Thursday, February 27, 2014

நிழற்படக்கவிதை
                                            அந்தி

                                                                                             சின்ன சாத்தன்

இரவில் போஜனம் தேடும் ஜீவன்களே
வெளியில் வருக! இருள் கவிந்தாயிற்று
அந்தி வானச்சிகப்பு உவமைக் கவிஞர்ளே!
போர்க்கள குருதிக் குளத்து சிகப்பிது
நாணிய மங்கை கன்னக் குங்குமமிது
இறைவன் பிரதி மாலை மயக்கும் ஓவியன்
மாற்றி மாற்றி வண்ணம் தீட்டுவான்
நேற்று மாலை போல இன்றில்லை
இன்று மாலை போல நாளையிருக்காது
அனு மாலையும் புத்தம் புது ஓவியம்
மணப்பெண் கன்னி கழிய காத்திருந்த மாலை
பகலவன் காய்ச்சிய சூடு தணியும் பூமி
பறவைகள் ஓய்வெடுக்கப் பறந்த திசைகள்
கங்குல் மெதுவாய்க் கவிழ மறைந்தன
விளக்குகள், நட்சத்திரங்கள், நிலவு
தொடங்கும் ஆட்சி ,உதயமாகும் வரை……..

Sunday, February 23, 2014

Migrant watch
Common Tern (Sterna hirundo)

ஆலா

Common Terns from Ladak visited Sulur Lake today (23.02.2014)


                வலசை புதிரானது. அதிகாலை எழுந்து மதில் எட்டிக்குதித்து சூலூர் குளத்தை தெற்குப்புறமாக அணுகினேன். பார்த்த பறவைகளே என்னை வலம் வந்தன. திடீரென மேற்குப்புறம் ஆலாக்கள், ஒரு குழு பறந்து கிழக்கு நோக்கிப் பறந்து வந்தன. இவை எந்த வகை ஆலாக்கள்! கருப்பு வயிற்று ஆலாவா! ஆற்று ஆலாவா! மீசை ஆலாவா! சாதா ஆலாவாக இருந்தால் எனக்கு அதிஷ்டம் அடித்தது. சாதா ஆலா லடாக்கிலிருந்து வருவன. அம்மாடி தொலை தூரம்! முதல் முறை இவற்றின் அலம்பலில் என்னால் புகைப்படம் எடுக்க முடியவில்லை. தடதடவென வரிசையாக மின் கம்பியில் அமர்ந்தன. சில பறந்தவாறு அருகில் வந்தன. தவறி விட்டேன். பறந்து வடகிழக்கு பறந்தன.
ஆலாக்களை புகைப்படம் எடுப்பது மிகக்கடினம். குளத்து விளிம்பில் நடந்தேன். ஆதவன் எழ, குளப்பரப்பு வெள்ளி நிறமானது. பறவை நோக்கலும், புகைப்படம் எடுத்தலும் பொறுமையை நிறைய கற்றுக்கொடுக்கும். அரை மணிக்காத்திருத்தலுக்குப்பிறகு மீண்டும் அதிஷ்டமடித்தது. ஆலாக்கள் அலம்பல் மிக அழகானது. பறக்கும் அழகிருக்கே இன்றைக்கெல்லாம் பார்த்து பரவசப்படுவேன். இவை பல நிமிஷங்களுக்கு மரக்கிளையில் அல்லது கம்பியில் அமர்ந்திருக்க முடியாது. ஏனெனில் குட்டையான கால் மேலும் வலுவற்றது. சும்மாங்காட்டியும் விளையாட்டாக மின்கம்பியில் அமர்ந்து எழுகின்றன.
இவை லடாக்கிலிருந்து வந்த சாதா ஆலாக்களே தான். வால் பிளவு பட்டுள்ளது. சிறகுகள் வாலை விட நீண்டுள்ளன. அலகு கருப்பு, உடல் மேற்புறம் சாம்பல் நிறம். முன் நெற்றி வெள்ளை பிறகு கருப்பு தீற்றல். ஆஹா! சந்தோஷம் கொண்டேன். லடாக்கிலிருந்து இம்மாம் தூரம் எப்படி கண்ணுகளா வந்தீங்க? நீர் சூழ்ந்த திட்டில் கூடு வைக்கும் அழகு ஆலாக்களே! தரையில் இறங்கி, என்னருகில் வாருங்கள்! தங்கள் வரவு நல்வரவு ஆகுக, என கைகுலுக்க வேண்டும். Come on my beloved Common Terns!  

