Saturday, June 28, 2014

நீர் காகம்

சூரியக்குளியலிடும் நீர்காகங்கள்

அரும்பு மீசையிலிருந்த போது நின்னை
காகமெனும் வகையென்றிருந்தேன்.
காகத்துக்கு மாறுபட்டவன் நீ!
தனியாகவமும் கூட்டமாகவும் சஞ்சரிப்பு
வானில் வரிசையாய் உயரே பறந்து
எங்கு போகிறீர் வேற்றூறுக்கா?
நீண்ட பொழுது தாமதிக்கும் பொறுமைசாலி
இலையுதிர்த்த மரங்களில் கும்பலாய் அமர்வு,
அதிசயமாயிருக்கும். நகலில் காகமென
நினைத்து தங்கள் எண்ணத்தோடு போவார்
ஒரேயொரு கருப்பு சேலை கொண்ட ஏழை
நனைந்த சேலை உலர்த்துவது போல,
காலை வெய்யிலில் உலர்த்தி நிற்பாய்.
மீனை மட்டுமே நம்பியிருப்பவளே!
நீரில்லாமல் நீயில்லையாதலின்
நீர் உன் நாமத்தில் முதன்மையாயிற்று.
நீரில் குதியாட்டமிடும் சிறாரென
கூட்டமாக குளத்தில் வரிசையில் விழுந்து
தெப்பமாய் நனைந்து, மிதந்து, தாவி
! உங்கள் களிப்பு இவனுக்கும் தாவட்டும்.
நீர் மூழிகிக்கப்பலென மாறும் காகமே!
மீனைப்பிடிக்க என்ன தந்திரம்!
நெடுங்கழுத்துப் பறவையே! நீர்க்காகமே!


Saturday, June 21, 2014


தினைக்குருவி தங்கும் விடுதி
Dormitory of Whitebacked Munia (Lonchura striata)
            
             
        மற்ற பறவைகளை ஒப்பிடும் போது வெண்முதுகு தினைக்குருவி இரவு தங்கும் விடுதி அலாதியானது. இப்பறவைகள் 3 () 4 அறைகள் கொண்ட கூடு வைக்கோல் மற்றும் காய்ந்த புற்களால் கட்டுகிறது. அது 5 அங்குலக் குறுக்களவும், ஒரு வட்ட குழாயமைப்புடனும் உள்ளது. இரண்டு அங்குல அளவுக்கு இரு முனைகளில் வழி அமைத்துள்ளது. பின்புற வழி முன்புற வழியை விட சற்று சிறியதுபின்புற வழி ஆபத்துக்காலத்தில் தப்பிச்செல்லும் வழி. யாராவது எதிரி கூட்டுக்குள் வந்தால் தப்பிச்செல்ல அது வழி கொடுக்கும். எந்த மாதிரி முன் ஜாக்கிரதை! பாருங்கள்இந்த கூட்டில் முட்டை வைத்து அடைகாத்து, குஞ்சு பொரித்த பிறகு உணவூட்டி அதைப் பிரிந்து விடும். இந்தக்கூடுகள் 6 () 8 அடி உயரத்தில் வேலமரத்தில் கட்டுமானம் செய்யும். குஞ்சுகள் வளர்ந்து சென்ற பிறகு இந்தக்கூடுகளை தங்கும் விடுதியாக உபயோகிக்கும் இப் பறவை.
            பல முறை இம்மாதிரியான கூடுகளைப் பார்த்துள்ளேன். ஒரு சூரிய அஸ்தமன நேரத்தில், நீரற்றுப்போன சூலூர் குளப்படுகையுள் நடந்து கொண்டிருந்தேன். ஆரஞ்சு சூரியன் கருநீல மலைப்பின்னே விழும் நேரம்அந்த இதமான நேரத்தில் நான் ஒரு தினைக்குருவியின் கூட்டினை அடையாளம் கண்டேன். அதற்குள் முட்டை அல்லது குஞ்சுகள் இருக்குமா எனப் பார்த்தேன். அந்த நேரம் பார்த்து ஒரு ஜோடி தினைக்குருவிகள் எங்கிருந்தோ வந்து என்னை ஆச்சர்யப்படவைத்தன. அவை நான் இருக்கிறேன் என கூட்டுக்குள் நுழையாமல் அருகிலிருந்த ஒரு வேல மரத்தில் அமர்ந்தன. தினைக்குருவிகள் நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போகக்காத்திருந்தன. நான் பத்தடி நகர்ந்து, ஒரு சிறு மரத்தின் பின்பு ஒளிந்து கொண்டேன். ஆனால் பறவைகள் கூட்டில் நுழையாமல் தயங்கின. சிறிது நேரத்தில், ஆதவன் மறைய இரவின் கருப்புத்துணி விரிய, ஜோடி தினைக்கருவிகள் மெதுவாக கூட்டுக்கருகில் வந்தமர்ந்தன. அவை இரவு தங்குவதற்கு காலியான கூட்டினை சில காலம் பயன் படுத்துவது எனக்கு வியப்பை வரவழைத்தது.

