Tuesday, October 13, 2015

இராமநாதபுரத்தில் தம்பியோடு வசிக்கும் அம்மா குடை எடுத்துப்போகச்சொன்னாள், ஆனால் அதை அசட்டை செய்தவன் மழையில் நனைந்து காளான் விடைத்தது போல ஆனேன். சூலூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவன் நான் வசிக்கும் வீடு 15 நிமிசத்தில் போக வேண்டியது, இரண்டு மணிப்பொழுது ஆனது. அப்போது மழை கவனிப்பு என்னை மகிழ்வில் ஆழ்த்தியது.  எத்தனை பேர் மழையை வசை பாடியபடி இருந்தீர்கள்? ஓ! மக்களே! காய் கறிச்சாறு அருந்த, ஒரு கடையில் அமர்ந்தவன், சுண்டலும் உண்டவாறு பையிலிருந்த ஒரு காகித்த்தை எடுத்து கவிதை எழுத, நேரம் போனது தெரியவில்லை. பெருத்த மழை, தூரல் மழையாக மாற, சாலையில் நடந்தவாறு எழுதிய தமிழ் மழைக்கவிதையை பாடியபடி இல்லம் சேர்ந்தேன். இதோ! தமிழ் மழையில் நனையுங்கள்!

மழை நீர் வடித்தவை குழாய்களல்ல
அவை நீர் வீழ்ச்சிகள்
சாலையில் எழும்பியவை மழைத்துளிகளல்ல
அவை காதலி முத்தமிட்டுச்சிலிர்த்த மயிர்க்கால்கள்
மழை சாடியவை சவுக்கடிகளல்ல
அவை மத்தளம் வாசிக்கும் கோல்கள்
சாலையில் ஓடுயவை மழைக்கோடுகளல்ல
அவை விளையாடும் சிறார்கள்
சாலையோரம் நெழிந்தவை வெறும் நீரல்ல
அவை உயிர்ப்பிக்கும் அமுத தாரைகள்
சாலையில் புடைத்தவை மழைக்கொப்பளங்களல்ல
அவை அரிசியிட்ட பானையின் கொதிப்புகள்
சாலையில் வீழ்ந்தவை மழைக்கோடுகளல்ல





அவை விளையாடும் சிறார்கள்
மழைக்காற்றால் சிலிர்த்தவை மேனிமட்டுமல்ல
மழை கோதிவிட்ட கேசரங்களும்
அத்தோடு மழையிலாடும் இலைகளும் தாம்…….
எங்கும் அணைத்தவை குளிர் கரங்கள்
மழையை வாழ்த்தியபடி, அதை அனுபவித்த படி
ஒதுங்கிய கடையோரம் கவிதை பாடினேன் தமிழை
தேநீர் அருந்தியபடி………………………………….
நீங்களும் தமிழ் மழையில் நனையட்டுமேயென


                                                                        சின்ன சாத்தன்.

Monday, September 21, 2015

பிரிவின் துயரம்



வாலிபப்பருவத்தில் நான் வாழ்ந்த வீடு


               பனிரெண்டு செப்டம்பர் 2015-ன் மாலைப்பொழுதில் சரியாக 7.35 மணிக்கு எனது தந்தையின் உயிர் பிரிந்து எங்கோ சென்றது. அனைவரும், பேத்தி, பிதுர்களனைவரும் சூழ தேவாரம், சக்தி அகவல் பாடி, ஹர, ஹர (ஹரிஅரன்) முழங்க உடலிலிருந்து ஆன்மா வாய்வழியாகப்பிரிந்து போனது. எனது தந்தை ஒரு நல்ல மனிதர். கர்ம யோகி. ஒழுக்கமுள்ள நெறியாளர். எப்போதும் வேட்டி, ஆபாரம் எனும் முழுக்கை சட்டை அணிவார். வெற்றிலை பாக்கு கூடப்போடாதவர். காலத்தே காரியமாற்றுவார். பங்கஜா மில்லில் அட்டெண்டராகச்சேர்ந்து டைம் கீப்பர் ஆனவர். எந்தத் தொழிலையும் உன்னிப்பாக கவனித்து செம்மையாக முடிப்பார். மில்லில் ESI, PF, காசியர், மில்லின் கல்யாண மண்டபம் மற்றும் குடியிருப்பு பொறுப்பாளர் என சகல வேலையும் ஏற்றுச்செய்த கடின உழைப்பாளர்.
            