            

Sunday, February 16, 2014


இருந் தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந் தமிழ்தம் என்றாலும் வேண்டேன்
            இலக்கியமும் பறவையும்



கணவன் பிறிவாற்றாமையில் வருந்தும் தலைவி

குஞ்சுகளுக்கு இரையூட்ட ஏகும் பறவை (Black winged Stilt)

சூரியன் எழுந்து வானம் பரவி, ஒளி வீசுகிறான். பறவை நாளெல்லாம் தேடி, இரை பிடித்து தன் குஞ்சுகளுக்கு ஊட்ட மாலைப்பொழுதில் விரைகிறது நீ பாராய்! ஆயின் உன் கணவன் பொருள் தேடி வேற்று நாடு சென்றவன் இன்னும் உன்னை வந்து அணையவில்லையே தோழி!
            தமிழ் செரிவான மொழி.இதோ மேற்ச் சொன்ன பிரிவாற்றாமையைச் சொல்லும் இந்த குறுந்தொகைப்பாடலைப்படியுங்கள்.

ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இறையுற ஓங்கிய நெறிஅயல் மராஅத்த
பிள்ளை உள்வாய்ச் செரீஇய
இரை கொண்டமையின் விரையுமால் செலவே  (குறுந்தொகை(92))

ஓவியக்கலைஞருக்கும், புகைப்படக்கலைஞர் நண்பர் அருந்தவச்செலவனுக்கும் நன்றி.


Sunday, February 2, 2014

வெண்தலைச்சிலம்பன்
White headed Babbler
(Turdoides affinis)
 தைமாதக்குளிர் பனியில் உறைந்து போன நிழற்ப்படம்

எனது இல்ல மதில் சுவர் மேல் 

மனிதருக்கு வாழும் கலை சொல்லித்தர வேண்டியது உள்ளது.
ஆனால் பறவைகளுக்குத்
தேவையில்லை.