            இன்னொரு முறை தில்லி முட்காடான ஊர்வேலங்காட்டில் இந்த மாதிரியான இரவு தங்கும் விடுதியாக உபயோகப்படுத்தும் கூட்டினைப்பார்த்தேன். இதை எப்படி முனைவர் சலீம் அலி விவரிக்கிறார் எனப்படித்து ஆனந்தப்படுங்கள். “ The nests are used as dormitories by the family till long after the young have flown.”

Tuesday, June 10, 2014


பறவை விடு தூது


Rose-ringed Parakeet (பச்சைக்கிளி)

Red Shank (பவளக்காலி)

Painted Stork (செவ்வரி நாரை)


            சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் பறவைகளை தூது விட்டிருக்கிறார்கள். காதலன்(தலைவன்) காதலிக்கு(தலைவி) தூது, தலைவி தலைவனுக்குத்தூது எனவும் ஆன்மிகஞானிகள், சிவபெருமானுக்கு பறவையைத்தூதாக அனுப்பியுள்ளனர். ஞானிகள் பறவை தூதில் சிவன் மீது இருக்கும் அளவு கடந்த அன்பைவெளிப்படுத்தி தங்கள் குறையோடு முக்தியை வேண்டுவார்கள். காதலன், காதலி பரஸ்பரம் காதலோடு தங்கள் பிரிவின் துயரத்தை வெளிப்படுத்துவார்கள்.
            தூது பறவை மட்டுமல்லாது பணம், தமிழ், புகையிலை, காக்கையுடன் செருப்பு கூட தூது போயிருக்கிறது.
பாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த
காராருஞ் செழுநிறத்துப் பவளக்காற் கபோ தங்காள்
தேராரும் நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும்
நீராருஞ் சடையாருக் கென்நிலைமை நிகழ்த்தீரே.
            பவளக்காலி என்றால் Red Shank(Ref: டாக்டர் . ரத்னம்- தமிழில் பறவை பெயர்கள்)இது காஷ்மிர், மற்றும் லடாக்கிலிருந்து தெற்கு வருவதை தொலைநோக்கி இல்லாத காலத்திலேயே ஞானசம்பந்தர் பவளக்காலியை  சம்பந்தர் தேவாரத்தில் 7-ம் நூற்றாண்டில் இப்படிப்பதிவு செய்துள்ளார். அழகுற அமைந்த, சிகப்பு நிறத்துப் பவளம் போன்ற கால்களையுடைய பவளக் காலியே! தேரோடும் நெடுவீதி கொண்டசீர்காழியில் உறையும் சிவபெருமானுக்கு, நீரில் நனைந்த சடையுடைய சிவபெருமானுக்கு எனதுப்பிரிவுத் துயரை சொல்லாயோ!

பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்
அறக்கண்என் னத்தகும் அடிகளாரூரை
மறக்க்கில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே.

பறந்து திரியும் கிளிகளே! பாடித்திரியும் கிள்ளைகளே! அறத்துக்கண்ணை உடைய சிவபெருமானை மறக்கமுடியாமல், எனது வளையல்கள் கைகளில் நிற்பதில்லை. இரவில் உறக்கம் வருவதில்லை என சிவனிடம் உணர்த்தக்கூடிய வலிமை உங்களிடம் உளது. ஆகையனால் எனது பிரிவாற்றாமையை உணர்த்துங்கள். என சுந்தரர் 9-ம் நூற்றாண்டில் பாடியுள்ளார்.

இலைகள்சோ லைத்தலை இருக்கும் வெண் ணாரைகாள்
அலைகொள்சூ லப்படை அடிகளா ரூரர்க்குக்
கலைகள்சோர் கின்றதும் கனவளை கழன்றதும்
முலைகள்பீர் கொண்டதும் மொழியவல் லீர்களே.