              மில் பல வருஷம் ஓடாத போது விவசாயம், அதற்கு முன்பு சகோதரர்களோடு ஹோட்டல் வைத்து நடத்தியவர். ஓய்வு பெற்றபின்பு கூட பிளாஸ்டிக் தொழில்,கட்டிடகட்டுமானம், பார்சல் சர்விஸ், எண்பது வயதுக்குப்பின்பு கூட ஒரு ரூபாய் காய்ன் இரண்டு பூத் என அயராது பணி செய்தும் அவரைச் செல்வம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பெரிய குடும்ப பாரத்தைச்சுமந்து அதில் காசு, பணம் செலவழிந்து போனது. தனக்கெனவும், தன் குடும்பத்துக்கு எனவும் சேமிக்க முடியவில்லை. யாவருக்கும் கொடுத்து சந்தோஷப்படுத்திப்பார்ப்பவர். அவர் எனது தம்பியோடு வசித்தார். நான் 15 கிமீ கிழக்கில் இருந்ததால் சொந்த ஊரைவிட்டு அவர் வர விருப்பப்படவில்லை.
             
            அவர்கடைசி காலங்களில் தினமும் சூலூரிலிருந்து நான் ராமநாதபுரம், சென்று அவர் நலன்களை கவனித்து வருவேன். மாத்திரைகளும், மாதமானால் ஒரு தொகையும் தந்து அவரை நல்ல முறையில் பார்த்துக் கொள்வேன். கோயம்புத்தூர் பங்கஜா மில்லின் மைதானத்துக்குள் மாலை நேரம் உலாவப்போய்விடுவேன். அதற்குத் தென்புறம் லைன் வீடுகளாக குசவன் ஓட்டில் வேய்த குவார்ட்டர்ஸ் வீடுகள் இருபது இருக்கும். அதில் இரண்டாவது லைனில் கடைசிக்கு முந்திய வீட்டிலும், அதே லைனில் முதல் வீட்டுக்கு இரண்டாவது வீட்டிலும் மாறி,மாறி எனது வாலிபப்பருவத்தில் தந்தையோடு இருந்தேன். இப்போது மில் நஷ்டத்தில் இயங்கியதால் பராமரிப்பு இல்லாமல் சிதலமாகி கிடக்கிறது.

           மைதானத்தில் உலாவும் போது கவுதாரி, மைனா, காகம், வாலாட்டிக்குருவி, கருப்பு, பிரவுன், பிரவுன்வெள்ளைக்குதிரை மூன்றினைப்பார்ப்பேன். மேற்குப்புறத்தில் மாடுகள் கட்டியிருப்பர். அந்தி சாயும் பொழுது கரி பூசிக்கொள்ளும் வானத்தில் பழம் திண்ணி வெளவால்கள் சாய்ந்த கோட்டில் பறந்து வரும் அழகையும், ஆதவனின் அன்றைய நாளின் கடைசி நிமிடங்கள் போடும் வண்ண ஜாலங்களையும், ஒற்றையாக நிற்கும் தென்னை மரத்தின் கரிய நிழலையும் பார்த்து ரசிப்பேன்.                         …………தொடரும்