                              நான் உங்களுக்கு கொடுப்பதெல்லாம் புதுத்தகவல்களாக சுவராஸ்யமாக இருக்கும். சொன்னதையே சொல்வது எனக்கு கூட அழுப்புத்தட்டும். Babbler- என்ற ஆங்கிலவார்த்தைக்குப்பொருள் ஒன்றுபட்ட பலகுரல்கள். வெண் தலை சிலம்பன்கள் ஆறு-ஏழு என குழவாகச்சுற்றுவது, வசிப்பது எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருக்கும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற தாத்பர்யம் கடைப்பிடிக்கின்றன. இடையூறு தரும் பறவையாகட்டும், பூனையாகட்டும் ஒன்று பட க்ளிங், க்ளிங் என ஒரு சேரக்கத்தி அத்துடன் இறக்கையை விரித்துக்காட்டி, மூடி பயமுறுத்தி விரட்டும். சாதாரணமான மைனா, காகம், செண்பகம், கொண்டலாத்தி என்பன போன்றவற்றிற்கு பயப்படாதவை. 
           இவற்றில் ஆண் எது, பெண் எது எனக்கண்டு பிடிக்க தலை முடியைப்பிய்த்துக்கொள்ள வேண்டும். அவற்றின் குணாதிசயத்தை வைத்தும் கண்டு பிடிக்க முடியாது. எல்லாம் ஒன்று போலவே இருக்கும். கூட்டிலிருக்கும் குஞ்சுகளுக்கு எல்லா சிலம்பன்களும் உணவூட்டும். எல்லாமும் காவல் காக்கும். அடை காக்கும். குஞ்சுக்குத்தான் எத்தனை அம்மாக்கள் எத்தனை அப்பாக்கள். யாரோடு யார் ஜோடி என்றும் தெரியாது. ஏழு சகோதரிகள் ஆனால் அதில் சகோதரர்களும் இருக்கிறார்கள். அதில் யார் யார் கணவன் மனைவி என்பதும் தெரியாது. வாஸ்தவத்தில் அதற்குள் ஜோடிகள் மாற்றிக்கொள்ளும் எனத் தோன்றுகிறது. குழுவுக்குள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சாயக்குறியிட்டு அவற்றோடே பல நாட்கள் சிறகடித்தால் தெரிய வரும். 
                             ஒரு சமயத்தில் மூன்று நீலநிற முட்டை மட்டும் வைக்கும்(பழைய காலத்தில் 4). இரு ஜோடி வைத்தால்  ஆறு இருக்கலாம். ஆனால் நான் பார்த்தது மூன்று தான்.ஏழு சிலம்பன் எனில் அவற்றில் மூன்றாவது பெண்ணாக இருந்து, ஒன்பது முட்டை வைக்கலாமே!அப்படியில்லை. அதனால் இந்தக்குழுவின் மர்மம் இன்னும் அவிழ்க்கப்படவில்லை. இந்தக்குழு மர்மம் பெரிய சாம்பல் சிலம்பன்(Large Grey Babbler), காட்டுச்சிலம்பன்(Jungle Babbler), குவாக்கர் சிலம்பன் (Quakker Babbler) போன்ற அனைத்து சிலம்பன் குழுவுக்கும் பொறுந்தும்.