என் கலைகள் அனைத்தும் சோர்வுருகின்றன. தண்டைகள் கழலும் அளவுக்கு உடல் மெலிவுற்றேன். முலைகள் உனது பிரிவால் விம்மித்தணிகின்றன. இலைகள் அடர்ந்த சோலைகளில் இருக்கும் வெண்ணாரைகளே! எனது பிரிவுப்பெருந்துன்பத்தை சிவபெருமானிடம் பகர்வாயா?
            இந்த பக்தி இலக்கியத்தில் சுந்தரர் தன்னை பிரிவாற்றாமையில் துயரப்படும் பெண்ணாக உருவகப்படுத்திப் பாடுகிறார். சிவபெருமான் ஒருவர் தான் இப்பிரபஞ்சத்தில் ஆடவர், மற்றெல்லா ஜீவராசிகளும் பெண்கள். எனவே எப்போதும் எந்த இன்பமும் நமக்கு நிலைத்திருக்காது. சிற்றின்ப நிலையிலிருந்து பேரின்ப நிலைக்குப் போகவேண்டும். அந்த உண்மை ஆடவனை அடைய பெண்களாகிய நாம் முயன்று பேரின்பநிலையில் அழுந்த வேண்டும். அது தான் முக்தி, மோட்சம்,கைலாச பிராப்திமற்றும் ஓஷோ சொல்லும் வெட்டவெளி யாகும்.


            