Thursday, August 13, 2015

தொங்கநாதன்…..3





             அதிகாலையில் எழுந்ததும் அலைபேசியைப்பார்த்தபோது மணி 05.30. செலக்கரிச்சல் பழனிக்கவுண்டர் சொல்வது போல மொகுல் (கருப்பு மேகம்) வானத்தை அடைத்திருந்தது. சில சமயம் மழைத்தூறல் போட்டது. தெருக்கடையில், காய்கறி ரசம் சூடாக அருந்தி விட்டு ஸ்கூட்டரில் பறந்தேன். செலக்கரிச்சல் இதோ பார் எனத்தெரிய, நிறைய கருப்புக்கிரீட வானம்பாடிக்குருவிகள் உயரே சிறிது தாழ்ந்தும் எழுந்தும் பறந்ததை வைத்தே கண்டுபிடித்து ஆனந்தப்பட்டேன். குளிரில் நெருக்கியடித்து, காதல் ஜோடி போல கொண்டைக்கருவிகள் மின் கம்பியில் அமர்ந்திருந்தைப்பார்த்து பொறாமையாக இருந்தது.பழனிக்கவுண்டருக்கு 86 வயது.மனைவியை இழந்தவர். அவர் ஓட்டு வீட்டின் முன்பு நின்று கைவைத்த பனியன், வேட்டியில் இருந்தவரை வண்டியில் ஏற்றிக்கொண்டு, புளிய மரத்துப்பாளையம் பாதையில் போனேன். சோளத்தட்டுகள் அறுக்கப்பட்டு கூம்புகள் போட்டு விட்டனர். கிணற்றில் எட்டிப்பார்த்தால், பத்து கூடுகளும் தொங்கநாதன் சுவடே இல்லாமல் காற்றில் தொங்கிக்கொண்டிருந்தன. புள்ளிஆந்தை மட்டும் கிணற்று பொந்துக்குள் இருந்து உற்றுப்பார்த்தது. மயில் கூட்டைத்தேடி ஒற்றையடிப்பாதையில் வண்டியை உருட்டினேன். ஒரே ஒரு வெள்ளை முட்டை புதருக்குள் பத்து நாட்களாக இருப்பது வியப்பாக இருந்தது. ஏன்? பிற்பாடு 7 (அ) 8 முட்டைகள் வைக்கவில்லை!. ஏமாற்றமாய்திரும்பி சுல்தான் பேட்டை பாதையில் சறுக்கிப்போனேன். அங்கும் ஏமாற்றம். தொங்கநாதன்கள் தென்மேற்குப்பருவ மழைப்பருவ காலத்தில் இனப்பெருக்கம் செய்தால் அதற்கு சோளமும், நிறைய பூச்சிகளும் கிடைக்கும் என்பது அவற்றிற்கு தெரிகிறது.  ஆனால் இந்த மாநிடனுக்கு தெரிவதில்லை. அவன் அறிவிளியாய் இருப்பது எனக்கு வெறுப்பைத்தருகிறது. ‘சும்மா இருந்தவன் பெண்டாட்டி தலையைச்செரைத்தான்’ என்ற பழமொழிக்கு ஏற்ப அந்த தோப்புக்காரன் கிணற்றுக்குள் சீனிப்புளி மரச்சிமிறுகளில் தொங்கிக்கொண்டிருந்த தூக்கணாங்குருவிக்கூடுகளை அறுத்து யாவற்றையும் கிணற்று மேட்டில் போட்டிருந்தான். அவைகளில் குஞ்சுகள் இருந்தனவா? இனப்பெருக்கம் முடிந்து விட்டதா? என அந்த மடையனுக்குத்தெரிந்திருந்ததா? அந்தக்கூடுகளால் ஒரு பாதமும் அவனுக்கு இல்லை. அப்படியிருக்க அதையேன் செய்தான்? ஓ! மனிதா! அப்படியே விட்டிருந்தால், அதில் சிட்டுக்குருவிகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். வெண்கழுத்து தினைக்குருவிகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். அவை இரவில் தங்கும். இவன் ஏன் இப்படி உயிரினத்துக்கு பாதகம் செய்து திரிகிறான். பூமி இவனுக்கு மட்டுமே சொந்தம் என நினைத்துக்கொண்டிருக்கிறானா? இந்த மாதிரி பாதகர்களை எப்படித்திருத்துவது? அங்கு உலவி வந்த சிட்டுக்குருவி, வெண்கழுத்து தினைக்குருவி, கருந்தலை தினைக்குருவி, சிலம்பன், புதர் சிட்டு, மைனா, பஞ்சுருட்டான் என்பன அன்று இல்லை. அந்த சுவர்க்கம் அந்த தோப்புக்காரனால் நரகமாக்கப்பட்டிருந்தது. இருந்த ஒன்றிரண்டு சிட்டுக்குருவிகள் பாவமாக மின் ஒயரில் அமர்ந்து இருந்தன. என் செய்வேன் கடவுளே!