                  குழு சிலம்பன் பூச்சி வேட்டையில் ஒரு ஆதாயம் என்னவெனில் ஏழு பறவைகளும் சூழ்ந்தும், குதித்தும், ஒரு சேர முன்னேறித் தேடும் போது நிறையப்பூச்சிகள் இடம் பெயறும். அப்போது லபக், லபக் என குழு உறுப்பினர் பிடித்துக்கொள்ளலாம். இவை இடம் பெயறும் போதெல்லாம் சப்திக்கிறது! ஏனெனில் ஒருவரையொருவர் பிரியாமல் இருக்கத்தான். குழு பிரியாமலிர்க்கத்தான். ஒரு குழு உறுப்பினர் இன்னொரு சிலம்பன் குழுவில் சேராது எனலாம். மனிதன் எப்படி வேண்டுமானாலும் கூட்டு வைத்துக்கொள்வான். 
                        இவை காகத்தைப்போல எதுவும் உண்ணும். என் வீட்டு முன்புள்ள விஜய விநாயகர் கோவில் படியில் வைக்கப்படும் சர்க்கரைப்பொங்கல், ஸ்தம்பத்தின் மீது வைக்கப்படும் சர்க்கரை அவல் என என் கண்பட பார்த்திருக்கிறேன். இவை தரையைக்கிளறி இரை தேடுவதால் தாழப்பறக்கும் விதமாக இறைவன் மெலிதான பலமற்ற சிறகுகளைத் தந்துள்ளார். ஒரு பர்லாங்கு கூட ஒரே சமயத்தில் பறக்க இயலாது. இவை ஏழு பேர் கொண்ட குழுவாக இருப்பினும் சுடலைக்குயில் (Pied crested Cuckoo)திருட்டுத்தனமாக தன் முட்டைகளை சிலம்பன் கூட்டிலிடுவது நல்ல தமாஷ்! இவை சுடலைக்குயில் சப் அடல்ட் எனத்தெரிந்தும் உணவு ஊட்டுவதை எனது இரண்டு கண்ணால் பார்த்துள்ளேன். தன் இனமாக இருப்பின் அடுத்த குழுவிடம் சண்டையில்லை. வெவ்வேறு குழுக்களாக வெவ்வேறு இடங்களில் இரை தேடுகின்றன். ஆனால் சிலம்பனில் பெரிய சாம்பல் சிலம்பன் குழு போல வேறு குழுவாக இருப்பின் விரட்டுகின்றன. இதை நான் என் இரண்டு கண்ணால் பார்த்தேன்.  
                             ஒரு முறை மீன்காரி மீனைச்சுத்தம் செய்யும் போது, அவளைச்சுற்றி நல்ல காகம், அண்டங்காகம்,பூனை, நாய், சிலம்பன் அமர்ந்திருந்தன. சிலம்பன் ,மீன் கூட உண்ணுமோ! பிறகு தான் தெரிந்தது, மீன் குடலை புழு என நினைத்து அமர்ந்திருந்தது உணர்ந்தேன். இன்னும் இவை எப்படி குளிக்கின்றன? இரவில் எங்கு தங்குகின்றன? சுடலைக்குயிலிடம் எப்படி ஏமாறுகிறது? மற்றும் கூடு பற்றிய தகவல்கள் அறிய எனது”Diary on the nesting behavior of Indian Bird” நீங்கள் படிக்கலாம்.