Monday, May 26, 2014

   பூனைகளின் உட்சண்டை....   INFIGHTING OF CATS     









           பூனைகளை புலியினம் எனலாம். அதனுடைய குணாதிசயங்கள் இதற்கும் இருக்கிறது. எங்கள் குடியிருப்புப் பகுதியில் பல பூனைகள் வயதுவாரியாக உலவுகின்றன. யாரும் எடுத்து வளர்த்தவில்லை.எப்படி வயிற்றை வளர்க்கின்றன, எங்கு தூங்குகின்றன , எங்கு போய் இறந்து போகின்றன என்பன மர்மமாக உள்ளது. ஒரு நாள் இரவு எட்டு இருக்கும், எனது தங்கை பெண்கள்,கல்லூரி மற்றும் பள்ளியில் படிப்பவர்கள், கோடை விடுமுறையில் விருந்தினராக வந்தவர்கள் கீழ் தளத்திலிருந்து மாடிக்கு ஓடி வந்தனர். நான் கணனியில் முகநூலில் பொழுதை கழித்துக் கொண்டிருந்தேன்.
 பரபரப்பாக, ‘ முன்னறையில்  பெரியபூனை,குட்டிப்பூனையைக்கடிச்சுக் கொதறுது, வாங்க!’ என்றனர். நான் கீழ் தளம் செல்ல அங்கு குட்டிப்பூனை பயத்தில் மலஜலம் கழித்து, கழுத்திலும், பக்கவாட்டு வயிற்றிலும் பெரிய பூனையின் நகங்கள் பதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. நாங்கள் சென்றதும் மஞ்சள், வெள்ளைப் பெரிய பூனை தப்பித்து ஓடியது. ‘நான் குட்டிப்பூனை இறந்து விடும், இதற்கு நாம் என்ன செய்ய முடியும்?’ என புலம்பி, வருத்தப்பட்டுச்சொன்னேன். ‘க்ரில் மேல், அறைக்கூரைப்பகுதியெல்லாம் தாவிப்பாய்ந்து தப்பிக்கப்பார்த்தும், அந்த அரக்கத்தனமான பூனை விடவில்லை. கடித்துக்குதறியிருக்கிறது.’ என உறவுப்பெண்டிர் பயந்த குரலில் சொன்னார்கள். மலஜல நாற்றம் அடித்தது. ‘காலைக்குள் பூனை இறந்து விடும். காலையில் அடக்கம் செய்யலாம். நாம் செய்ய ஒன்றுமில்லை. மோசமான நிலையில் உள்ளதுஎன நகர்ந்தேன்.
காலையில் பூனையை அடக்கம் செய்ய மண்வெட்டியெடுத்து  எதிர்புறத்தோட்டத்தில் இரண்டடிக் குழி வெட்டிவிட்டு பூனையைத்தூக்கினால் அது லேசாக நெளிந்தது. பூனை பாவம் பொல்லாதது, உயிரோடு புதைப்பது மகா பாவம் என ஒரு பிளாஸ்டிக் பையில் இட்டு கார் ஷெட்டில் காருக்கு அடியில் வைத்தேன். அது மறுநாள் பார்த்தால், மூன்றடி தள்ளிக்கிடந்தது. நாய், மற்றும் திரியும் பூனைகள் மீண்டும் கடித்துக்குதறிவிடுமோ என பயம் வாட்டியது. மறுநாள் ஒரு அட்டைப்பெட்டியில் வைத்து, சுற்றிலும் பினாயில் தெளித்து வாசம் வராமல் சுத்தமாக அந்த இடத்தை வைத்தேன்.
தம்பி 15 கி.மீ தாண்டியுள்ள ஊரில் வசிக்கிறான். அவன் வீட்டில் பூனை ஒன்றுபோக ஒன்று வளர்த்துவர். அவனை வரச்சொன்னேன். அவன்நீயோசல்ப்காயத்துக்கு மருந்துப்பொடியும், பால் கொடுக்க ஒருசிரின்ச்சும் கொண்டு வந்தான். பால் சிரின்ச் ஊசியில் கொடுத்தான். பால் இறங்குவது கழுத்து அசைவில் உணர்ந்தேன். காயத்துக்கு ‘நீயோசல்ப்பொடி தூவினான். ‘இப்படியே பராமரியுங்கள்எனச்சொல்லிப்போய் விட்டான். நானும் ஆறு நாள் போராடிப்பார்த்தேன். பினாயில், நீர், சிரின்ச் ஊசிபால், ‘நீயோசல்ப்பொடி, எனக்கவனித்துப்பார்த்தேன். பால் கொடுத்தால் உடல் முழுக்க நனைந்து போனது. அது பாதி உள்ளிறங்க, பாதி வெளியில் வழிந்தது. பாலுக்கு கட்டெறும்பு, சின்ன எறும்பு என வந்து பூனை வாயிலும், உடம்பிலும் ஏறின. பார்க்கப்பரிதாபமாக இருந்தது.
இந்த கருப்புவெள்ளை நிறக் குட்டிப்பூனையின் தகப்பன் பூனைக்கும், வேறொரு வெள்ளை, மஞ்சள் நிறப் பூனைக்கும் விரோதம். அதை நீங்கள் புகைப்படங்களில் பார்க்கலாம். (படம்; 1,2) ஒன்றையொன்று அடிக்கடி கத்திக்கொண்டும் உறுமிக்கொண்டும் சண்டையிடும். அதன் மையமாக வைத்து கருப்புவெள்ளை தகப்பனது,மஞ்சள் வெள்ளை  பூனை, கருப்பு வெள்ளை குட்டிப்பூனையை குதறிவிட்டது. இப்படியும் நடக்குமா! நடக்கும். விலங்குகளின் பதிவுகள் நம்மிடமும் உள்ளது. இப்போதும் இது மாதிரி நடந்து கொள்கிறோமா, இல்லையா?
குட்டிப்பூனை இறந்துபட்ட பிறகு விரோதப்பூனைகளிரண்டும் ஆக்ரோசமாக புலிகளைப்போல சண்டையிட்டுக் கொள்வதைப் பாருங்கள். (படம்; 3)
அடிக்கடி உயிர் இருக்கிறதாவென என் கண்கள் பூனையின் வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியைப் பார்க்கும். பூனை சில பொழுது விழித்துப்பார்க்கும், முணகிநெளியும். அது படும் அவஸ்தை, உயிர் விடப்போராட்டமா? உயிர் தக்க வைத்துக்கொள்ளப்போராட்டமா? எனத் தெரியாது, நானும் கண்ணீர் விடாத சோகத்திலிருந்தேன். நாற்றம்…. எனக்கு கிருமிகள் ஒட்டிக்கொள்ளுமோ! பூனை மெலிந்தது. நிற்க வைத்தேன் பல முறை அது கீழே சரிந்து, சரிந்து விழுந்தது. நான்கு பூனைகள் தனித்தனியாக வந்து பார்த்துச்சென்றன. நமது வேண்டப்பட்டவர் மருத்துவ மனையில் இருந்தால் ரொட்டி, ஆப்பிளோடு சென்று பார்ப்பதில்லையா! அது போல வாயில்லா ஜிவன்களுக்கும் அந்த உணர்வு இருக்கிறது.
திருப்பிப்போட அது எப்போதோ கழித்த சிறுநீர் அடர் மஞ்சலாக இருந்து, ஒரு பக்க உடலில் பரவி ஒட்டியிருந்தது. வாய் பிளந்திருந்தது. வெளிரியிருந்தது. இறைவனுக்குத்தெரியும். எந்தக் கானகத்தில், எந்த மரத்தில், எந்தக்கிளையில் எந்தச்சிமிறில், எந்த இலை வாடி வீழும் என அவரைத்தவிர யாவருக்கும் தெரியாது, என கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்த மதத்தில் எழுதியுள்ளார். அது நினைவுக்கு வந்தது.மனம் சங்கடமாக இருந்தது. மஹாத்மா காந்தி ஒரு ஆடு படும் மரணப்போராட்ட அவஸ்தையைப்பார்த்து மனம் புண்ணாகி, சகிக்காது ஊசி போட்டு கொன்று விடச்சொன்னார்,என நண்பர் சொன்னார்.