Tuesday, July 28, 2015


தொங்கநாதன்……..2

காய்ந்த குளத்து கருவேல மரத்தில் தொங்கும் ஒற்றைக்கூடு


                தொங்கநாதன் எனும் தூக்கணாங்குருவி கருவேல மரம் அடர்ந்த காய்ந்து போன குளத்தில் உள்ள நான்கு மரங்களில் தொங்கநாதன் கூடு தொங்க விட்டுருந்தது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் அதுவும் முழுமையடையாமல் இருந்தன. பத்தடி உயரத்தில் மரத்துக்கு ஒன்றாகத்தொங்கின.இது எனக்கு பேராச்சர்யமாக இருந்தது. இது வரை நான் கண்டது கூடுகள் நீரோடும் ஆற்றுக்கு மேல் அல்லது கிணற்றுக்கு நடுவில் தொங்கிக்கொண்டிருக்கும். வேம்பு, அத்தி, சீனிப்புளி போன்ற கரையிலுள்ள மரங்களில் இருந்து யாரும் தொடமுடியாத நிலையில் நீருக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும். வரண்ட குளத்தில் கருவேலமரத்தில் ஒற்றை அரைகுறை கூடுகளைப்பார்த்த போது இது புது கண்டுபிடிப்பு தாம் என எனக்குள் சொல்லிக்கொண்டேன். இது வரை பதிவாகாத செய்தி. ஒருவேளை கிணற்றின் நடுவில் கட்டுவதற்கு முன் இந்த மாதிரி இடத்தில் கட்டிப்பழகுவதாகக்கூட இருக்கலாம். வெண்தொண்டை தினைக்குருவி தொங்கநாதன் குஞ்சு பொரித்து விட்ட கூடுகளை தன் இனப்பெருக்கத்துக்கு உபயோகிப்பது பற்றி டாக்டர் சலீம் அலி பதிவு செய்திருக்கிறார். அத்தோடு எனது Diary on the nesting behavior of Indian Birds நூலில் சிட்டுக்குருவியும் இந்த தினைக்குருவி போல எல்லாம் முடிந்து போன வெற்றுக்கூட்டை தன் இனப்பெருக்கத்துக்கு பயன் படுத்துவதை பதிவு செய்துள்ளோம். இப்போது மேலும் ஒரு செய்தி என்னவெனில், வெண்தொண்டை தினைக்குருவி முட்டைகளுக்கு மெத்தை வைக்க உதிர்ந்த இறகை தனது வாயில் கவ்விச்சென்றதை கண்ணுற்றேன். தினைக்குருவிகள் மற்றும் சிட்டுக்குருவிகள் கூட்டை கைப்பற்ற வரும் போது தொங்கநாதன் அவைகளைத்துரத்தி அடிக்கின்றன. அணில் கூடுகளுக்குப்பக்கம் சுற்றுவது முட்டை, குஞ்சுகளை கைப்பற்றத்தான் என்பது தெளிவு. தொங்கநாதன் தானியங்களையும், பூச்சிகளையும் தன் குஞ்சுகளுக்கு ஊட்டுவது அதன் அலகில் சிக்குண்டு இருப்பதை வைத்து பதிவு செய்ய முடிகிறது. தினைக்கருவிகள் பல கூட்டில் குடியேறுவதற்கு முன்பு அதை சுற்றி பார்வையிடுகின்றன. ஒன்றிரண்டு கூடுகள் இரட்டையாக பின்னப்பட்டு ஒன்றிலிருந்து இன்னொன்று தொங்குகிறது.சாதாரணமாக ஒன்னரையடியாக இருந்தால் இந்தக்கூடு மூன்றடியாக உள்ளது. அருகிலிருக்கும் தென்னை மரத்தின் ஓலை, சோளத்தட்டின் ஓலை என இவற்றை அலகில் பூக்கட்டக்கிழிக்கும் நாறு போல கிழித்து அலகில் கூட்டைப்பின்னலிட்டு நெய்வது கண்கொள்ளாத காட்சி.கூட்டின் அருகில் கருந்தலை தினைக்குருவிகளைக்கண்டேன். சிட்டுக்குருவி. மைனா கிணற்றுக்குள் போய், வந்து கொண்டிருக்கிறது. அது கிணற்றுச்சுவர் பிளவுகளில் முட்டை வைக்கும். அது கண்ணில் பட வில்லை. அமைதியான கிராமத்து 86 வயது பழனிக்கவுண்டர் மனைவியை இழந்தவர், எனக்காக கூட்டை நான்கு கிணறுகளில் கண்டு பிடித்துக்கொடுத்தது என்னை நெகிழ வைத்தது. பழைய துறுப்பிடித்த சைக்கிளில் காற்றுடன் போராடி பெடலை அமுக்கி தெற்கும் வடக்கும் அலைந்து கண்டு பிடித்துக்கொடுத்தது என்னை வியப்புக்குள் தள்ளியது. ……………..தொடரும்.


