்போய் துளை ஆவதுண்டு. இந்த பொந்துகளை இப்பறவைகள் பயன்படுத்திக்கொள்ளும். தற்போது மார்ச் (பங்குனி). இன்னும் ஒரு மாதத்தில் சித்திரை சுழி மழை வரும். பிறகு தென்மேற்குப்பருவ மழை. அப்போது நிறையப்பூச்சிகள் கிளம்பும். பிப்ரவரி நமக்கு வஸந்த பருவம். குளிர் முடிந்து கதிரவன் கதிர்கள் உக்கிரமாக எத்தனிக்கும் போது பழங்கள், மலர்கள் அரும்பி மலரும், காய்க்கும். எனவே இப் பறவைகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் காலமிது.
இந்த ரியல் எஸ்டேட் பேராசைக்காரகள் காய்ந்த தென்னை மரங்களை வெட்டத்தொடங்கினர். நானும் நண்பரும் உணவுக்குச்செல்லும் போது பேசிப்பார்த்த போது,குஞ்சோ அல்லது முட்டையோ இருந்தால் அந்த மரங்களை வெட்ட மாட்டோம் என்றார். ஆனால் மூன்று வாரம் கழித்து வெட்டி சாய்த்தார்கள். எமக்குத்தெரிந்து மூன்று கிளிக்குஞ்சுகள் மண்ணோடு மண்ணாகின.

பொள்ளாச்சிநெடுஞ்சாலை நான்கு வழிப்பாதை ஆகிக்கொண்டிருக்கிறது. நான் போன மாதம் சென்றிருந்த போது நானும் நண்பரும் நெடுஞ்சாலை ஓரம் மேற்குப்புறமாக நின்றிருந்த மழை மரத்தில் அதாவது தூங்க வாகை மரத்தின் கிளைகளில் நான்கைந்து காகத்தின் கூடுகள் பார்த்தோம். அப்போது இரு சிறுவர்கள் உண்டிவில்லில் கூட்டை அடிக்க, நாங்கள் அவர்களைத்துரத்தினோம். கைபேசி படம் எடுக்கப்பின்னால் ஓட, அவர்கள் பயந்து பாதம் பிடரியில் பட ஓடினர். அப்பாடா! நான்கு கூடுகள் காப்பாற்றி விட்டோம். சரி! கண்ணுகளா! நெடுஞ்சாலை அகலமாகிக்கொண்டிருக்கிறது, தெரியுமில்லே! இப்ப என்ன செய்வே மக்கா? மனிதன் சுயநலத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். செய்யத்தயங்கவும் மாட்டான். இயற்கை மவுனமாக கண்காணித்துக்கொண்டு தான் உள்ளது. இயற்கையின் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.  