பூனையை இனி என்னால் காப்பாற்ற முடியாது என உணர்ந்தேன். இயற்கை நியதியில் தலையிடுகிறேன், இது கூடாது எனவும் மனதுக்குப் பட்டது. ஆறு நாள் முயற்சி பலன் தரவில்லை. ஒரு பாதி உடைந்த பிளாஸ்டிக் குடத்திலிட்டு பூனையை  50 செண்ட் மைதான மூலை தில்லி முட்புதருக்கடியில் வைத்தேன். கடைசியாக அந்தப்பூனை என்னை பச்சைக் கண்ணில் விழித்த விதம் என் இதயத்தை பிழிந்தது. சர்வம் சிவமயம்

Saturday, May 17, 2014

பச்சை வாயன்

Small Green billed Malkoha
(Rhopodytes viridirostris)

அதிகாலைப்பொழுது காகம் கரையும் வேளையில்

சின்னப்பச்சைவாயன்

            புத்தபெளர்ணமியன்று(14.05 2014) மருதலை அடிவாரம் தெற்குப்பகுதிக்குச்சென்றோம். விஜயகுமார், மோகன் பிரசாத், ராமச்சந்திர மூர்த்தி ஆகியோர் முதல் நாள் பேசி முடிவு செய்து, இரண்டு மோட்டர் சைக்கிளில் கிளம்பினோம். நகரத்திலிருந்து 15 கி.மீ இருக்கும். முதல் நாள் இரவு மழை பெரியதாகப்பெய்து,  அருமையான பறவை நோக்கலுக்கு வழிவகுத்திருந்தது.மழை வாய்க்கால் சுவடுகள், அந்த ஈரப்பதம், நெகிழ்ந்த மேற்பரப்பு மண், உழுது விட்ட குறிஞ்சி நிலம், சாம்பல் நிற மேகங்கள் நிறைந்த வானம்என்னைகுதூகலத்தில்ஆழ்த்தியது.வானம்பாடிக்குருவிகள் (Bush Lark)மின் கம்பிகளிலும் தரையிலும் கண்டுரசிக்க முடிந்தது. ஈப்பிடிச்சான்கள்( Small Green Bee eaters) அங்குமிங்கும் பச்சை காட்டின. ஒரு குறு முயல்(Rabbit) வேகமாக வெட்டவெளியில் ஓடியது மனதைக்கவர்ந்தது. முயல் இருந்தால் குள்ளநரி இருக்கும்.
            மலை முழுக்க வேல மரங்கள். இது ஒரு முட்காடு நிறைந்த மலை. யானைகள் நடமாட்டம் சில சமயம் இருக்கும். நெட்டைக்காலி(Paddy field Pipit) ஒன்று வேலிக்கல்லில் காட்சி தந்தது. மலை அடிவாரம் என்றால் சிறு கோயில் உருவாகிவிடும். வனபத்ரி கோயில் உள்ளது. கோயிலுக்குப்போகும் வழியில் மூன்று அரச மரங்கள், ஒரு ஆழ மரம் பெரியதாய் குடைவிரித்திருந்தன. அரசமரத்தின் கிளைகளில் ஜெஸ்பல் ஒட்டுண்ணி கொடிகள் தொங்கிக்கொண்டிருந்தன.இந்தக்கொடி ஜெஸ்பல்(Jezebel) என்ற இன வண்ணத்துப்பூச்சிகளுக்கு உணவுத்தாவரம். இந்த உணவுத்தாவரத்தின் பெயரை வைத்தே அதை உணவாக உண்ணும் வண்ணத்துப்பூச்சிக்கு பெயர் வந்துள்ளது என மூர்த்தி சொன்னார். தரையிலிருந்த நன்னாரி, வேரில் வாசமிருக்கும் செடி சிறியதாக வளர்ந்திருந்ததை மோகன் காட்டினார்.
              இந்தியன் ராபின் (Indian Robin) ஜோடி ஆனந்தமாக இங்குமங்கும் பறந்து பூச்சி பிடித்துக்கொண்டிருந்தது. சிக்ரா(Shikra) வானத்தை அளந்து கொண்டிருந்தது. ஆலமரத்தடியில், யானை வருவதைத்தடுக்க கால்வாய் போல பெரிய குழி வெட்டப்பட்டிருந்தது. காட்டுக்குள் அப்படியே மண் பாதை சென்றது. மூர்த்தி கேழ்வரகு உப்புமா கொணர்ந்தை பங்கிட்டு உண்டோம். சுவை கூட்டியது நாவில்.. அதுவும் வனத்துக்குள் உண்டால் அதீத சுவையிருக்கும். வரப்பு, வனப்பாதை என நடந்து இயற்கையை அதிசயத்தோம். கரிச்சான்(Black Drongo) பல குரலில் பாடி சூலழை இனிமையில் தள்ளியது. காடைகள்(Grey partridge) மூன்று என்ன மாயமாய் போக்குக்காட்டுகின்றன். இவைகள் லென்ஸ்க்கு சிக்குவது நமது அதிஷ்டம்.
           