Sunday, July 19, 2015


தொங்கநாதன்


தொங்கநாதன்

தொங்கநாதன் எனில் தூக்கணாங்குருவி என வட்டாரத்தமிழ் சொல்கிறது. இதன் வாழ்க்கை  மர்மங்கள் பல கொண்ட சினிமாப்படம் போல இருக்கும். அதைப்படித்து அனுபவித்தால் இதன் அருமை தெரியும். மக்கள் தான் வாசிப்பு பழக்கத்தை ஒழித்துக்கட்டியாயிற்றே! 86 வயது பழனிக்கவுண்டர் ஒரு அமைதியான கிராமத்தில் மனைவி இறந்தும் உள் சோகம் தெரியாமல் எனக்காக ஐந்து கூடுகளைக்கண்டு பிடித்தார். கிணறுகளின் மேலே தொங்கிக்கொண்டிருக்கும் பத்துக்கூடுகள். இந்த 86 வயது இளைஞர் அதரப்பழைய சைக்கிளில் கடக்முடக் கென பெடலை அமுக்கி கண்டு பிடித்துச்சொல்ல நான் மகிழ்ந்து போனேன். வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை ஸ்கூட்டரில் பறந்தேன். கிணற்று மேட்டில் என் தவத்தை ஆரம்பித்தேன். பாம்பேறி என்ற பெயர் கொண்ட கிணற்று மேட்டில் பாம்பு வரலாம். இருப்பினும் புதராய் முளைத்த வேம்பு சிமிறுகளுக்குப்பின் ஒளிந்து கொண்டும், அமர்ந்தும், தென்னை மரத்தின் மீது சாய்ந்து கொண்டும் மற்றொரு கிணற்றில் கால் கடுக்க நின்றும், தொங்கநாதன்கள் வருவார்களா என காத்திருந்த கணங்களில் வீடு, மற்றும் நண்பர்கள் நினைவு ஏன் வரவில்லை ? இது யோகத்தில் தாரணா என்பதை ஒரு வகை தியானம் எனலாம். தொங்கநாதனை ஒப்பிடும் போது நமக்கு ஆபத்து குறைவு தான். வேலி ஓணான், பாம்பு, பருந்து, அணில், மைனா என முட்டை, குஞ்சுகளை சுவைத்து பசியாற்றிடக்காத்திருக்கும் உயிரிகளைக் காணமுடிந்தது. என்ன விறுவிறுப்பான தொங்கநாதன் வாழ்க்கை! கழுத்தில் தொலைநோக்கி, காமிரா என மாலைகள். மாற்றி, மாற்றி பார்த்து, காத்திருப்பு முடிவற்றது. தொங்கநாதர்ளே! என்னைப்பார்த்து பயம் ஏன்? நான் உங்கள் நண்பனல்லவா! உங்கள் வாழ்க்கை வரலாறு எழுதும் ஏழை எழுத்தாளன். நாதர்களைச்சுற்றி மைனா, வேலிஓணான், அணில், வெண்தொண்டை தினைக்குருவி, கருப்புத்தலை தினைக்குருவி, தேனிபிடிச்சான், சிட்டுக்குருவி என இருந்தன. இதனை நெசவாளிக்குருவி என அழைக்கலாம் என நினைக்கிறேன். மூக்கு ஊசி போல இருந்து தன் கூட்டை நெய்கிறது. கரும்புத்தோகை, நெல் தோகை, சோளத்தோகை, தென்னை ஓலைகளை வெகு சன்னமாக அலகால் இரண்டு அடி கிழித்து வந்து தன் வீட்டை நெய்கிறது. அதற்காக மேற்ச்சொன்ன விளைச்சல் பூமிகளுக்கருகில் உள்ள கிணறுகளில் கூடுகட்டுகிறது.கிணறு ஓரம் வளர்ந்து, கிணற்றுக்குள் சிமிறுகள் தொங்கும் வேம்பு, அத்தி, சீனிப்புளி என்ற மரங்களில் தொங்கும் வீடுகள். வசந்த மாளிகைகளைப்பார்க்க  புலர்ந்தும் புலராத காலைப்பொழுது ஸ்கூட்டர் பறக்கும். பிறகு கிணற்று மேட்டில் தவம். காற்றில் ஆடும் மாளிகைகள். இறைவனை நினைக்க எனக்கு வியப்பு கடல் அளவை விட விரிந்து போகும் தோழி!..........தொடரும்