Monday, March 21, 2016


வாய்க்கால் குளியல்





            கால்வாய் நீரோடு அகலமாகப்போகும். வாய்க்கால் அதைக்காட்டிலும் குருகலாகப் போகும் எந்நேரமும் அழுப்பு சளிப்பற்று  சலசலவென ஓசை எழுப்பி வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கும் வாய்க்கால் பார்த்த வசீகரத்தில் நான் தினமும் பல மணி நேரம் அதோடு பிரியாமல் இருந்தேன். சிமெண்ட்டும், கற்களாலும் கட்டப்பட்டு ஒரே நேர்கோடாக நீரைப் வழிந்தோடச்செய்வது மனிதனின் கால்வாய் மற்றும் வாயக்கால். இதன் போக்கை மனிதன் நிர்ணயிப்பான். ஆறோ அதன் போக்கை அதுவே நிர்ணயித்துக்கொள்ளும். அகலத்தில் மாறுபட்டு பள்ளம் கண்ட இடம் நோக்கிப்போகும். பொள்ளாச்சி, பணிக்கம்பட்டி கிராமத்தில் மனிதன் ஓடவிட்டிருக்கும் சிமெண்ட் வாய்க்காலில் இவன் தினமும் இரு வேளை இறங்கி ஆலிங்கணம் செய்வான். அதிகாலை ஆறு மணிக்கு விடிய எத்தனிக்கும் போதும், பகல் போது முடியும் தருவாயிலும் தண்ணீரின் வருடலில் இருப்பான். பனை மரங்களும், பனை பட்சிகளும் இவனை வேடிக்கை பார்க்கும். நீரின் வேகமும், அதன் நிறமற்ற நிறமும், ஒளியற்ற ஒளியும், ஒலியற்ற ஒலியும், இதமும், தணிப்பும் நீர் ஒரு விசித்திரமான கலவை. மேனியில் ஒட்டியும் ஒட்டாமல் ஈரமாக்கி செல்லும் பாங்கு அருமை. நீர் தேகத்தினைக் குளிர்வித்து, இருக்கும் அலுப்பை துடைத்து எடுத்து, மேனியை மசாஜ் செய்து புத்துணர்ச்சி ஏற்படுத்தி விட்டு, நன்றி சொல்வதற்குள் நலுவி விடும் பாங்கு என்னவென்று சொல்வேன். என் தாய் மேனி பிடித்து குளியலிட்டது போல இருக்கும். நீர் விசித்திரமானது. எந்த சோதனைச்சாலையிலும் புறப்படாத உயிரின் ஜுவிதம். அனைத்து உயிர்களின் இரத்தம். தினமும் வாய்கால் நீரைப்பார்த்தே நான்கு மணி நேரம் கழித்திருந்தான் இந்த சின்ன சாத்தன். கால்வாயில் கதிரவன் உதயம் பார்த்தான். கால் ஒட்டிய மண் ஒத்தையடிப்பாதையில் வாய்க்காலோடு இணைந்து   சில போது நடந்தான். சில போது சைக்கிளில் ஆதவனை நோக்கிச்சென்றான். வாய்க்கால் இவனுக்கு எதிர் திசையில் வேகமெடுத்து ஓடியது. கிரணங்கள் நழுவும் நீரில் சிகப்பு நிறத்தில் ஜாலமிட, சற்றே நகர்ந்தால், தங்க நிறப்பொடிகள் மிதந்து போவதைக்கண்டான். எத்தனை ஜிவனுக்கு உயிர் கொடுத்து எந்த எதிர்பார்ப்புமற்று நாள் முழுக்க நோகாமல் ஓடுவது வியப்பளிக்கிறது. ஆடைகளை அவசரமாக களைந்து விட்டு நீரைப்பார்த்து ஆனந்தபட்டு ஓடுவது, எப்படியுள்ளது எனில், ரொம்ப நாள் பார்க்காத, தன் குழந்தையை தகப்பன் அணைக்கத் தவிப்பும், தாயும், மகனும் பிரிந்திருந்த காலம் நெடிது கழிந்து, தாய் மடியில் முகம் புதைக்க ஓடிய சிறுவன் தவிப்பும் தினமும் பூபாள நேரத்திலும், மாலை சந்தியா காலத்திலும் இவனுக்கு இருந்தது. H2 O என விஞ்ஞானி சொன்னாலும் இவனுக்கு என்னவோ பிறவிதோறும் இந்த நீர் தாயாக இருந்தது.

Sunday, March 6, 2016


மலை முகடு- விமர்சனம்
ஓதிமலை

மஞ்சம் பட்டி
மலை முகடு – நூல்
நூலாய்வு……….                                                           சூலூர் கலைப்பித்தன்