பச்சை வாயன்(Small Greenbilled Malkoha) மிக நாணம் கொண்ட பறவை. சின்னப்பச்சை வாயன், பெரிய பச்சை வாயன் என்று இரண்டு வகை உளது.இதில் எங்கள் கண்ணுக்கு தரிசனம் தந்தது சின்னப்பச்சை வாயன். இதன் அலகு பச்சை. கண்ணைச்சுற்றி நீல நிற தீற்று. இவை நம்மைக்கவரும். பறப்பதில் சவளை. அதனால் முட்புதருக்குப்புதர் மெலிதாகப்பறந்து ஒளிந்து கொள்கிறது. தரையில் இறங்குவது அற்பம். உண்ணுவது;  வெட்டுக்கிளி, பல்லி, சிறு விலங்கு, மான்டிஸ், புழு என்பன. கூட பெர்ரிப்பழமும். இப்பறவை ஒன்றை வேல மரங்களுக்கிடை பார்த்து ரசித்தோம். இதைப்பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன். புகைப்படப்பெட்டிக்குள் அடைப்பதற்கு, படு முயற்சி வேண்டும். 

Sunday, May 4, 2014



My book "DIARY ON THE NESTING BEHAVIOUR OF INDIAN BIRDS" available in ON LINE http://www.marymartin.com/web/selectedIndex?Entry=140646

மாடப்புறாக்கள்
Blue Rock pigeons (Columba livia)
            உலகம் முழுவதும் பரவியிருக்கும் இப்பறவைகள் விண்ணைத் தன் சிறகுகளால் வெற்றி கொண்டவை. நான் சிறு வயதில் அதாவது 5 வயதில் இருக்கும் போது, எங்கள் வீதியில் வெள்ளிங்கிரி என்பவர் இருந்தார். அவர் வீடுஅந்த வீதியின் கடைக்கோடி. அவர் புறா வளர்பார். அங்கு அடிக்கடி போய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். அம்மா சோறு ஊட்ட அடிக்கடி வந்து என்னை கட்டாயப்படுத்திக்கூட்டிச்செல்வார்.
புறாக்களுக்கு விதம்விதமாக நாமகரணம் செய்து வைத்திருந்தார். மஞ்சக்குருமா, செங்கண்ணு, லகடு, லகான், இப்படிப்பெயர். புறாக்காரர் இடையே போட்டி கூட நடக்கும். எந்தப்புறா அதிகம் நேரம் பறக்கிறதோ அதன் சொந்தக்காரருக்குப்பரிசு. ‘கொட்ரு…க்ட்ரு…ட்ரு..கொட்ரு…’ என சப்தம் வெள்ளிங்கிரி வீட்டில் வந்து கொண்டிருக்கும். அவர் சாதாரண குடும்பஸ்தர். அவர் வீட்டின் முன்பு புறாக்கழிவு, இறகுகள், அலுமினியநீர்க்குவளை இருக்கும். ஒரு பக்கம் புறாக்களை அடைக்கும் மரத்தாலான புறாக்கூண்டுகள். அதில் இரண்டு புறா அடைப்பார். குறும்புக்காரப்புறாவாக இருந்தால் ஒன்றினை அடைப்பார். இணைசேர்த்த,ஆண், பெண் புறாக்களை ஒரு கூண்டில் அடைப்பார். சோளம், ராகி உணவாக சிதறிக்கிடக்கும்.
ஆண் புறா, பெண் புறாவை விட உருவத்தில் பெரியதாக இருக்கும். பளபளவென்ற பச்சை சிவப்பு பட்டை மாலை கழுத்திலிருக்கும். இவை ஜோடி சேர்ந்தால், பிரியாது. ஜோடியாகவே இருக்கும்…தமிழர் பண்பாடு போல…  அவை சுதந்திரப்பறவைகளாக இருக்கும் போது கோவில் கோபுரங்கள், பாறை முகடுகள், பாளடைந்த கோட்டைகள், தானியக்கூடங்கள், தற்போது அடுக்குமாடிக்கட்டிடங்கள் என வியாபித்துள்ளன. புறாக்களுக்கு பறப்பது பிடிக்கும், அதைப்பார்க்க எனக்குப்பிடிக்கும். காலை வேளையில் குழுவாகப்பறக்கும் அழகையும், சூரிய கிரணங்கள் அதன்சிறகுகளில் மிளிர்வதையும் பார்க்க எனக்கு கவிதை எழுதத்தோணுகிறது.      
           நகரமாகட்டும், முட்காடாகட்டும் இவை சஞ்சலமின்றி பறப்பது நமக்கு உற்சாகமூட்டும். இவற்றைப்புகைப்படம் எடுப்பது என்பது அசாத்தியம். அதுவும் பறக்கும் நிலையில் லாட்டரி விழுந்த மாதிரி தான். சோளக்காடு அதிஷ்டவசமாக எனது நகரமும், கிராமும் அல்லாத ஊரில் கிடைக்க உற்சாகமானேன். பல நாட்கள் முயன்று வியர்வை முதுகில் வழிய, புருவத்தில் வழிந்து கண்கள் ‘மச, மச’ வென ஆக கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு  50, 100 என எடுக்க 5 படங்கள் தேறியது தான் உண்மை. வேகம்… வேகம் …வேகச்சிறகடிப்பு…. என் செய்வது? ஒவ்வொரு முறையும் மாடப்புறாக்கள் பறக்கும் காட்சியைப் பார்க்கும் தோறும் என்இதயமும் சிறகடித்து அவைபின்னே போகும், காதலி பின்னே போவது போல…………