Monday, January 27, 2014

மாறுபட்ட கோணத்தில்
மயில்                 
Common Peafowl                                                        
(Pavo cristatus)                                                                  
              
சூலூர் அருகாமை ஆச்சான் குளத்தின் ஓரம் நடனம்

தைபூசத்திருநாளுக்கு இறகுகளை உதிர்த்த மயில்

            மயில் தேசியப்பறவை. மயில், ரயில், யானை எப்போதுமே வியப்பையும், மகிழ்வையும் எந்த வயதிலும் கொடுக்கக்கூடியவை. மயில் தோகை விரித்தாடினால் மழை வரும் என்பதெல்லாம் வாய் வழி, செவி வழி உலவும் கதை. ஆண் மயில் கழுத்து நீலநிறமும், பெண்மயில் கழுத்து பச்சை நிறமும் வெல்வட் போல நம்மை மயக்கும். ஆண்மயில் தோகை விரித்தாடும் போது நாம் மட்டும் மயங்குவதில்லை. விரிந்தாடி சிலிர்க்கும் தோகை அழகைப்பார்க்க தோகையற்ற பெண் மயில்கள் சில சுற்றி நின்று வேடிக்கை பார்த்து மயங்கும். நாமோ மயில் தோகைகளை இடுப்பில் ஏந்திக்கொண்டு கைகளால் தோகையைச்சிலிர்த்தாடும் மங்கையை திருவிழாவில் பார்க்க கூடுகிறோம்
                   பறவைகளில் ஆண் பறவைகளே அழகு படைத்தவை. இனிமையாக குரல் கொடுக்கவும் வல்லவை. அவைகள் பெண் பறவைகளைக் கவர இறைவன் கொடுத்தது. பரஸ்பரம் ஆணும்,பெண்ணும் கவரும் உத்திகள் மாநிடருக்கு மட்டும் உரியதல்ல. எல்லா உயிரினங்களுக்கும் இந்த யுக்தியை இறைவன் வைத்துள்ளார். மயில் இந்த கால கட்டத்தில் அதிகமாகிப்போக விவசாயிகள் தங்கள் காய்கறிகள் கொத்தப்படுகின்றன, என தாக்கீது கொடுக்கின்றனர். அவைகளுக்குரியதான அடவிய முட்காடுகள், இலையுதில் காடுகள், ஓடை, ஆறு கொண்ட மலை அடிவாரம் போன்றவற்றில் வாழக்கூடியவை. அவைகளுக்கு விவசாயிகளின் விளை நிலங்களில் உள்ள தக்காளி, கத்தரி, போன்ற காய்கறிகள் அவசியமில்லை. இவை உண்ணுவது பூச்சியினம், பாம்பு, தானியம், தாவரத் தண்டு மட்டுமே. அவைகளுக்குரிய வாழிடங்களைச்சிதைத்ததால் விளைநிலங்களுக்கு வந்து விட்டன. மலை அடிவாரம் வரை ஆக்கரமித்து விளைநிலமாக்குவது, வீட்டுமனைகள் இடுவது, இப்படியே மயில் வாழிடம் போல யானை வாழிடத்தையும் குறுக்கிக்கொண்டே போனால் அவை எங்கு செல்லும்
                    மாநிடருக்கு மட்டும் இந்த புவியுலகு சமைக்கப்படவில்லை. எல்லா உயிர் இனங்களும் சமமாகப்பங்கிட்டு ஒருவருக்கொருவர் இடையூறில்லாமல் வாழ்வது சுவர்க்கம். மனிதன் ஆற்றிவு கொண்டு பேராசைப்படாமல், அனைத்து உயிரினங்களையும் அரவணைத்து மகிழ வேண்டும். எந்த உயிரையும் விஷம் வைத்துக் கொல்வது இரக்கமற்ற தன்மை. இறைவனில் கருணையும், அன்பும் இருப்பதால் தான் நீவர் புவியில் உயிர் தப்பி இருக்கிறீர்கள். இறைவன் போல நீங்களும் இருக்கவேண்டும். மயில் பறப்பது ஒரு விந்தை. இரவில் உயரமான மரத்தில் அமர்ந்து உறங்கும்
            அழகன் முருகனின் வாகனம். இந்த வாகனமான மயில் கார்த்திகை, மார்கழியில் முருகப்பெருமானின் தைப்பூசக்காவடிக்காக தோகைகளை உதிர்த்துவிடும். மார்கழி முடிந்த தை மாதத்தில் பழனிக்கு காவடி எடுக்கும் பக்தர்கள் முட்காடுகளில் உதிர்ந்து கிடக்கும் இறகுகளை சேகரித்து காவடியை அலங்கரிப்பர். நானும் கூட சிறுவயதில் உதிர்ந்த மயில் இறகை பொறுக்கி ஒரு புத்தகத்தில் வைத்து அது குட்டி போடுமா எனக்காத்திருந்த காலமும் உண்டு. அது ஒரு ஆச்சர்யம் குமிழிடும் அழகிய கனா காலம். மயில் எனக்கு எப்போதும் வசிகரிக்கும் தேவதை. உங்களுக்கு அப்படி இல்லையா?