மலையும் காடும் மனதுக்கு மகிழ்வைக்கொடுப்பனவாகும்.மலையோடும் காட்டோடும் இணைந்து வாழ்பவர்கள் இறைவனோடு உறவாடி வாழ்பவர்கள் என்று கூறலாம். அதனால் தான் சித்தர்களும், முனிவர்களும், தவசிகளும் இயற்கையொட்டி வாழ்ந்தார்கள். நம்மைப்போன்றவர்கள் அப்படியொரு மலைவனவாச ஆனந்தத்தைச் சந்திக்க முயற்சித்தால் சின்ன சாத்தன் போன்றவர்களின் நூலைப்படித்து செல்வது நல்லதாகும்.
            அவர் பயணிக்கும் போது, வனவலத்தை காசு கொடுத்து வராத சுகம் என்கிறார். எப்படியெனில் வனவலம் புத்துணர்வு தரும். அதை தண்டம் என்று யாரும் கூறிவிடமுடியாது. நடக்க மறந்தவர்களுக்கு இது முடியாது. வனவலத்தில் இயற்கை அறிவு, ஒருங்கிணைப்பு, ஒற்றுமை, தைரியம், சமயோசிதம், உடல்வலிவு, பழங்குடி வாழ்க்கை முறை, மூலிகை, விலங்கியல், தாவரவியல், புவியியல், மண்ணியல், திசைகள், வரைபட அறிவு என பலவும் பெறலாம். அதாவது  ஒரு பல்கலைக்கழகப்படிப்பே படிக்கலாம் என்கிறார்.
            தூவானம் காட்டில் தவழும் ஆற்றைப்பிரித்துக் கூறியிருக்கும் விதம் அழகு சேர்க்கிறது. விடலையாறு, வாலிப ஆறு, வயோதிக ஆறு எனப்பிரித்து கூறுகிறார். அங்கிருந்த நீர்வீழ்ச்சியில் இவர் நீராடும் போது இவர் கவிஞரும் கூட என்பதை நீரூபிக்கிறார்.
            நீரோடு நீராகக் கரைந்து போவேன்
            மேகத்தோடு மேகமாக நகர்ந்து போவேன்
வனவிலங்கு கணக்கெடுப்பு எந்த முறையில் எடுக்கப்படுகிறது என்பதை கூறியிருப்பது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
            வாண்டல் டேம் என்று ஒரு டேம். இந்த பயண வழியில் ஒரு மலையருவி வருகிறது.அதில் இவர் மனம் குளிர குளிக்கிறார். நண்பர் இளங்கோவன் கூப்பிடுகிறார். அதற்கு இவர் சலித்துக் கொண்டுகூறும்போது,‘பெண்உதட்டில்முத்தமிட்டுக்கொண்டிருந்தவனைப்பிரியச்சொன்னது போல’… உணர்வில் தோய்ந்து வெளியேற மனமில்லாமல் வந்தேன் என்கிறார். இது இயற்கையோடு இணைந்த இன்பத்துப்பாலின் வெளிப்பாடு.
            நான் அடிக்கடி மலைப்பிரதேசம் செல்லக்கூடியவன். எனக்கென்னவோ இயற்கை மீது அப்படியொரு வசீகரம். நீலவானம், பச்சையாகத்தேயிலைத்தோட்டங்கள், அதன் நடுவே சில்வர் ஓக்மரங்கள், யுகலிப்டஸ்கள் நெடிதுயர்ந்து வானம் துடைக்கும் ஒட்டடைக்குச்சிகள் போன்ற நடுக்கிளைகள். ஓ…என்னவேன்று நான் சொல்வேன்? என்கிறார். அதனால் ஒரு மலைவாழ் பெண் ஆடு மேய்ப்பதை இவர் ஆட்சேபணை செய்கிறார். ஆடு வளர்த்தால் காடு போய்விடும் என்கிறார். என்னே! இவரது இயற்கை வெறி!இயற்கையை விரும்பி தினம் கலந்தால் நோயில்லை.