மாடப்புறா
ஆலயம், கோயில், மசூதி உச்சி
மிச்சமின்றி நீவிர்தான்! மனிதரோ
ஏதோ வொரு மதத்தில் மீந்தவர்
காதலர் கை கோர்த்து இந்தியா ‘கேட்’ அருகில்;
நூற்றுக்கணக்கில் தரை மேய்ந்த நீவிர்,
‘பட, பட’ வென சிறகடித்து இடம் மாறி அமர
மனம் அள்ளிக்கொண்டு போனீர்!
கருஞ்சாம்பல் நிற இறகுகளும்
பசுஞ் சிகப்புத் தகடுக் கழுத்தும்
மனம் கொள்ளை கொண்டு போகுதே!
சங்க காலம் தொட்டு மனிதன் நேசித்தானுன்னை.
கோப்புகளில் மூளை சூடாயின்,
அலுவலகப் பலகணி துறுத்திய குளிர் பெட்டி
அமர் மாடப்புறாவே! நின்னைப் பார்க்க
மணிக்கொருதரம் எட்டிப் பார்ப்பேன்
மூளை குளிர்ந்து போகுமுன் தலையசைப்பில்…….

                                                            --சின்ன சாத்தன்

Wednesday, April 23, 2014

சோளக்கதிரில் ஊஞ்சலாடும் பச்சைக்கிளி
பச்சைக்கிளிகள்

கதிரவன் கிரணங்கள் தடவும் இறகுகள்

பச்சைக்கிளிகள்
            பச்சைக்கிளிகளைப்பற்றி நிறைய பாடல்கள் சங்கஇலக்கியங்களில் வருகின்றன. முக்கியமாக தினைப்புலத்தில் பச்சைக்கிளிகளை விரட்ட பரண் அமைத்து, மகளிர் கிளிகளை விரட்டுவது பற்றி செய்யுட்கள் வருகின்றன. தானியங்களை விரும்பி உண்ணும் கிளிகள் அதன் அலகு அமைப்பினால் பாதிக்கு மேல் வீணாக்குகின்றன. க்கீ….கீக்கீ… என கத்திக்கொண்டு கல்யாணத்துக்கு தாமதமானது போல துரித கதியில் பறப்பது எப்போதும் வாடிக்கை. பச்சைக்கிளி நிறம் என்றாலே தனித்து நிற்கும் நிறம். இளம் பெண்ணை பச்சைக்கிளிக்கு ஒப்பிடுவது கிளியின் அழகை சிலாகிக்கத்தான்.
            நான் நகரத்தில் வாழ்ந்தவனாதலால் தானிய விளைநிலங்களை அதிகமாகப் பார்க்க வாய்ப்பில்லாமல் போனது. அதற்கு இப்போது வாய்த்தது குறித்து நெஞ்சம் விம்மித்தணிகிறது.சூலூரின் ஊருக்குள்ளேயே ஒரு சோளக்காடு வைத்திருந்த விவசாயியை வாழ்த்தி விட்டு, புகைப்படம் எடுப்பதற்காக நாள் தவறாமல் காலை நேரம் சூர்ய கதிர்கள் வெளிச்சம் பெற்ற பிறகு செல்வேன். 1999-ல் பேராசிரியர் க. ரத்னம் எனக்கு கிடைக்கப்பெற பறவை நோக்கலில் என்னைப்புகுத்தினேன். அதிலிருந்து கிளி என்னிடம் சரியாக மாட்டவில்லை. அதாவது ஒரே ஒரு படம் சிங்காநல்லூர் குளத்தின் இரண்டாவது ஏரி மேட்டில் ரயில் தண்டவாளமருகில் கிடைத்தது. கிளி வெட்கப்பட்டு பறந்து விடும்.