Tuesday, June 30, 2015


மரம் எனது உயிர்


86 year old Sri Palanisami in action. He planting a Mango sapling in front of their village Library

S/Sri Palanisami( 86 age) and Velusami,(81 age) Selakarachal villager, 


மரம் எனது உயிர்
இதை கலங்கல் கிளை நூலகத்திறப்பு விழாவின் போது மேடையில் சொன்னவர் 81 வயது மனதளவில் இளைஞர் திரு. வேலுசாமி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் செலங்கரிசல் எனும் கிராமத்தைச்சார்ந்தவர். காற்று பொச, பொச என வீசும் நீர் தட்டுப்பாடு உள்ள கிராமத்தில் ஆயிரம் மரம் வளர்த்த ஆபூர்வர். இவரது விவசாய நிலம் கைகொடுக்காதது போல, இங்கிருக்கும் பெரும்பாலான விவசாயிகள் அதே நிலைமையில் உளர். விவசாய மேட்டுக்காடுகளை காற்றாலைக்கு விற்றும், வாடகைக்கும் தந்து விட்டனர் பல விவசாயிகள். மர வேலுசாமி உண்மையில் மரம் தான். மரம் போல பலனை எதிர் பார்க்காமல் மரங்களை நட்டு வளர்க்கிறார். தனது சொந்தக்காசை செலவு செய்து மரங்களைப் பேணுகிறார்.
இது மாதிரி ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியரைப்பார்ப்பது அரிது. தனது இரண்டு மாத ஓய்வூதியப்பணம் ரூ. 40.000-த்தை வேலியிட்டு, மரநாற்றுகள்  கோயிலைச்சுற்றி, வைத்துள்ளார். நூலகத்தைச்சுற்றி, ஊராட்சியைச்சுற்றி மரங்கள் வைத்து வளர்த்து சோலைக்குள்அவை இயங்குவது போல குழுகுழு வென உள்ளது. மக்கள் மூடர்களாக உள்ளனர். ஆடு வளர்க்க மரக்கிளைகளை ஒடிக்கின்றனர். இவரது நண்பர் திரு, பழனிசாமி, 86 வயது பிராயத்தவர் இவருக்கு உறுதுணையாக உள்ளது, பக்கபலம். இரவுப்பொழுது கூட ஆடு வளர்க்கும் மூடர்கள் மரச்சிமிறு முறிப்பவர்களை நான் எப்படித்தடுப்பது என்கிறார்கள், இந்த பசுமைப்போராளிகள். புங்கன், நாவல், வேம்பு, மலையரசு, மரமல்லி, அரசு, அத்தி, மா என வகை, வகையாக வைத்து வளர்த்துள்ளனர்.