            மலைமுகடுஆசிரியர்சின்னசாத்தன்நூலின்ஒவ்வொரு வனவலக்கட்டுரைத்தொடக்கத்திலும் உலகப்பேரறியர்களின் பொன்மொழிகளைக்கூறி தொடங்கியிருப்பது அழகு. ‘பூமி அனைத்து மக்களின் தேவைகளையும் பார்த்துக்கொள்ளும். ஆனால் தனி மனிதனின் பேராசைக்கு அது ஈடு கொடுக்க முடியாது’ - மகாத்மா காந்தி. இவை இயற்கையை சீரழிக்காதீர் என தாக்கீது கொடுக்கின்றன. பின் வரும் கட்டுரைகள் இயற்கையை ரசித்து இன்புறத்தூண்டுகின்றன.
            வனவலம் பத்து நாட்களுக்கு ரீங்காரமிடும். பிரியும் போது ஏக்கமாகயிருக்கும். அங்கங்கே உதிர்வும், பிரிவும் இருக்கும். இப்படித்தான் பிறப்பும், இறப்பும். தனித்தனியாக வருவோம். போவோம். யாரும் எவரும் சேர்ந்தே இருப்பதில்லை, எனத்தத்துவம் பேசுகிறார். பெருமாள் முடி மலைப்பயணத்தில் ஆசிரியர் GPS எனும் (Global position system) கருவியின் பயன்பாட்டை விளக்குகிறார்.
            மானாம்பள்ளி வனவலக்கட்டுரையில் ஆசிரியர் கொங்கு நாட்டு வரைபடத்தைக்கூறுகிறார். வனம் கொன்ற வரலாறு எனக்கூறும் இவர் ஆங்கிலப்பேராசைக்காரர்கள் எப்படியெல்லாம் வனத்தை அழித்தனர் என படம் பிடித்துக்காட்டுகிறார். தர்மலிங்க ஸ்வாமி மலை என்ற மலையேற்றக்கட்டுரையில் அந்தப்பகுதியில் இருக்கும் ராணுவப்பயிற்சி முகாமைக்குறிப்பிடும் போது ‘ராணுவத்துக்கு செலவழிக்கும் பணமிருந்தால் உலகிலேயே வறுமையை ஒழித்து விடலாம்’ என்கிறார்.
            கழுகு மலை மலையேற்றக்கட்டுரையில் அங்குள்ள கோயில் முற்றுப்பெறாமல் பாதி நிலையில் நிற்கிற நிலை கண்டு வேதனையில் ஆசிரியர் அதைப்பற்றிக்கூறும் போது, ‘ எனக்கு இந்த வெட்டுவான் கோயில் முற்றுப்பெறாமல் நிற்பது கவலை அளிக்கிறது. இனிமையான கீதம் பாதியில் நின்றது போல……அழகிய இளம் பெண் தன் யவ்வன வயது கடக்கும் முன்னே இறந்து விட்டது போல…. சுவராஸ்யமான கதை பாதியில் நின்றது போல… என வர்ணனை படிப்போரையெல்லாம் வருத்தத்தில் ஆழ்த்துகிறது.
            நீர் காகம் இறுதிப்பகுதி வேட்டைக்காரனுக்கும், பறவை ப்ரியருக்கும் நடக்கும் சம்பாஷணை போர் வித்தியாசமான உக்தியில் போகிறது. வேட்டைக்காரன் நீர் காகத்தை சுட விரும்புவதை, பறவைப்ரியர் அதை எப்படியெல்லாமோ தடுத்தும், இறுதியில் வேட்டைக்காரன் வெற்றிக்களிப்பில் நீர் காகத்தை சுட்டு வீழ்த்துவது மனதில் வடு ஏற்படுத்தி விட்டு நினைவில் அகலாத சம்பவமாக உள்ளது.

வனவலப்பயணம், மலையேற்றம், இலக்கிய நயமான இருவேறு துருவத்தில் இயற்கை பற்றிய கணவன் மனைவி சம்பாஷணை, கட்டுரைகளில் பறவைப்பிரியர்களுக்கு விருந்து, பல இயற்கை சால் அறிவுப்பொக்கிஷம் என கைப்பிடித்து வனத்துக்குள் அழைத்துச்செல்லும் சின்ன சாத்தன், இயற்கை அன்னைக்கும், ஏன் தமிழன்னைக்கும் புதிய அணிகலன் பூட்டி அழகு பார்க்கிறார். வாசித்தால் நாமும் தான். தமிழுக்குப்புதுமை படைக்கும் நூல். இது ஒரு பசுமை இலக்கிய விருந்து.