Friday, January 17, 2014


Kentish Plover flocks in Adayar estuary                         
(Charadrius alexandrinus)  

அடையார் முகத்துவாரத்தில் சிறிய உப்புகொத்திகள்

In flight a narrow white wing-bar and prominent white sides of tail distinctive-Dr. Salim Ali
முகத்துவாரத்தில் முகத்தை நீட்டிக்கொண்டு கட்டியிருக்கும் கட்டிடங்கள்

அழகானதொரு கோவா கடற்கரை மணல்வெளியில் ........... 
சிறிய உப்புக்கொத்தி-                                                                        
மணல் கோழி

சிறிய உப்புக்கொத்திகளை நான் கோவாவின் ஒரு அழகான கடற்கரையில் முதன்முதலாக சந்தித்தேன். இவை நமது நாட்டுப்பறவைகள். மணலில் விளையாடியும், புதைந்தும், குடுகுடு வென ஓடியும் அழகு காட்டும் குருவி (+) பரிமாணப்பறவைகள். இவற்றினை குழுவாகத்தான் பார்க்கலாம். பலர் இவற்றை மோதிரக்கோழி(Little Ringed Plover)யென சத்தியமாக எண்ணி விடுவார்கள். இரண்டுக்கும் வேறுபாடு; மோதிரக்கோழிக்கு கழுத்தில் இடைவெளியற்று,வளையமிட்ட கருப்பு, நெற்றியில் கருப்புப்பட்டை. இது இருந்தால் அது கழுத்தில் மோதிரமிட்ட கோழி என அறிந்து கொள்ளலாம்.
சிறிய உப்புக்கொத்திக்கு முன் நெற்றியில் வெண்கோடு,குறுகிய கண் தீற்றல், மார்பில் சிறு கருப்புப் பட்டை. இப்படி இருந்தால் அது மணல் கோழி. மலையாளத்தில் தமிழை விட பொறுத்தமான பெயர்கள் பறவைகளுக்கு சூட்டியுள்ளனர், என்பதைச் சொல்லத்தான் வேண்டும். தொந்தரவு என உணர்ந்தால் குழுவாகப்பறந்து மீண்டும் மணலில் அமருமிவை பறக்கும் போது சன்னமாக ட்ர்ர்ர் என இரு முறை கத்தி, ’எந்திரிங்கடா, பறப்போம், மனுஷன் எவனோ வர்ரான்’ எனப்பறப்பது ஒரு கவிதை. இருவிடலைப்பையன்கள் அப்படி அடையார் முகத்துவாரத்து மணல்வெளியில் நடந்து வந்த போது தான், பறந்து போகும் நிலை நிழற்ப்படம் சாத்தியமானது.
இவை மணல் குழிவை அலை தொடாதவாறு ஏற்படுத்தி முட்டைகளை வைக்கும். அல்லது காய்ந்த ஆற்றுப்டுகையில் தாவரங்களுக்கிடையே வைக்கும். முகத்துவாரத்தில் முகத்தை நீட்டிக்கொண்டு இந்த மாதிரி ராட்ச்சத்தனமாக(ன) கட்டிடம் கட்டலாமா? நீச்சலடிப்பவர், மீன்பிடிப்பவர், பிக்னிக் மக்களென பறவைகளை இறங்கவிடாமல் செய்தது பரிதாபம். சென்ற காலங்களில் நிறையப்பறவைகள் காணமுடிந்தது. இப்போது நான் பார்த்தது; Small green Bee-eater(1), Curlew(1), Common Sandpiper(1). Little Egrets (5) மட்டுமே. எனக்கு நிறைய ஏமாற்றம்.


Friday, January 10, 2014

Curlew
(Numenius arquata)                                                        Migrant Watch
குதிரை மலை கோட்டான்
           
இதற்கு குதிரை மலை கோட்டான் என்று ஏன் பெயர் வந்தது? என்று தெரியவில்லை. இப்பறவையும் நானும் முன்னமே புலிகாட் கடற்கரைப்பகுதியில் அறிமுகமாகி பல வருஷங்களாயிற்று. 5.01.2014 ஞாயிறு அடையார் முகத்துவாரத்தில் நானும் நண்பர் பாஸ்கரும் பார்த்து ரசித்தோம். அலகு வலைந்தும் நீளமாயும் உள்ளது இதன் தனித்துவம். இதன் மூக்கை ஸ்கேல் கொண்டு அளக்க அரை அடி எனப்பதிவு செய்திருக்கறார் Dr. சலிம்அலி. இது மிகவும் எச்சரிக்கையான பறவையாக இருப்பதால் புகைப்படம் எடுப்பது தூரத்திலிருந்து தான் முடியும். பறக்கும் போது கர்லு எனக்குரல் கொடுப்பதால், இதற்கு ஆங்கிலப்பெயர் Curlew எனவே வைத்து விட்டனரோ! இது என்னைப்பார்க்க வடக்கு ஐரோப்பா (அ) கிழக்கு சைபிரியாவிலிருந்து வந்திருக்க வேண்டும். இது குளிர்கால வருகையாளர். விஷா இல்லாமல் இப்பறவை எத்தனை காலமும் இங்கு தங்கலாம். ஆனால் இது மார்ச் மாதம் எனக்கு டாடா, பை….பை காட்டிவிடும். குழுவாக வரும். தனியாக இப்போது கண்டேன். ஆஹா! குதிரை மலை கோட்டான்கடல் அலை உள் வாங்கும் போது,அலை ஓரமாக ஓடியும், நடந்தும், நின்றும் கடல்நீர்அலைதிவளைகள் கொணறும் மிருது மணலில் லார்வா, நத்தை, ஆயஸ்டர் களைப் பிடித்து உண்ணும் அழகு நான்  சென்னையை விட்டு கோவை வந்தும் நினைவில் புரளுகிறது.