நான் கல்யாணமுருங்கை வேண்டுமென கேட்க, தார் சாலையோரமிருந்த ஒரேஒரு மரத்தில் அரிவாள் கொண்டு வந்து மூன்று கோல்கள் முள்ளுடன் வெட்டிக்கொடுத்த, இந்த இளைஞர்கள் வயதில் தான் முதியவர், ஆனால் செயல்களில் இளமை ததும்புகறது. கோயில், பள்ளி, அரசு அலுவலகம், பாதையோரம், புறம்போக்கு நிலம் என மரநாற்றுகள் நடப்பட்டு, அவைகளை வளர்த்து பசுமைப்போர்வையால் செலக்கரிசல் கிராமத்தைப்போர்த்தியுள்ளனர். பல வருடங்குளுக்கு முன்பு இவரது கிராம வீட்டுக்குச்சென்று என்னை அறிமுகப்படுத்திவிட்டு, என்னால் முடிந்த ரூ. 500 கொடுத்து அவரை மனசாற வாழ்த்தினேன். இவரை இளைஞர்கள் முன் உதாரண புருசராக ஏற்று, ஒவ்வொரு கிராமத்திலும் மர வேலுசாமி உருவெடுக்க வேண்டும்.
 உங்களுக்குள் உயிர் மூச்சாக சுழலுவது மரங்கள் சுத்திகரித்த காற்று. பிறகேன் மரங்களை உதாசினப்படுத்துகிறீர்கள்? நமது வாழ்வு ஆதாரமே மரங்கள் தாம். அவைகளை அழித்து விட்டு இன்னொரு சோமாலியா போல இந்தியாவை ஆக்குதல் தகுமா? தற்போது, எங்களின் நமது சுற்றுச்சூழலைக்காப்போம் ( protect Our Environment Trust) POET-என்ற இயக்கத்தின் மூலம் மரநாற்றுகளை மூட்டையிலிட்டு, கோவை கணபதியிலிருந்து செலக்கரிசல் கிராமத்துக்கு, 35 கி.மீ ஸ்கூட்டரில் பிரயாணித்து, ஆர்வப்பட்டு வளர்த்த முன்வரும் விவசாயிகள், மற்றும் மாணவிகள், குடிமக்கள் என இலவசமாக வினியோகிக்கிறோம். சில மரநாற்றுகளை நடவும் செய்தோம். இளைஞர்களே!  ஒரு பத்து விழுக்காடு மரத்தை நேசித்து, உங்கள் ஊரை, உங்கள் கிராமத்தை பச்சைக்கம்பளம் போர்த்துங்கள். காய்ந்து போன நதிகள் மீண்டும் உயிர்தெழும் தோழர்களே! நம்பிக்கையோடு செயல் படுங்கள். நீருக்காக, கேரளத்தையும், கர்நாடகத்தையும் கையேந்தி நிற்கும் அவலத்தை ஒழிப்போம். மரங்களை வளர்த்து மழை வருவிப்போம். சுபிட்சம் எங்கும் பரவி ஓடும் தோழா! நம் சுபிட்சத்தை மரம் பார்த்துக்கொள்ளும்.
ஓ! மரமே! எனதுஉள்மூச்சு உனது வெளிமூச்சு
எனது வெளிமூச்சு உனது உள்மூச்சு