            வினாயகர் கோயிலருகே கம்பி வேலிக்கருகில் இரண்டு அரளிப்பூச்செடிகள் என்னை மறைக்க, அதன் பின்புறம் நின்று கொண்டு தினமும் ஐம்பது படங்களாவது எடுத்தேன். மணி எட்டு தாண்டும் வெய்யிலில் புருவத்திலிருந்து வியர்வை கண்களில் வழிந்து கண்கள் ‘மச மச’ வென ஆகும். முதுகு சட்டை வியர்வையில் ஒட்டும். சோளக்கதிர்கள் பத்தடி உயரத்தில் நிற்க கிளிகள் வெறித்தனமாகப்பாய்ந்து வந்து விழுவதும், இறகுகள் விரித்த படி சோளக்கதிர்களைத்தேடுவதும், மையணிந்த பெண் கண்சிமிட்டுவது போல இருக்கும். அப்படி பத்து, இருபது பெண்கள் தங்கள் மையுண்டஇமைகளைத் திறந்து மூடினால் எப்படியிருக்கும், அப்படிப்பட்ட வசிகர, ரம்மியமிருந்தது.
            மயிலுக்கு அடுத்தபடி, கிளி இறகு விரிப்பு அற்புதம். க்கி…கீக்.. க்கீக்…உன்னைப்பற்றி பாடாத கவிஞர் யார்? நானும் உனக்கு ஒரு பாடல் தருவேன். கேட்பாயா? மூன்று முறை படமெடுக்கத் தவறவிட்டேன். அது சோளக்கதிரில், சின்னக்கதிராகப்பறித்துவிட்ட குதூகலத்தில் கிளி தன் அலகில் பிடித்துக்கொண்டு பறக்கும் பாருங்கள்…..அதற்கு வார்த்தைகளில்லை. சிலசமயம் மற்றொரு கிளி இதனைப்பிடுங்க துரத்தும்.
இயற்கைக்காட்சிகள் எப்போதும் பேரானந்தம். பச்சைக்கிளிகள் சோளத்தாள்களுக்கு படை எடுத்தது போல புகுந்து சோளக்கதிர்களை அலகு கொள்ளாத படி கடித்து சுவைப்பது பேரழுகு! சோளத்தட்டை கிளியின் எடை கூடத்தாங்காது சாய்வதும் மேலும் கீழுமாய்ப்போவதும் கிளிப்பச்சை சேலை உடுத்திய பெண் ஊஞ்லில் ஆடுவது போலிருந்து என்னைச்சொக்கியது.கதிர்களின் பச்சைக்கும், கிளிப்பச்சைக்கும் வித்தியாசம் தெரியாது. க்கிளிக்…..கிளிக்…'கிளி'க்காக 'கிளிக்'கிய படங்கள் இருநூறு இருக்கும். வலது கை ‘கிளிக்’கியதில் வலித்தது. ஒரு சேர சோளக் கொல்லைக்குப்பறந்து வரும், ஒரு சேர பறந்து அருகிலுள்ள வேப்ப மரத்துக்குப் பறக்கும் குழந்தைத்தனம் சுவையானது. காலைக்கதிரவன் கிரணங்கள் வருடிக்காட்டிய கிளிகளின் இறக்கை விரிப்பிலிருந்த அந்த மயக்கு பச்சை என்னை மயக்கியதை என்னென்று சொல்வேன் தோழி?

மெலிதான காடு, விளைநிலம், பழத்தோட்டம்
தேடிப்போனேன் அவளைக் காண
உயர்ந்த மரத்துளைகளில் கண்மேய
கிளிப்பச்சை சேலையடுத்தி-அதோ
தோழிகளோடு சப்தமிட்டு வந்தவளே
சிகப்பு ஆரம் கழுத்தில் காணேன்
காதலன் கழுத்திலதைக் கண்டேன்
கீக்கீஒலி உன்னிருப்பிடம் உணர்த்தியது
பறந்தாலும், அமர்ந்தாலும் கூவல்.
குஞ்சுகளைத்திருடி விற்பான் மனிதன்
எதையும் காசாக்கிடும் தந்திரம்
அழகு மாளிகையில் தங்கச்சிறை
கபட சமுதாயம் மகிழ சோதிடம்
பொம்மை பீரங்கி இயக்கி வித்தை
பசப்புக்காரன் மொழி பழகிய விந்தை
பச்சை அழகியை சிறையிடலாமா
அதற்கு சிறகேன் முளைத்தது
 வானில் பறந்து உலவத்தானே
அவை சுதந்திரக்காற்று சுவாசிக்கட்டும்
க்கீகீ..யென நெஞ்சம் வருடிப்பறக்கட்டும்.
                          சின்ன சாத்தன்- மாரிக்குருவி கவிதைத்தொகுப்பிலிருந்து...........