Sunday, June 14, 2015

Oorvelan kuttai

Kalangal
ஊர்வேலன் குட்டை
            ஊர்வேலன் குட்டை நிறைந்து ஐந்து வருஷங்களிருக்கும். சனிக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு பெய்த மழை 91 mm என்று நண்பர் சொல்ல நான் பிரம்மித்துப்போனேன். அன்று இடி மின்னலுடன் பலத்த மழை. ஐந்து வருஷத்துக்கு ஒரு முறை மழை செம்மத்தியாக தட்டுகிறது. இடையில் அப்படி மழை பெய்வதில்லை என்று பறவை குருநாதர்(வயது 80), பக்கத்துக்காலனி பெரியவர் (வயது 80) இருவருமே தங்கள் அனுபவத்தில் சொல்கின்றனர். ஒரு இரவில் கொட்டிய மழை குட்டையை நிரப்பி விட்டது. ஞாயிறு அன்று பார்த்த போது சேறுடன் கலங்கிய நீர் நின்று கொண்டிருந்தது. வியாழன் அன்று பார்த்த போது தெளிந்திருந்தது.
கலங்கிய நீருக்கும், குட்டை நிறையத்தண்ணீர் இருந்தாலும் பறவைகள் வராது. கலங்கிய புது நீரில் ஜீவராசிகள் உற்பத்தி ஆகாதது பறவைக்குத்தெரியும். மேலும் விளிம்பு அளவு இருக்கும் நீரில் வேடர்(Waders) பறவைகள் நின்று மீன் அல்லது மற்றஜுவராசிகளை கொத்திப்பிடிக்க முடியாது. இன்னொரு மழை பெய்திருந்தால் கடைவிழுந்து நிரம்பிப்போயிருக்கும். முக்குளிப்பான் ஜோடிக்கு புதிய மழைச்செந்நீர் கூட ஆனந்தம். அமைதிப்பிரதேசத்தில் முக்குளிப்பான்கள்‘குலவை’யிட்டுப்போனது மனதை இதமாக்கியது. குட்டையை மனித ஜன்மங்கள் எப்படியெல்லாம் நாசம் செய்கின்றனர். ஊர்க்குப்பை, பவுண்டரிக்கழிவு, வீடு உடைப்புகள் என சொல்லி மாளாது. குழாயில் நீர் கொண்டு வந்து கொடுக்க, மக்கள் குளம் குட்டைகளை உதாசினப்படுத்துகின்றனர்.
காலை, மாலை சூர்ய உதயம், அஸ்தமனம் பார்த்து ரசிக்கத்தெரியா ஜன்மங்கள். அவர்களுடைய குறிக்கோள், குளம் குட்டை மேல் கட்டிடம் கட்டி காசு சம்பாதிக்க வேண்டும் என்பது தாம். எங்கிருந்தோ ஒரு கொக்கு பறந்து வந்து இறக்கையை மடக்கியவாறு அமர இடம் பார்க்க, ஒரு நீர்க்காகம், பெண் ஒரே ஒரு கட்டிய சேலையை உலர்த்துவது போல உலர்த்த, கால் பகுதி மூழ்கிய கருவேலமரங்கள் நீரில் அசைய, மாக்களே! இதை ரசிக்க நேரமேது? அந்தக்காலங்களில் ஜனத்தொகை குறைவு. மலம் கழிக்க ஊர் எல்லையில் ஒதுங்க வேலமரங்களை வைத்தனர். நீர் இல்லாமலே வரட்சியைத்தாங்கி வளரக்கூடியவை. அவைளை வெட்டி தண்ணீர் காயவைத்து ஊற்றியாயிற்று. இப்போது தில்லி முட்கள் எனும் வேலி காத்தான்கள்.

ஊர் வேலன் குட்டைக்கு மழை பெய்தால் காட்டு நீர் தான் ஆதாரம். புங்கன் குட்டை என்ற இன்னொரு குட்டை கலங்கல் பாதைக்கு கிழக்குப்புறமாக உள்ளது. இதற்கும் காட்டு நீர் தான் ஆதாரம். ஆனால் தறிகெட்ட மக்கள், இதையெல்லாம் அசட்டை செய்து, பஞ்சாயித்தும் காசு வாங்கிக்கொண்டு, வசதிகள் செய்து தர வீடுகள் உருவாக காட்டில் மழைநீர் வடிந்து இந்த இரண்டு குட்டைகளுக்கும் நீர் வந்து நிரம்ப வாய்ப்பில்லாமல் போனது. இனி வருங்காலத்தில் இந்த இனிய இயற்கை காட்சி தரும் குட்டைகள் இல்லாமல் போகும். சாமானியன் யான் ஏதும் செய்ய முடியாது போகும்.